சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

புதன், ஆகஸ்ட் 25, 2010

அந்தமானும் உள்ளாட்சித்தேர்தலும்


அந்தமான், நிகோபார் தீவுகளில் அடுத்த மாதம் 19ம் தேதி உள்ளாட்சித்தேர்தல் நடைபெற உள்ளது. நகராட்சி மற்றும் பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் இம்மாதம் 27ம் தேதி.இன்று பெரும்பாலான வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். அந்தமான் ஒரு குட்டி இந்தியா என்பதால் மாநிலக்கட்சிகள், தேசியக்கட்சிகள் இதோடு சுயேட்சை வேட்பாளர்கள் என்று ஒரு பெரிய பட்டியல். முன்னர் வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்வது இவ்வளவு பிரபலமாக இருந்ததில்லை. தீவு மக்களும் முக்கிய பூமி மக்களைப் பார்த்து கற்றுக்கொண்டுவிட்டார்கள். கொடிகளும், தொடர் ஊர்வலம் போன ஊர்திகளும், கோஷங்களும், போக்குவரத்தை பாதித்தன.திறந்த வேனில் வேட்பாளர்கள் மாலையணிந்து கைகளைக்கூப்பியபடி. 19ம் தேதி வியாழன் அன்று காமன் வெல்த் விளையாட்டுப்போட்டிக்கான ஜோதி ஊர்வலத்தை ஒட்டி "குயின்'ஸ் பேட்டன் ரிலே" இருந்தது. ஒத்திகை ஒரு நாள், உண்மையில் ஒரு நாள் என்று பொதுமக்களை காவல் துறை இந்தப்பக்கம், அந்தப்பக்கம் என்று இரண்டு நாள் விரட்டிக்கொண்டிருந்தார்கள். இன்று மீண்டும் இப்படி. அமைதியான தீவுகள் என்று பெயர் வாங்கிய பகுதியில் இன்று தெய்வத்தின் பேரால், அரசியலின் பேரால் ஊர்வலங்களும், கோஷங்களும். எப்படியோ அமைதியை பாதிக்காமல் இருந்தால் சரி.


அந்தமானில் 69 பஞ்சாயத்துகளுக்கும், நகராட்சியில் 18 உறுப்பினர்களுக்குமான தேர்தல். போன முறை நகராட்சி உறுப்பினர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நகராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலர் தங்கள் பகுதி மக்களுக்கு வீடுவீடாகச்சென்று அன்பளிப்புகளை (லஞ்சம்?) வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வார்டில் அனைத்து வீட்டிலும் பெண்களுக்கு புடவை அன்பளிப்பாக வழங்கினார்கள்.சிலர் ஓட்டை துருப்புச்சீட்டாக வைத்து தனது வீடு வரை சிமெண்ட் சாலை போட்டுக்கொள்வது, சுவர் எழுப்பிக்கொள்வது,குடிநீர்க்குழாய் இணைப்பு, அலுவலகங்களில் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வது, மானியக்கடனுதவிகள் இப்படி காரியம் சாதித்துக்கொள்வதும் உண்டு.


பஞ்சாயத்து தலைவர்கள் தங்கள் பகுதிகளில் குடிதண்ணீர், நல்ல சாலை,போக்குவரத்து வசதி, அரசுக்கடனுதவி போன்றவற்றைத் தங்கள் மக்களுக்கு செய்து கொடுத்திருக்கிறார்கள். அதனால் தீவு கிராமப்பகுதிகள் குறுகிய காலத்தில் விரைந்து முன்னேறியுள்ளது. அதுவரை பாராட்டலாம். எந்தக் கட்சியில் நின்று ஜெயித்தாலும் சரி கடைசியில் தமிழர்கள் என்ற புள்ளியில் ஒன்று சேர்ந்து கொள்வார்கள் இவர்கள். எப்படியோ இவர்கள் தீவு முன்னேற உழைத்தால் நம் ஓட்டு தமிழருக்கே. ����

செவ்வாய், ஆகஸ்ட் 24, 2010

தென்மேற்கு பருவமழையும் அந்தமானும்



அந்தமான், நிக்கோபார் தீவுகள், தென்மேற்குப் பருவமழையில் நனைந்து கொண்டிருக்கிறது.அந்தமான் மழையையும், அந்தமான் பெண்களையும் நம்ப முடியாது என்ற இந்த மொழி, மழைக்காலத்தில் நிறைய மக்களின் வாயில் புகுந்து புறப்பட்டு வரும். இந்த மொழியின் முதல் பாதியை ரசிக்க முடிந்த அளவு, மறுபாதியை ரசிக்க முடியாது.காலை கடும் வெயில் என்று குடையின்றி, கடைத்தெரு போனால் நனைந்து கொண்டே வீடு வரும்படி இருக்கும்.அடைமழை, காற்றுடன் நல்ல மழை பொழிந்தாலும், இது மலைப்பிரதேசம் என்பதால் வெள்ளப்பெருக்கு கிடையாது.சாலைகள் கழுவி விட்டது போல் சுத்தமாக இருக்கும். கோடையில் பட்டுக்கிடந்த மரம்,செடி,கொடிகள் பசேலென்று தளிர் விட்டு ஊரே பசுமையாய் இருக்கும். பனிபடர்ந்த மலைமுகடுகள் பார்வைக்கு சுகமாய் இருக்கும். மழை பழகிய மக்கள் பொழியும் மழையைப் பொருட்படுத்தாது தங்கள் வேலையை செய்து கொண்டிருப்பார்கள்.


இந்த மழைக்காலத்தில் ஒவ்வொரு வருடமும் ஒரு வைரஸ் காய்ச்சல் மக்களைப் படுத்தி எடுக்கும். தீவுகளில் டெங்கு மாதம், மலேரியா மாதம் என்று வரிசையாக அனுசரிக்கப்பட்டு இப்போது தான் கொஞ்சம் ஆசுவாசப்பெருமூச்சு விடுகிறோம். மழைக்காலத்தில் மஞ்சள் காமாலை சர்வ சாதாரணம்.மஞ்சள் காமாலைக்கு அரசு மருத்துவமனையில் நவீன மருந்துகள் காத்துக்கொண்டிருக்க, நம் மக்களோ மந்திரங்களை நம்பி அவர்களை சரணடைவார்கள். அரை லிட்டர் பாலையும், ஏதோ ஒரு வேரையும் வைத்து தலையில் தேய்க்க மஞ்சளாக வடியும். மூன்று நாள் தேய்த்து குணமாகிவிடும் என்று அனுப்புவார்கள்.சில புத்திசாலிகள் மருந்து, பால் தேய்ப்பது,கீழாநெல்லி அரைத்துக்குடிப்பது என்று அனைத்தையும் முயற்சிப்பார்கள். இங்கு மழைக்காலம் மக்களுக்கு சோதனைக்காலம் தான்.சிலருக்கு மாரிக்காலம், மலேரியாக்காலம் ஆகிவிடுகிறது. கைக்குழந்தைகள் வைத்திருப்போரின் பாடு இன்னும் அதிகம்.

சிக்குன் குனியா வந்து ஒரு சுற்று சுற்றிப் போய், திரும்பி வந்து, முதல் சுற்றில் தப்பித்தவர்களை இந்த முறை ஒரு கை பார்த்தது. ஒரு முறை சிக்குன் குனியா வந்தவர்களுக்கு மறுபடி வராது, அது தான் அவர்களுக்கு நோய்த்தடுப்பு என்று மருத்துவர்கள் கூற, சிக்குன் குனியா அறிகுறிகளுடன், இந்த முறை வேறு ஒரு காய்ச்சல் எங்களை வாட்டி எடுத்தது.சிலருக்கு மூக்கில் கருப்பு படர்ந்து, சிலருக்கு முகத்தில் கருப்பு விழுந்தது. மருத்துவர்கள் இதற்கு ,"பட்டர் ஃப்ளை ஸ்கேர்" என்றார்கள்.எனக்கு இடுப்பில் நெருப்பு பட்டது போல் எரிய, சிலருக்கு பட்டர் ஃப்ளை ஸ்கேர் இடுப்பு, முதுகிலும் வரலாமாம். சிக்குன் குனியா வைரஸானது, வேறு ஒரு வைரஸாக மாறி வந்திருக்கலாம் என்கிறார்கள்.இதைக்கேட்டதும் எனக்கு, மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் "கற்றதும் பெற்றதும்" கட்டுரையில் வைரஸ் குறித்துப்படித்தது தான் ஞாபகம் வந்தது." வைரஸ் தன்னை மாற்றிக்கொள்ளும் வேகம் சாதாரண செல்லை விட மிக அதிகம்.ஒரு செல் ரெட்டிப்பாகும் போது படியெடுப்பதில் நூறு கோடி முறைக்கு ஒரு தடவை தான் பிழை ஏற்படும். வைரஸ் கிருமியின் இரட்டிப்பில் இரண்டாயிரத்திற்கு ஒரு முறை பிழை ஏற்பட்டு புதிய வைரஸ் வந்து விடும். இதனால் மனித இனம் புதுபுது வைரஸ்களை சந்திக்க வேண்டியுள்ளது" ஆக அறிவியல் ஆயிரம் சொன்னாலும், வைரஸ் காய்ச்சல் ஒரு பாடு படுத்திப்போய்விட்டது.


சிதம்பரம் அண்ணாமலை கல்லூரியில் டீனாக பதவி உயர்வு பெற்று, அந்தமானில் தொலைத்தொடர்பு கல்வித்துறையை பார்வையிட வந்தவர், இப்படியான ஒரு காய்ச்சலில் சிக்க, அவரை சில பல லட்சங்கள் செலவழிப்பில் சென்னை அப்பல்லோ மருத்துவர்கள் மீட்டெடுத்திருக்கிறார்கள்.அவர் எனது நெருங்கிய சினேகிதியின் சித்தப்பா. மன உளைச்சலில் சிக்கிய அவர்கள் குடும்பத்தினர் மீண்டு வந்தது தனிக்கதை.

கூரையில் வேய்ந்திருக்கும் தகரம் அதிர மழை பொழியும் போது கூரையில் குதிரைகளின் குழம்படிச்சத்தம்.நடு இரவிலும் மழை பொழியும் போது விழிப்பு வந்து விடும்.ஆனாலும் சுகமாயிருக்கும். அடை மழை பெய்தால், தமிழ்நாட்டில் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்படுமே அப்படி இங்கு கிடையாது. அடாது மழை விடாது பெய்தாலும் சின்னஞ்சிறார்களுக்கும் பள்ளி உண்டு.இப்போதெல்லாம் குஷி பட நாயகி பாணியில் யாராவது கைகளை விரித்து மழையில் நனைந்து மழையை ரசித்தால், ஐயோ பாவம் என்ன காய்ச்சல் வரப்போகுதோ என்று நினைத்தாலும் எனக்கு மழையில் நனையப்பிடிக்கும்.வைத்தியத்துக்கு காசா பணமா? இருக்கவே இருக்கு எங்க ஊர் ஜி.பி.பந்த் அரசு பொது மருத்துவமனை.���