சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

சனி, ஜனவரி 15, 2011

அந்தமானில் பொங்கல் விழா


அந்தமானில் பொங்கல் திருநாள் உண்மையிலேயே தமிழர் அனைவரும், இன வேறுபாடு இன்றி கொண்டாடும் ஒரு திருநாள். இதற்கு முக்கிய காரணம் அந்தமான் தமிழர் சங்கம். ஒவ்வொரு பொங்கல் திருநாளுக்கும் முக்கிய பூமியின் பிரமுகர்களில் ஒருவரை அழைத்து, தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்துவது வழக்கம். அந்த வரிசையில் இந்த வருடம் நடிகரும், இயக்குனருமான திரு மிகு சேரன் அவர்கள் வருகை தந்திருந்தார்கள். அந்தமானில் இந்த வருடம் வெல்லம் ரூ.58, கரும்பு ரூ.30, வெங்காயம் ரூ.70 என்று உயர் விலைப்பொங்கலாக (costly?) இருந்தாலும் கூட திரைத்துறை சார்ந்த ஒருவரின் வருகை எல்லாவற்றையும் மறக்கடித்துவிட்டது. அந்தமான் தமிழர் சங்கம் போகி அன்று எளிய மக்களுக்கு பொங்கல் பை வழங்கினர். பொங்கல் பை வாங்கிய மகளிரில் பெரும்பான்மையானோர் தெலுங்கர்கள். பொங்கல் அன்று அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்கும் காரணியாக இயக்குனர் சேரன் இருந்தார் என்றால் மிகையில்லை. அவரின் எதார்த்தமான, எளிமையான, அலங்காரமற்ற, இயல்பான பேச்சு, பேச்சில் தொனித்த உண்மை,கோபம், தாய் மொழி பற்று எல்லாம் அனைத்து தமிழ் மக்களையும் கவர்ந்தது. அவரின் ஆடம்பரமற்ற தோற்றம், நம்மவர் என்ற உணர்வைத் தந்தது.

திரு சேரன் அவர்களுக்கு, இந்த ஊரும், இங்கு எங்கு திரும்பினாலும் தமிழ், தமிழர்கள் என்பது குறித்து மிகுந்த ஆச்சர்யம் கொண்டு பேசிய அவரின் அப்பா, 1960களில் இங்குள்ள குருசாமி & சன்ஸ் என்கிற பெரிய வணிக நிறுவனத்தில் பணி புரிந்ததாகக் குறிப்பிட்டார். அதோடு அந்தமான் தமிழர் சங்கத்தின் பொருளாளர் திரு. ராமையா ஐயா அவர்களைத் தனது சித்தப்பா என்றும் மேடையிலேயே குறிப்பிட்டார்."தமிழர்கள் தமிழிலேயே பேசுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு தமிழை பேச, படிக்கக் கற்றுக்கொடுங்கள். வயதானதும் உங்களின் கடைசிக்காலத்தில் உங்கள் சொந்த ஊருக்கு வந்து விடுங்கள். ஒரு மனிதன் எவ்வளவு வள்ர்ந்தாலும் அவனின் கடைசி மணித்துளிகள் அவனின் சொந்த ஊரில் தான் இருக்க வேண்டும். சொந்த ஊரில் தான் மடிய வேண்டும்.நான் சென்னையில் வீடு வாங்கவில்லை. எனது சொந்த ஊரான பழையூர் பட்டியில் தான் பெரும் செலவில் கட்டியுள்ளேன். அப்படியிருந்தால் தான் என் மனைவி, மக்கள் எனது சொந்த ஊருக்குப் போகவேண்டுமென நினைப்பார்கள்.

எதிர் காலத்தில் விவசாய பூமி கூட இருக்கும். ஆனால் விவசாயம் தெரிந்தவர்கள் இருக்க மாட்டார்கள். அதனால் தான் நான் எங்கள் ஊரில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கியுள்ளேன். எனது திரை வாழ்க்கை இன்னும் ஐந்து, அல்லது பத்து வருடங்கள் இருக்கலாம். அதன் பிறகு எங்கள் ஊருக்குச்சென்று நானும் விவசாயத்தில் ஈடுபடுவேன்.உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தொழில் இருப்பதைப்போல எனக்குத் தொழில் திரைப்படம். திரைப்படத்தில் என்னைப்பார்த்து உங்களுக்கு ஒரு பிரமிப்பு இருக்கிறது. எனக்குப்படித்து பதவிகளில் இருப்பதைப் பார்த்து பிரமிப்பாய் இருக்கிறது" என்று பேசினார்.

எவ்வளவொ அறிஞர்கள் இலக்கியச்சொற்பொழிவு ஆற்றிய சங்க மேடையில் சேரன் அவர்களின் இயல்பான பேச்சு எல்லோரையும் கவர்ந்தது. நடைமுறை  வாழ்க்கைக்கு இயைந்ததான அவரின் பேச்சு மனதுக்கு இதமாக இருந்தது. மனதளவில் அவர் இன்னும் பழையூர் பட்டி வாசி என்பதை அவரின் பேச்சு சொன்னது. மக்கள் கூட்டம் அவரின் கையெழுத்து வேட்டைக்கு அலை மோத மேடையை விட்டு இறங்கி வந்து "உங்கள் அனைவருக்கும் கை கொடுக்கிறேன். கையெழுத்துப் போடுவது இயலாது" என்று கை கொடுத்தார்.

இயக்குனர் சேரன், நடிகர் சேரன் என்ற இந்த முகங்களை விட இயல்பான, எளிமையான, நல்ல மனிதர் சேரன் என்ற இந்த முகம் தான் எனக்குப்பிடித்திருந்தது.

2 கருத்துகள்:

ராம்ஜி_யாஹூ சொன்னது…

பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல

கல்விக்கோயில் சொன்னது…

அந்தமான் பொங்கல் விழா குறித்து மிகத் தெளிவாகவும், மிகவும் ரசிக்கத்தக்க முறையிலும் குறிப்பிட்டுள்ளீர்கள் சகோதரி. வாழ்த்துக்கள்.