சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

புதன், அக்டோபர் 19, 2011

குருவே சரணம்.


கல்வி மனிதனை மாமனிதன் ஆக்குகிறது. வையத்தலைமை கொள்ள கல்வி ஒரு கருவி என்பதை யாரும் மறுக்க முடியாது. அப்படிப்பட்ட கல்வி போதிப்பவரை நமது முன்னோர்கள் தெய்வத்திற்கும் மேலான இடத்தில் வைத்துப் போற்றுகின்றனர். குருகுலக்கல்வி, திண்ணைப் பள்ளிக்கூடம் என்பவற்றைக் கடந்து கல்வி நிறுவனங்கள் அரசாலேயே தோற்றுவிக்கப்பட்டு, இலவசக்கல்வி போதிக்கும் காலம் வந்துவிட்டது. இருப்பினும், தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தி படிக்க வைத்தால் தான் கல்வி உயர்ந்ததாக இருக்கும் என்ற உணர்வு பெற்றோரிடம் பரவி வருகிறது. இன்று கல்வி குறித்த அதீத விழிப்புணர்வு பெற்றோர்களிடம் வளர்ந்துவிட்டது.

 நாடு முழுவதிலும் அரசுப் பள்ளிகளில் தன்னலமற்ற தொண்டாற்றும் ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு வருடம் தோறும் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில் தீவுகளில் தன்னலமற்ற தொண்டாற்றிய தமிழ் ஆசிரியப்பெருமக்களில், பெரும்பாலானோர், இந்த தேசிய நல்லாசிரியர் விருதினைப் பெற்றுள்ளார்கள். எனக்குத்தெரிந்து திரு. சி. சக்திவேல் அவர்கள், திரு லெட்சுமி நாராயணன் அவர்கள், திருமதி சாந்தா அவர்கள், திரு வேம்பையன் அவர்கள். அந்த வரிசையில் 2010ம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருது தீவுகளின் இரண்டு ஆசிரியர் பெருமக்களுக்கு வழங்கப்பெற்றுள்ளது. ஒருவர் திருமதி கமலா தோத்தாத்ரி அவர்கள். நெல்லையைப் பூர்வீகமாகக் கொண்டவர். இன்னொருவர் நிக்கோபார் பழங்குடியினத்தைச் சேர்ந்த திரு. ஹில்லாரி அவர்கள். இவர் உள் தீவுகளில் ஒன்றான கட்சால் என்னுமிடத்தில் அரசுப்பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்.


கடந்த செப். மாதம் 5ம் நாள் ஆசிரியர் தினத்தன்று இந்தியக்குடியரசுத்தலைவர் திருமதி. பிரதீபா பாட்டீல் அவர்களது திருக்கரத்தில் விருது பெற்று திரும்பியிருக்கிறார்கள்.

திருமதி. கமலா அம்மா அவர்களிடம் அந்தமான் அகில இந்திய வானொலியின் தமிழ்ப்பிரிவிற்கென நேர்முகம் கண்டோம்.

சாந்தி: வணக்கம் மேடம். தேசிய நல்லாசிரியர் விருது பெற்றமைக்கு தமிழமுதம் குடும்பத்தார் மற்றும் தீவு வாழ் தமிழ்ப்பெருமக்களின் சார்பில் மனம் நிறைந்த வாழ்த்துகள். தங்களை இந்த நிலைக்கு உயர்த்தியது எது? யார்? என்பதைக் கொஞ்சம் நமது நேயர்களுக்குச் சொல்லுங்களேன்.

திருமதி கமலா அம்மா: வணக்கம். எல்லோருக்கும் மிக்க நன்றி! எனது இந்த விருதிற்கு முக்கிய காரணம் நான் பணிபுரிந்த பள்ளி முதல்வர்கள், என்னுடன் பணிபுரிந்த சகாக்கள், மாணவக்கண்மணிகள் ஆகியோர் மற்றும், எனக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகள்.

என் மாணவர்களை படிப்பில் அதிக கவனம் எடுப்பதுடன் மற்ற செயல்பாடுகளிலும் ஈடுபாடு காட்டச்செய்வேன். எழுத்தில் பிழை இருப்பின் மறு பிழை திருத்தம் செய்து பிழையின்றி எழுதும் வரை விடமாட்டேன். கவிதை, கட்டுரை எழுதவும் ஊக்கப்படுத்தி, போட்டிகளில் ஈடுபடச்செய்வேன். அதனால் என் மாணவர்கள் என்னை மேடம் என்று அழைப்பதைவிட, அம்மா என்று அழைப்பதையே விரும்புவார்கள். எந்த வேலை தந்தாலும் என்னால் முடியாது என்று ஒரு போதும் சொல்லமாட்டேன். என் மாணவர்களை வல்லவர்களாக இருப்பதை விட நல்லவர்களாக இருங்கள் என்று கூறுவேன். 

எந்த வேலையும் கிடைக்காமல் இந்தப்பணியை ஏற்றுக்கொள்ளவில்லை. எட்டாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து எனக்கு ஆசிரியை ஆகவேண்டும் என்ற ஆசை எனக்குள் கனன்றூ கொண்டிருந்தது. எனது 33 வருட ஆசிரிய சேவையில் என்னிடம் பயின்ற மாணவக்கண்மணிகள்,  இன்று இந்தத் தீவு முழுதும்  பெரிய பதவிகளில் இருப்பது பெருமைக்குரிய விசயம். இவையெல்லாம் காரணிகளாக இருக்கலாம்.

சாந்தி: விருது பெறூம் போது இருந்த உங்களது மன நிலை, அந்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொள்ளுங்களேன்.

திருமதி கமலா அம்மா : எங்களை தலை நகர் புது தில்லியின் ஒரு அருமையான தங்கும் விடுதியில் தங்க (ராயல் பேலஸ்) ஏற்பாடு செய்திருந்தார்கள். உண்மையிலேயே ராஜ உபச்சாரம்.  நான் பெருமையாக உணர்ந்த உன்னத தருணம் அது. என்னுடன் என் கணவரும் வந்திருந்தார். மறு நாள் காலை பிரதமர் இல்லத்தில் காலை சிற்றுண்டி. பின் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். அன்று விருது வழங்கும் நிகழ்ச்சியின் ஒத்திகை இருந்தது. அன்று மாண்பு மிகு அமைச்சர் கபில் சிபல் அவர்களுடன் மதிய உணவு விருந்து உண்டோம். மறு நாள் விருது வழங்கும் நிகழ்ச்சி. ஏக பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் ஒருவர் வந்து ஒரு அழைப்பிதழை என்னிடம் நீட்டினார். அது நல்லாசிரியர் விருது பெற்ற தமிழ் பெருமக்கள் அனைவரையும் கௌரவப்படுத்தும் விழா ஒன்றை டெல்லி தமிழ்ச்சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்ததற்கான அழைப்பிதழ் அது. எப்படி ஐயா இவ்வளவு கட்டுப்பாடுகளுக்குமிடையிலும் உள்ளே நுழைய முடிந்தது உங்களால்? என்று வியப்புடன் கேட்ட போது அது தான் டெல்லி தமிழ்ச்சங்கம் என்று புன்னகைத்தார். அதன் பிறகு  நமது அருமையான குடியரசுத்தலைவர் மாண்பு மிகு திருமதி பிரதீபா பாட்டில் அவர்கள் விருது வழங்க பெற்றுக்கொண்ட போது ஜென்ம சாபல்யமாக, எனது வாழ் நாள் சாதனையாக உணர்ந்தேன். அன்று மதியம் நமது குடியரசு தலைவர் அவர்களுடன் குடியரசு தலைவர் மாளிகையில் அருமையான விருந்து உண்டோம்.




சாந்தி: சென்ற இடமெல்லாம் சிறப்பு சேர்ப்பர் தமிழர் என்பதற்கு டெல்லி தமிழ்ச்சங்கமும் சான்று நீங்கள் ஒரு நல்ல ஆசிரியையாக நிரூபித்துள்ளீர்கள் பொதுவாக நமது சமூகத்தில் பெண் என்பவள் ஒரு  நல்ல மனைவியாக,  நல்ல தாயாக, நல்ல இல்லத்தரசியாக, இருக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. இந்த அத்தனை பொறுப்பையும் நீங்கள் எப்படி சமன் செய்து, முன்னெடுத்து செல்கிறீர்கள் என்பதை சொல்லுங்கள். உங்களின் பதில் இளைய தலைமுறை பெண்கள் பலருக்கும் உதவியாக இருக்கும்.

திருமதி கமலா அம்மா: என் குழந்தைகள் சொல்வார்கள். நீங்கள் நல்ல ஆசிரியை. ஆனால் நல்ல அம்மா இல்லை என்று. பள்ளி வேலைகள், வீட்டு வேலைகள் இவற்றை செய்து முடித்ததும் களைப்பில் அவர்கள் ஏதாவது கேட்டால் எரிந்து விழுந்திருக்கிறேன். அது தவறு என்று இன்று உணர்கிறேன். இளைய தலைமுறையினர் இந்த தவறுகள் நிகழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.கூடுதலாக உழையுங்கள். ஆரோக்கியம் பேணுங்கள். பொறுமையாய் இருங்கள். முக்கியமாக குடும்பத்தினரிடமும், குழந்தைகளிடமும்.

சாந்தி: நன்றி மேடம். தங்களது நேர்முகம் மகிழ்ச்சியாகவும், நெகிழ்ச்சியாகவும் இருந்தது. கேட்கும் மகளீருக்கு தன்னம்பிக்கையைத் தருவதாகவும் இருந்தது. இன்னும் பல விருதுகள் பெற்று நீடு வாழ பிரார்த்தனைகளும், வாழ்த்துகளும்.

திருமதி கமலா அம்மா: மிக்க நன்றி.

திருமதி கமலா அம்மா அவர்களின் கணவர் திரு. தோத்தாத்ரி அவர்கள் பாரத ஸ்டேட் வங்கியின் தூத்துக்குடி கிளை மூத்த மேலாளர். மகள், மாப்பிள்ளை ஆஸ்திரேலியாவில் பணிபுரிகின்றனர். மகன் பால் பதனிடும் தொழில் நுட்பத்தில் பட்டம் பெற்று மேற்படிப்பிற்காக நியுசிலாந்து நாட்டில் வசித்து வருகிறார். தீவுகளில் பணியின் பொருட்டு தங்கியிருக்கும் இவர் தமிழர் சங்கத்தின் இலக்கியமன்ற செயல் பாடுகளில் துணை நிற்கும் உறுப்பினர், பேச்சாளர், தமிழர் சங்கத்தின் “மதியொளி” விருது பெற்ற எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது.