சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

ஞாயிறு, ஏப்ரல் 04, 2010

பிரதிகள்

ஆண்டாண்டு காலமாய்
அடங்கி ஒடுங்கி சுயமற்று சிதைந்து ஏவாளின் பிரதியாய் நான்
ஆதிகாலம் தொட்டு
ஆளுமையை ஆப்பிளாக்கித்தரும் ஆதாமின் பிரதியாய் நீ

அரண்மனைச்சாளரங்களினூடே
நட்சத்திரம் ரசித்த போதுகளில் தொடங்கி
அந்தப்புரத்தில் உறவாடிய அந்த நாட்களில்
உறவிற்கு வெற்றுப்பதுமையாய் நான்
போரில் நீ புறமுதுகிட்ட போது
அடிமையாய் அந்நியனின் கரங்களிலும்
அந்தப்புரத்தில் நெருப்பின் நாக்குகளிலும் நான்

அடுத்து வந்த நாட்களில்
அடுப்பூதும் பெண்களுக்குப்படிப்பெதற்கு என்று
எழுது கோல் மறுக்கப்பட்ட கரங்களில்
ஊதும் குழலும், குடமும்,குழந்தைகளும்
எச்சில் பணிக்கங்களும், முதியோரின் பணிவிடைகளுமாய் நான்

பட்டம்,அலுவலகம்,
சட்டம்,சம்பளம் சாதித்தும் கூட
அடுப்படியும், அனந்த சயனத்துடன் கூடி அலுவலகம்
ஓடி ஓடிக் களைத்து
எனக்கான முகங்களும், வேஷங்களும் எண்ணிக்கை கூடி
என்ன வாழ்க்கை இதுவென வெதும்பிக் களைத்து நான்.

எல்லைகள் விரிந்தாலும், யுகங்கள் கடந்தாலும்
அடிப்படைகளில் மாற்றமின்றி ஆதிமனிதனின் இயல்புகளில் நீ

இன்று
வெறுப்பு புதைத்து கரியாகி
சாது மிரண்டு வனமழிக்கும் நெருப்பாய்,
சாகசம், வன்மம், வேஷம்,
ஆதாமை அடிமையாக்கும் அனைத்து குணங்களுடன் நான்.

ஆதாமின் விலா எலும்புகளில் ஏவாள் என்பது கடந்து
அவனின் முதுகுத்தண்டை நிமிர்த்திப்பிடிக்கும்
ஏவாளாய் ஆசை கொண்டு,
ஒற்றைப்புள்ளியிலும் ஒன்றமுடியாத
உனக்கும் எனக்குமான
உறவின் நெருக்கத்தை நினைத்துப்பார்க்கிறேன்.
உன்னிடம் என்னை இழந்ததற்காகவோ
என்னிடம் உன்னை இழந்த
பரஸ்பர இழப்பின் காரணத்திற்கோ
ஒன்றிக்கிடக்கும் பழமைகளின் வேர்ப்பிணைப்புகளை உதறி
மரபணுக்களைத் திருத்தி
பெண்ணிற்கு வரைவிலக்கணம் சொல்லும் புராண, இதிகாசங்களை எரித்து
பொதுவெளிகளில் சுதந்திரமாய் நான்
ஆணென்றால் இப்படி
பெண்னென்றால் இப்படி என்னும் கற்பிதங்களைக்கடந்து
வன்மங்களோ, வன்முறைகளோ இன்றி நீ

பூமியெங்கும் நந்தவனங்கள் வாசம் பரப்ப
இனமழித்து, நிறமழித்து, உருவழித்து உயிர்களாய் உலாவர,
உன் கரங்களில் எனக்காக பூக்கள் மட்டும்
என் கண்களில் உனக்கே உனக்கான காதல் மட்டும்

2 கருத்துகள்:

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

சிறந்த கவிதை.
பாராட்டுகள்.
நண்பர்களுக்கும் மாணவர்களுக்கும்
அறிமுகம் செய்வேன்.
மு.இளங்கோவன்
புதுச்சேரி

அன்புடன் மலிக்கா சொன்னது…

அருமையான கவிதை வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
தொடர்ந்து எழுதுங்கள்..