சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

செவ்வாய், ஜூன் 29, 2010

வெளியில் தெரியாத வேஷங்கள்

உன் கோபங்களை பூக்களால்
எண்ணி எடுத்து
கூடையில் கொட்டிவைத்தேன்.
நீயோ
அதீதப்பிரியங்களின் எண்ணிக்கை என்றாய்.

உன் இதழ்கள் உதிர்த்த குறைகளை சோழிகளால்
எண்ணி எடுத்து
பல்லாங்குழிகளை நிறைத்து வைத்தேன்.
நீயோ
நிறைந்த அன்பின் அடையாளம் என்றாய்.

என் கொஞ்சலில் ஆரம்பிக்கும்
உன்னோடான என் உரையாடல்
ஒரு நாளும் முடிந்ததில்லை சுபமாய்.

எங்காவது கூட்டத்தில் பிரிந்து போனால்
எப்படி என்னை மீட்டெடுப்பாய்
என் முகமே பழக்கமற்ற நீ!

உன் புஜங்களைப் பற்றி
நிலவில் உலவி
நட்சத்திரங்களைத் தடவி
கண் மூடி கனவுகளில் சிறகடிக்க
உதறி எழும் உன் நிராகரிப்பில்
உலர்ந்து வெளிறும் என் கனவுகளின் வண்ணம்

இளமையைச் செலவழித்து
திரவியம் தேடும் உன் விழிகளில்
நரைத்துப் போயிருந்தது எனக்கான உன் அன்பு
உன் தேனிலவு அன்பின் தாக்கத்தில்
கானல் நதிக்குக் கரை கட்டிக் காத்திருக்கிறேன்.

என் வலிகளையும், வருத்தங்களையும்
உன் அன்பில் கரைக்கும் கனவுகளுடன் நான்.
மூளை அணுக்களில்,
ஞாபக மடிப்புகளில்,
கோடிகளைக் குறிவைத்து நீ
யாருமறியாத நமது வேறுபாடுகளை மறைத்து
அழுத்தமான அலங்காரங்களுடன் உன் பட்டத்து மகிஷியாய்....

1 கருத்துகள்:

Katz சொன்னது…

உணர்வு பூர்வமான கவிதை