சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

செவ்வாய், செப்டம்பர் 21, 2010

நகராத வாழ்க்கை

பூக்களாய் இருக்கிறது வனமெங்கும்.
கன்னங்களில் விரல் பதித்து வியப்பை சிந்துகிறேன்.
பாதங்கள் பதிக்கும் ஒற்றையடிப்பாதையில் நெருஞ்சி முட்கள்
குதிகால் உயர்த்தியும்
முன் கால் ஊன்றியும் நடை பழகுகிறேன்.
வறட்டியும், வைக்கோலுமாய் வாழ்ந்த நாட்களில்
உடலின் ரத்தமெல்லாம் வியர்வையாய் வடிய
நாகரீகத்தொட்டில் நகரம் சென்றுவிட்டால்
தாலாட்டு இன்றி உறக்கம் தழுவும் கனவுகளோடு

இங்கோ
தலையணைக்கடியில் நெருஞ்சியும்
கனவுகளில் வனத்தின் பூக்களும்.

எதிரிகள் என்றால் முகம் திருப்பலாம்
நண்பர்கள் என்றால் கை குலுக்கலாம்
உறவுகள் என்றால் புன்னகை சிந்தலாம்.
ஒரு காலம் உறவாய் இருந்து
உணர்வுகளைப்பகிரும் நட்பாய் மாறி
எதிரியாய் நிறம் மாறியவருடன் என்ன செய்யலாம்?

நானும் கற்றுக்கொள்கிறேன்.
எதிரியின் முகம் பார்த்து
மௌனமாய்ப்புன்னகையும்
மனதில் குரோதமும் கொள்ள.

புரியாத நாகரீகங்கள்.
படியாத மனோபாவங்கள்
புது வாழ்க்கை கற்றுத்தரப்படுகிறது.
மனம் ஒன்றாத போதும்
உயிர் வாழ்தலுக்காய் சரிசெய்தலும் சமன் செய்தலுமாய்
வெறுமையாய் நாட்கள் நகர
வாழ்க்கை மட்டும் வறட்டியோடும் வைக்கோலோடும் நின்று போயிருந்தது.

5 கருத்துகள்:

Thekkikattan|தெகா சொன்னது…

ம்ம்ம் அருமைங்க!

//நானும் கற்றுக்கொள்கிறேன்.
எதிரியின் முகம் பார்த்து
மௌனமாய்ப்புன்னகையும்
மனதில் குரோதமும் கொள்ள.

புரியாத நாகரீகங்கள்.//

சமீபத்தில எனக்கும் இப்படியான தேர்வு தீட்டல்கள் வாழ்வுச் சாலையில் நடந்தேறுவதாக எண்ணச் செய்தது. ஆனால், போலியாக மாறுவதில் உள்ள இழப்புகள் அதிகம் என்பதாலே வறட்டியோடும் வைக்கோலோடும் நின்று போவதில் சுயமிருப்பதாகப் படுகிறது. :)

கிளியனூர் இஸ்மத் சொன்னது…

மனசுல உள்ளதை இறக்கிட்டீங்க...மௌன பாத்திரத்தில் சுமையை ஏற்றிக் கொள்ளாதீர்கள்..

அனுபவக் கவிதையாக அருமையாக இருக்கிறது...என்றும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.

Thenammai Lakshmanan சொன்னது…

எல்லாமே சர்வைவல் ஆஃப் ஃபிட்டஸ்ட்தான் ஷாந்தி..:))

அன்புடன் அருணா சொன்னது…

அருமை!அருமை!!

முல்லை அமுதன் சொன்னது…

nalla sinthanai.
vaazhthukkal.
mullaiamuthan
காற்றுவெளி இதழ்