விகடனுக்கு நன்றிகள் கோடி!
டாலர் கனவுகளில் மூழ்கிக்கிடக்கிறார்கள் இளைய சமுதாயத்தின் பெரும்பான்மையானோர். உலகளாவிய வர்த்தகம், உலகமயமாக்கப்படுதல், அன்னியநாட்டில் வேலைவாய்ப்பு இவை இன்று அதிகம் பேசப்படும், இலக்காக நிர்னயிக்கப்படும் விசயங்கள் ஆகிவிட்டன.இளையோரின் ஆசையும் குறிக்கோளும் இதுதான். ஆனால் அவற்றை நிறைவேற்றிகொள்ள எல்லோருக்கும் சமவாய்ப்புக்கள் உள்ளதா? என்றால் இல்லை.ஆசைகள் நிறைவேற தகுதிகளை உயர்த்திக்கொள்ள வேண்டும்.
இன்று எங்கும் தமிழ்,எதிலும் தமிழ் என்று சொல்லி தமிழைத்தவிர மற்ற மொழிகளைத் தமிழர்கள் கற்க வழியில்லாத ஒரு சூழலை நம் அரசியல்வாதிகள் உருவாக்கியுள்ளனர். அந்த அரசியல்வாதிகளின் வாரிசுகள் சரளமாக ஆங்கிலத்திலும் இந்தியிலும் நேர்காணல் தருகிறார்களே! எப்படி? நகரவாசிகளுக்கு தனிவகுப்புகள் மூலம் பிறமொழி கற்க வாய்ப்புகள் உள்ளன. ஆனால் கிராமப்புற இளைஞர்களுக்கு தமிழைத்தவிர வேற்றுமொழி கற்கும் வாய்ப்புகள் இல்லவே இல்லை. கல்லூரிப்பாடங்களைத் தமிழ் படுத்தியதில் தமிழ் இளைஞர்களை பெரிய வணிக நிறுவனங்களில் எழுத்தர் வேலைக்குக் கூட தகுதியற்றவர்களாய் ஆக்கியிருக்கும் தமிழக அரசை என்ன சொல்வது?
தமிழ் நம் தாய் மொழி. தமிழ் மிகப்பழமையான உயர் தனிச்செம்மொழி. உயர்ந்த இலக்கியப்பிண்ணனி கொண்ட மொழி. இதில் இரு வேறு கருத்து கிடையாது.ஆனால் தமிழை மட்டுமே கற்றால் தான் தாய் மொழிப்பற்று என்றோ, அப்போதுதான் தமிழ் வளரும் என்பதோ ஏற்றுக்கொள்ளக்கூடியதா? தனியார் பள்ளிகளில் இந்தி,ஆங்கிலம் சொல்லிக்கொடுக்கிறார்கள். ஆனால் எழுதவும், படிக்கவும் மட்டுமே சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆசிரியர்களுக்கே பேசத் தெரியாது.தமிழை மட்டுமே கற்பதால் எங்கு சென்றாலும் நாம் தனித்து விடப்படுவோம். அந்தமானுக்கு வருகை தரும் மற்ற மாநில மக்கள் அனைவரும் அரசு வேலை பெற்று விட நம்மவர்கள் கடைகளிலும், கடைநிலைத் தொழிலாளர்களாகவும் தான் ஆக வேண்டியுள்ளது.
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் எங்கும் காணேன் என்று பாடிய சூரியக்கவிஞனுக்கு எத்தனை மொழிகள் தெரியும்? மத்திய அரசின் தேர்வாணையம் நடத்திய தேர்வில் வெற்றி பெற்றும் இந்தி மொழி எழுதப்படிக்கத் தெரியாத ஒரே காரணதிற்காகவே அரசு வேலை இழந்தவர்களில் ஒருத்தி என்ற தகுதி ஒன்றே என்னை இப்படி ஒரு கட்டுரை எழுதத் தூண்டியது. தமிழ் இளைஞர்களே! இந்தியாவை ஆள இந்தி மொழியையும், உலகை ஆள ஆங்கில மொழியையும் கற்றுத் தேர்ச்சி பெறுங்கள். ஓட்டு வாங்க அரசியல்வாதிகள் வரும் போது உங்களின் கோரிக்கைகளுள் ஒன்றாக இதையும் முன் வையுங்கள். அப்புறமென்ன? உலகின் எந்த மூலைக்கும் உங்களின் கரங்கள் ஓங்கும்
விகடனுக்கு நன்றிகள் கோடி!
எனது இந்தக்கட்டுரையை யூத்ஃபுல் விகடன் மின்னிதழில் வெளியிட்ட விகடனுக்கு நன்றிகள் கோடி
எனது இந்தக்கட்டுரையை யூத்ஃபுல் விகடன் மின்னிதழில் வெளியிட்ட விகடனுக்கு நன்றிகள் கோடி