சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

புதன், ஆகஸ்ட் 25, 2010

அந்தமானும் உள்ளாட்சித்தேர்தலும்


அந்தமான், நிகோபார் தீவுகளில் அடுத்த மாதம் 19ம் தேதி உள்ளாட்சித்தேர்தல் நடைபெற உள்ளது. நகராட்சி மற்றும் பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் இம்மாதம் 27ம் தேதி.இன்று பெரும்பாலான வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். அந்தமான் ஒரு குட்டி இந்தியா என்பதால் மாநிலக்கட்சிகள், தேசியக்கட்சிகள் இதோடு சுயேட்சை வேட்பாளர்கள் என்று ஒரு பெரிய பட்டியல். முன்னர் வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்வது இவ்வளவு பிரபலமாக இருந்ததில்லை. தீவு மக்களும் முக்கிய பூமி மக்களைப் பார்த்து கற்றுக்கொண்டுவிட்டார்கள். கொடிகளும், தொடர் ஊர்வலம் போன ஊர்திகளும், கோஷங்களும், போக்குவரத்தை பாதித்தன.திறந்த வேனில் வேட்பாளர்கள் மாலையணிந்து கைகளைக்கூப்பியபடி. 19ம் தேதி வியாழன் அன்று காமன் வெல்த் விளையாட்டுப்போட்டிக்கான ஜோதி ஊர்வலத்தை ஒட்டி "குயின்'ஸ் பேட்டன் ரிலே" இருந்தது. ஒத்திகை ஒரு நாள், உண்மையில் ஒரு நாள் என்று பொதுமக்களை காவல் துறை இந்தப்பக்கம், அந்தப்பக்கம் என்று இரண்டு நாள் விரட்டிக்கொண்டிருந்தார்கள். இன்று மீண்டும் இப்படி. அமைதியான தீவுகள் என்று பெயர் வாங்கிய பகுதியில் இன்று தெய்வத்தின் பேரால், அரசியலின் பேரால் ஊர்வலங்களும், கோஷங்களும். எப்படியோ அமைதியை பாதிக்காமல் இருந்தால் சரி.


அந்தமானில் 69 பஞ்சாயத்துகளுக்கும், நகராட்சியில் 18 உறுப்பினர்களுக்குமான தேர்தல். போன முறை நகராட்சி உறுப்பினர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நகராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலர் தங்கள் பகுதி மக்களுக்கு வீடுவீடாகச்சென்று அன்பளிப்புகளை (லஞ்சம்?) வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வார்டில் அனைத்து வீட்டிலும் பெண்களுக்கு புடவை அன்பளிப்பாக வழங்கினார்கள்.சிலர் ஓட்டை துருப்புச்சீட்டாக வைத்து தனது வீடு வரை சிமெண்ட் சாலை போட்டுக்கொள்வது, சுவர் எழுப்பிக்கொள்வது,குடிநீர்க்குழாய் இணைப்பு, அலுவலகங்களில் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வது, மானியக்கடனுதவிகள் இப்படி காரியம் சாதித்துக்கொள்வதும் உண்டு.


பஞ்சாயத்து தலைவர்கள் தங்கள் பகுதிகளில் குடிதண்ணீர், நல்ல சாலை,போக்குவரத்து வசதி, அரசுக்கடனுதவி போன்றவற்றைத் தங்கள் மக்களுக்கு செய்து கொடுத்திருக்கிறார்கள். அதனால் தீவு கிராமப்பகுதிகள் குறுகிய காலத்தில் விரைந்து முன்னேறியுள்ளது. அதுவரை பாராட்டலாம். எந்தக் கட்சியில் நின்று ஜெயித்தாலும் சரி கடைசியில் தமிழர்கள் என்ற புள்ளியில் ஒன்று சேர்ந்து கொள்வார்கள் இவர்கள். எப்படியோ இவர்கள் தீவு முன்னேற உழைத்தால் நம் ஓட்டு தமிழருக்கே. ����

2 கருத்துகள்:

Thenammai Lakshmanan சொன்னது…

ஷாந்தி அருமையான விழிப்புணர்வு..
ரொம்ப நாளாச்சே பார்த்து ..நலமாம்மா..

Tamil cinema சொன்னது…

நல்ல பதிவு நன்றி