சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

திங்கள், மார்ச் 01, 2010

அந்தமானில் சத்துணவுத்திட்டம்


பள்ளிகளில் சத்துணவுத்திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் பெருந்தலைவர் காமராஜ் ஐயா அவர்கள்,அதனை தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தியவர் மக்கள் திலகம் அவர்கள், இன்று அதை வழிமொழிகிறார் கலைஞர் அவர்கள் என்று பெருமையோடு சொல்லிக்கொள்கிறோம்.சத்துணவுத் திட்டத்தில் தமிழ்நாடுதான் முன்னோடியா என்பது தெரியாது.பள்ளிக்குழந்தைகள் பள்ளிப்படிப்பை பாதியோடு நிறுத்துவதைத் தடுப்பதற்கு மதிய உணவுத்திட்டம் ஒரு தீர்வு தான்.அந்தமான் நிகோபார் தீவுகளில் கல்வியறிவு பெற்றோர் கிட்டத்தட்ட 94% ஆகும்.இங்கு "அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி (Sarva Shiksha Abhiyan)" முழுவீச்சில் செயல் படுகிறது.ஆறு வயது முதல் பதினான்கு வயதிற்குட்பட்ட அனைத்துக்குழந்தைகளுக்கும் கட்டாயக்கல்வி வசதி,இலவச சீருடை,இலவசப்புத்தகம்,இலவச மதிய உணவு வழங்கப்படுகிறது.இங்குள்ள 36 தீவுகளில் கிட்டத்தட்ட 396 பள்ளிகள் இயங்குகின்றன.

மூன்று முதல் ஆறு வயதுள்ள பாலர் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.2/ மதிப்புள்ள தின்பண்டம் வழங்கப்படுகிறது.ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச சீருடை,புத்தங்களோடு இலவச மதிய உணவும் வழங்கப்படுகிறது.தமிழ்நாட்டைப்போல மாணவர்களுக்கான மதிய உணவை பள்ளி வளாகத்தில் தயாரிப்பதில்லை.ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு தலா ரூ.5.58 வீதமும்,ஒரு குழந்தைக்கு ஒரு நாளுக்கு 100 கிராம் வீதம் அரிசியும், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு தலா ரூ.6.10 வீதமும்,150 கிராம் அரிசியும் வழங்கப்படுகிறது.இதன் அடிப்படையில் தீவுகளின் கல்வித்துறையால் ஒப்பந்த ஏலம் விடப்படும். மகளீர் கூட்டுறவு அமைப்புகள், வேலை வாய்ப்பற்றோர், சுயதொழில் கூட்டுறவு அமைப்புகள்,சுய உதவிக்குழுக்கள் ஆகியோர் மட்டுமே இந்த ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதி உண்டு.

ரூ.5000/க்கான வரைவோலை (Bank EMD), உணவு விநியோக உத்தரவு ( Food Licence),ஒப்பந்ததாரர் மதிய உணவை சமைப்பதற்கு தனியான சமையற்கூடம் வைத்திருப்பார் அதற்கான சுத்தமான சுற்றுப்புறத்திற்கான சுகாதாரத்துறையின் சான்றிதழ் (Sanitation Certificate) பணிபுரியும் பணியாளர்களுக்கான மருத்துவச்சான்றிதழ் (Medical Certificate) ஆகியனவற்றை ஒப்பந்தப்படிவத்துடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.காய்கறி,பருப்பு யார் அதிக அளவு குறிப்பிடுகிறார்களோ அவர்களுக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகும்.ஒரு வருட ஒப்பந்தம்.ஒப்பந்ததாரருக்கு பள்ளி நிர்வாகம் உணவு இனங்களின் பட்டியல் ஒன்றை (மெனு) தந்துவிடுவார்கள்.வாரம் முழுதும் அதன் படி விநியோகம் செய்யவேண்டும்.ஒரு நாள் 4 இட்லி,1 வடை,சட்னி,சாம்பார்-ஒரு நாள் சோறு,சாம்பார் + வெஞ்சனம் - ஒரு நாள் சோறு,பருப்பு + வெஞ்சனம் - ஒருநாள் கிச்சடி,அப்பளம்,ஊறுகாய் - ஒருநாள் புலவு சாதம்,காய்கறி சாலட்,பட்டாணி,கிழங்கு குருமா இப்படித் தருவதுண்டு.முன்னர் முட்டை வாரம் ஒரு நாள் கொடுக்கச்சொல்லி உத்தரவு இருந்தது.ஆனால் முக்கியபூமியிலிருந்து வரும் முட்டை சமயங்களில் கெட்டுப் போயிருக்க வாய்ப்புண்டு,அது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பதால் முட்டை வழ்ங்கும் திட்டம் கைவிடப்பட்டது.இவற்றைக் கண்காணிக்க பள்ளி அளவில் ஒரு ஆசிரியர் குழுவும்,பெற்றோர் குழுவும் உண்டு.அடிக்கடி கல்வித்துறையின் உணவு விநியோகத்திற்கென சிறப்புப் பணியாளர்கள் திடீர் சோதனைகளில் ஈடுபடுவதும் உண்டு.

மதிய உணவுத்திட்டத்தை ஒப்பந்த அடிப்படையில் விடுவதால் பள்ளி நிர்வாகத்திற்கு சமையலறை,பணியாளர் தொந்தரவற்றுப்போவதுடன் மாணவர்களுக்கும் விதவிதமான உணவு வகைகள் கிடைக்கிறது.இன்று தீவில் மிகுந்த போட்டி நிலவும் தொழில் இது தான்.நாங்களும் கூட இதில் தான் ஈடுபட்டுள்ளோம்.இதனால் தீவில் வேலை வாய்ப்பற்றோருக்கு வேலையும்,தீவுநிர்வாகத்திற்கு ஒரு துறையை ஏற்படுத்தி கண்காணிக்க வேண்டிய வேலையும் மிச்சம். என்ன கேட்குறீங்க? லஞ்சம் இல்லையான்னா? கடவுள் இல்லாத இடத்துல கூட அது இருக்குதுங்களே! யாரு வாங்குறாங்களா? உயர்ந்த ஆசிரியப்பணி செய்யும் ஆசிரியர்கள். போட்டுக்குடுத்துறாதீங்க பாஸ்!

1 கருத்துகள்:

Thenammai Lakshmanan சொன்னது…

அட இதுலயும் லஞ்சமா மக்கள் திருந்தவே மாட்டாங்களா ஷாந்தி