சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

சனி, ஜனவரி 08, 2011

அந்தமானில் தீவுச்சுற்றுலா விழா


வலையுலக உடன் பிறப்புகள் அனைவருக்கும் (தாமதமான) 2011ம் ஆண்டின் புத்தாண்டு நல்வாழ்த்துகள். ஒவ்வொருவரும் புத்தாண்டில் நிறைய சபதம் எடுப்பார்கள். குறிக்கோள், இலக்குகள் குறிப்பார்கள்.எனக்கு அந்தப் பழக்கம் கிடையாது இது வரை.ஆனால் இந்த வருடம், வலைத்தளத்தில் முடிந்தவரை அடிக்கடி பதிவுகள் இடவேண்டும் என்று சபதம் எடுத்திருக்கிறேன்.வேலை பளு அதிகரித்ததன் விளைவு வலையுலகத் தொடர்பு கிட்டத்தட்ட அற்றுப்போய் விட்டது.இந்த வருடம் வலையுலகச்சொந்தங்களை மீட்டெடுக்க வேண்டும். புதிப்பித்து தொடர வேண்டும்.சரி!

அந்தமான் தலை நகர் போர்ட் பிளேயரில் கடந்த 5 ம் தேதி தீவுச் சுற்றுலா விழா,
தீவுச்சுற்றுலா விழாத் திடலில் தொடங்கியது.அந்தமான், நிகோபார் தீவுகளின் துணை ஆளுனர் லெப்டினென்ட் ஜெனரல் (ஓய்வு) பூபேந்தர் சிங் அவர்களால் தொடக்கி வைக்கப்பட்டது.இந்த சுற்றுலா விழாவை முன்னிட்டு, முக்கிய பூமியில் இருந்து பல மாநிலக் கலைஞர்கள் வந்துள்ளனர்.இந்த வருடம் காஷ்மீர் மாநில நாட்டுப்புறக் கலைஞர்களும் வந்துள்ளனர்.விழாத் திடலிலும், தீவின் பல்வேறு பகுதிகளிலும், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. முன்னர் இந்த விழாவில் பல மாநிலங்களிலிருந்தும் கைவினைப் பொருட்கள் மற்றும் நுகர் பொருட்கள் அங்காடிகள் இடம்பெறும். இப்போதெல்லாம் கொல்கத்தா நகர் அங்காடிகள் ஒன்றிரண்டு இடம்பெறுவதோடு உள்ளூர் கடைகளே மிகுதி. காரணம் மக்களின் வாங்கும் திறன் மற்றும் விற்பனையாளர்களின் குறைந்த லாபமும் காரணமாயிருக்கலாம். அந்தமான் தீவின் அனைத்து அரசுத் துறைகளும் தங்களது படைப்புகளை காட்சிக்கு வைத்துள்ளனர்.

பொழுது போக்கிற்கு திரை அரங்குகளோ, கூடிக்களிக்க உறவுகள் அருகில் இல்லாத குறையும் உள்ள எங்களுக்கு, இது போன்ற விழாக்கள் மிக அரிய வடிகால். தமிழ் நாட்டிலிருந்து கரகாட்டம், மயிலாட்டம், காவடியாட்டக்கலைஞர்கள் வருகை தந்து, தமது கலைத் திறனால் பார்வையாளர்களைக் கவர்கிறார்கள்.இவர்களோடு உள்ளூர் கலைஞர்களும் தமது கலைத் திறனைக்காட்டிவருகிறாகள். இங்கு, தூர்தர்ஷன் தொலைக்காட்சி, மாலை நேர கலை நிகழ்ச்சிகளை நேரடி ஒலி- ஒளி பரப்பு செய்து வருகிறது.

தீவுச்சுற்றுலா விழாவில் கலை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர் தமது தொகுப்புரையில், "காஷ்மீரக்கலைஞர்கள் தாங்கள் இந்தத் தீவுக்கு வருகை தருவதற்கு முன் எங்கள் மாநிலம் மட்டும் தான் இயற்கை அழகு நிறைந்தது என்று எண்ணியிருந்தோம். இந்தத் தீவுகளைப் பார்த்ததும் எங்களை மறந்தோம் என்றார்கள்" என்றார்.

காஷ்மீர் உடன்பிறப்புகளே! உங்களுக்கு ஒரு வார்த்தை. அந்தமான் தீவில் பனி இல்லை. உயிரை உறைய வைக்கும் குளிரில்லை. உயிரை நடுங்க வைக்கும் வன்முறை இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக தீவெங்கும் தமிழ் முழக்கம் செழிக்கிறது. செந்தமிழ் மணக்கிறது. அமைதி மலர்ந்து, அலை ஓசை மட்டும் தாலாட்டுகிறது.சமயத்தில் நிலமே தொட்டிலாய் ஆடும். ஆனாலும் ஆபத்தில்லை.

என்ன? அடுத்த பயணம் அந்தமானுக்கா? நல்வரவு!!!

2 கருத்துகள்:

அமுதா கிருஷ்ணா சொன்னது…

பதிவு நன்றாக இருக்கிறது. அந்தமானுக்கு எந்த மாதம் வந்தால் நல்லது.

க.நா.சாந்தி லெட்சுமணன். சொன்னது…

மார்ச் முதல் ஜூன் வரை வரலாம் அமுதா. வரும் போது முன்னறிவிப்பு செய்து விட்டு வாருங்கள்.