சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

வெள்ளி, ஜனவரி 21, 2011

இது தான் வாழ்க்கை

புறக்கணித்தலின் வலிகளும்
அரவணைத்தலின் சுகங்களும்
கலந்த நாட்கள் எனது கடந்த காலம்.

கடந்த காலத்தை கவிதையில் சேமித்து
நிகழ்காலத்தை நெஞ்சில் சுமந்து
எதிர்காலத்தை கனவுகளில் சேமித்து
விடியும் பொழுதுகள் எனக்கானதாய்
காலத்தின் கரங்களில் வரங்களை யாசித்து.

வாழ்க்கைப்பாதையை திசை திருப்பிய மரணங்கள்,
பஞ்சம்,நோய், அவலங்கள்,
அழுகையும், சிரிப்புமாய் தொடரும் வாழ்நாட்கள்
புத்தனின் போதனைகள் புரிந்தும்
போதிமரம் தேடி போகக் கூடவில்லை.
தேடிக்கொண்டே இருக்கிறேன்
தேடும் பொருள் தெரியவில்லை
ஓடிக்கொண்டே இருக்கிறேன்.
இலக்கு எது புரியவில்லை.

ஒவ்வொரு மணித்துளியிலும்
ஒவ்வொரு நிறம் காட்டும் மனப்பச்சோந்தி.
உதடுகள் பேசும் உன்னதங்களை
உதறித் தள்ளும் உளப்போக்கு.
உடலின் அழுக்கை கூட்டி
உள்ளத்தில் கொட்டி மூடி
புன்னகையால் பூசி மறைத்து
புனிதமாய்க் காட்டிகொள்கிறேன்.

ஊருக்கு உபதேசம் செய்யும்
தத்துவ வியாபாரிகளிடம் கேட்டேன்
"ஏன் இப்படியெல்லாம் நான்?"
அவர்கள் சொன்னார்கள்
"இது தான் வாழ்க்கை"

5 கருத்துகள்:

Unknown சொன்னது…

"இது தான் வாழ்க்கை"

ராமலக்ஷ்மி சொன்னது…

நல்ல கவிதை.

ஜோதிஜி சொன்னது…

கண்ணதாசனின் பழைய பாடல் நினைவுக்கு வந்தது. ஆனாலும் உங்கள் பார்வையில் என்னை பல இடங்களில் பொருத்திப் பாக்க முடிகின்றது. பாராட்டக்கூடிய முயற்சி இது.

ஜோதிஜி சொன்னது…

பொதுவா பழைய தலைப்புகள் கீழே வரும். புதிய தலைப்புகள் மேலே வரும். நீங்க வித்யாசமா அமைத்து இருக்கீங்க. நானும் பழைய இடுகைகள் ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டே படித்துக் கொண்டே வர என்னடா விமர்சனம் கொடுக்கும் அந்த பட்டனை காணவில்லையே என்று தேடிக் கொண்டேயிருக்கின்றேன்.

குறிப்பாக அந்த குறிச் சொற்கள் அற்புத அகராதி. அப்புறம் பெண்கள் நெடுந்தொடர் போதை எளிமையான விளக்கம். பல கவிதைகள் உள் மன ஆறுதலுக்காக எழுதப்பட்டது போல இருக்கிறது. சில இடங்களில் வீர்யம் அதிகம். சில இடங்களில் விசய ஞானம் சிறப்பு.

ரொம்ப பெருமைப்படுகின்றேன். நீண்ட நேரம் உங்கள் இடுகையில் இருந்தாலும் என் நேரம் வீணாகவில்லை. வாழ்த்துகள்.

அன்புடன் அருணா சொன்னது…

பூங்கொத்து!