சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

சனி, பிப்ரவரி 09, 2013

யாதுமாகி நின்றவள்


 (போர்ட்பிளேயர் வானொலியின் மகளிர் மட்டும் நிகழ்ச்சிக்காக (05.02.13) எழுதி வழங்கியது)

ஆதியில்
பெண்ணைப் படைக்க பிரமன்
பெரு முயற்சி செய்தான்.
நட்சத்திரங்களைக் கண்களாக
சூரியனைத் திலகமாக
மின்னல் கொடியை உடலாக
ரசித்து ரசித்து ஆதிசக்தியின் அம்சமெனப்படைத்தான்
இவள்
அன்பின் நதியானவள், அழிக்கும் கடலாவாள்
உயிர் வளர்க்கும் தென்றலானவள், சீறும் புயலாவாள்
தீப ஒளியானவள், பெரு நெருப்பாவாள் – எச்சரித்து
சிறகுகள் தந்து தேவதையாய் உலவ விட்டான்.

குளிர் மலராய், உயர் மலையாய், சிறுமை கண்டு
குமுறும் எரிமலையாய், குலவும் பல்லுயிர் பெருக்கி
இங்கு யாதுமாகி நின்றாள்

உயிர்ப்பால் தரும் நீரானவள்
நம்மைச்சுமக்கும் நிலமானவள்
சுவாசம் தரும் காற்றானவள்
குடை நிழலில் காக்கும் ஆகாயப்பெருவெளியாகி
இல்லம் உள்ளம் இரண்டின் இருளகற்றும் ஒளியானவள்
பஞ்சபூதம் அவளாகி
மானுடம் வளர்க்கும் விதையாகி
தாயாகி, தாய்க்கும் தாயாகி யாதுமாகி நின்றாள்

கற்புடைப்பெண் முன்னால்
மும்மூர்த்திகளும் மதலைகள்
ஆக்கலும் பெண், அழித்தலும் பெண்ணாகி, தவறான
மோகம் வளர்த்ததால் கல்லாய்க் கிடந்ததும் பெண்
உயர்வுக்கும் பெண், தாழ்வுக்கும் பெண்ணாகி
குலம் தழைக்க, கிளை பெருக்கி யாதுமாகி நின்றாள்

மண் மலையாகி, மலை கடலாகி
கடல் நிலமாகி யுகங்கள் மாறிய பொழுதொன்றில்
அழிக்க, அழிக்கப் பெருகிய அசுரப்படைகள்
அதர்மம் பெருக்கும் ஆதிக்கவாதிகள்
அவளின் இறக்கைகளைப் பிய்த்தெறிந்து
நட்சத்திரங்களைப் பறித்துக்கொண்டார்கள்
மானுட விருட்சத்தின் ஆணிவேரானவளை
சிறையில் அடைத்து புழுங்கித் தவிக்கவிட
அக்கினிக்குஞ்சுகள் அவளை மீட்டன.
அவளின் சக்திகளை நினைவூட்டி பெண்மை வாழ்கவென கூத்தாடின
வாசல் திறந்து பொது வெளிகாட்டி
எங்கெங்கும் சக்தியென எழுச்சிக்கவி பாடின
அடுக்களை விட்டு அரங்கம் பல கண்டு
புது யுகம் காணப்புறப்பட்டாள்
புது யுகம் காணப் புறப்பட்ட அவளை
வன்கொடுமை பயம் காட்டி
வெஞ்சிறை அடைக்க சூழ்ச்சி நடந்தால்…….
அவள்
அதர்மம் அழிக்கும் அந்தமில் துர்க்கையாவாள்
கொங்கை திருகி எரிந்த கண்ணகியின் சினம்
மதுரையை எரித்தது போதும்
அவளின் தாய்மையின் அங்கத்தில் சுரக்கும் உயிர்ப்பால்
வயிறுகளை மட்டுமல்ல
வறண்ட மனங்களையும் ஈரமாக்கட்டும்
இல்லையெனில்
பெண்ணை மதிக்காத இங்கே
பெரும் பிரளயம் உருவாகும்.