சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

வெள்ளி, ஜூன் 29, 2012

சித்திரை விழா.




தமிழ் கூர் நல்லுலகிற்கு எமது இதயம் கனிந்த தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்.

தை முதல் நாள் தான் வருடப்பிறப்பு என்ற முந்தைய தமிழக அரசின் அறிவிப்பு இருந்த போது அந்தமான் தமிழர் சங்கம் சித்திரை விழாக் கொண்டாடவில்லை. இன்றைய தமிழக அரசு சித்திரை முதல் நாள் தான் தமிழ் வருடப்பிறப்பு என்று அறிவித்ததும் தாய்த்தமிழகத்தோடு ஒன்றிணைந்து செல்லும் நோக்குடன் சித்திரை விழாக் கொண்டாடி மகிழ்கிறது. சித்திரை விழாவை முன்னிட்டு சிறப்பு சித்திரைக் கவியரங்கம், பட்டிமன்றம் ஆகியவை அரங்கேற உள்ளது. சித்திரைக்கவியரங்கிற்கு எனது கவிதை.

சங்கம் வளர்த்த தங்கத்தமிழ்த் தாயின்
தாமரைத்தாளினுக்கு என் முதல் வணக்கம்.
வங்கக்கடலலைகள் வாழ்த்துகின்ற
வண்ணத் தீவு வாழ் வளமார்ந்த தமிழருக்கும்,
தணடமிழ்க்கவியரங்கின் நவையற்ற தலைவருக்கும்
சித்திரைக்கவியரங்கின் முத்திரைக்கவிகளுக்கும்
சிரம் தாழ்ந்த பணிவன்பான வணக்கங்கள்.

எம் தமிழ் மக்கள் அனைவர்க்கும்
இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள் கோடி.
நந்தன ஆண்டு, நலமெலாம் தரவேண்டும்.
வந்தனம் கூறி வாழ்த்துப்பா பாடுவோம்.
பொங்கும் வளமும் பொலிவெலாம் தரவேண்டி
புத்தாண்டு நன்னாளில் இறையை வேண்டுவோம்.

நனவு கொஞ்சம் கனவு கொஞ்சமாய்
நகரும் இந்த இயந்திர வாழ்க்கையில்
இனிமை கூட்டுவதும் – நம்
தனிமை போக்குவதும் இத்திரு நாட்களே.
ஆவணியோ, தையோ அடுத்து வரும் சித்திரையோ
எதுவாகிலும் இருக்கட்டும் வருடப்பிறப்பு.
ஆருடங்களையும், ஆராய்ச்சிகளையும் ஒதுக்கிவிட்டு
ஆனந்தம் கொண்டாடுவோம் சித்திரை நாளில் இன்று.

எட்டுமாத மழையும்
இரண்டு மாதமாய் சுருங்கிப்போனது. – இனி
பத்து மாதமும் தண்ணீர் பஞ்சமாகும்.
அடர்வனக்காடுகளை அழித்து
அலங்காரமாக்கினோம் வீடுகளை
அலங்கோலமாகிப் போனது
அந்தமான் தீவுகள்
நகரமயமாக்கலில் நரகமாகிப் போகும் நம் வாழ்க்கையும்.


தீவு மங்கையின் ஆபரணங்கள் விலையுயர் மரங்கள்
அவள் ஆபரணங்களை சேர்த்து வைத்தாள்
அவள் மக்களுக்குக் கேடயங்களாய்…..
கேடயத்தையே வாள் கொண்டறுத்து
கேடுகளை வாங்கிக்கொண்ட மக்கள் நாம்
அழகிய வனங்களெல்லாம் பாலையாய்ப்போனால்
அடுத்த சந்ததி வாழ்வதெப்படி?
பாலையையும் சோலையாக்கும் வளைகுடா தேசங்கள் முன்
சோலை சிதைத்து பாலையாக்கும் வன்கொடுமை விலக்க,
சிந்திப்போம் சித்திரை திரு நாளில், சீர்பெருக்க சிந்திப்போம்.

விலை நிலமெல்லாம் வீடுகளாக்கினோம்.
வெள்ள நீர் தேக்கி விளைவிக்க இடமில்லை.
வாடகை ஆசையில் வளர்த்த மரம் வீழ்த்தி,
பணப்பை நிரப்பினோம்.
மனம் மட்டும் வெறுமையாக
மரத்தின் நிழலை நினைத்துக்கொண்டே…..

இங்கே
வீட்டு வாசலை கோலங்களைவிட
வாகனங்களே வழி மறித்து நிற்க
காற்று மண்டலமே கலங்கிக் கிடக்கிறது
கரிய மில வாயுவால்.

அகழ்வாரைத் தாங்கும் நிலமும்
அகழ, அகழ ஆடும்.
வன்முறையும் தீவிரவாதமும் மட்டும் தான் தேசத்துரோகங்களா?
வனமழித்து சூழல் கெடுப்பதும் தேசத்துரோகம் தான்!
வீட்டிற்கு ஒரு மரம் போதாது. இனி
தலைக்கு ஒரு மரம் வளர்ப்போம்
தழைக்கும் மரங்கள் மழை கூட்டி வளம் சேர்க்கட்டும்.

ஒருமைப்பாட்டிற்காய் உயிர் தந்த
உன்னத பூமி இது.
கற்காலமும் தற்காலமும்
கலந்து வாழும் கருணை தேசமிது.
இங்கும் தான் எத்தனை வேற்றுமைகள்
மாநிலத்தின் பெயரால் பிரிவினைகள்
மொழியின் பெயரால் பிரிவினைகள்
இனத்தின் பெயரால் பிரிவினைகள்
சாதியின் பெயரால் பிரிவினைகள்
இருப்போர், இல்லார் – கற்றோர் கல்லார் இப்படி
பிரிவினைக்கோடுகளால் பின்ன பின்னமாய் நாம்
ஒற்றுமைக்கேட்டிற்கு இன்னும் எத்தனை பாடம் படிப்பது?
பாலகர் போல் பாடங்கள் மறப்பதா?
கொலையும் கொள்ளையும் தான் மாபாதகமா?
பிரிவினை வளர்ப்பதும் பெரும் பாவம் தான்
சிந்திப்போம், சித்திரைத் திரு நாளில் சீர் பெருக்க சிந்திப்போம்
தமிழனாய் கை கோர்ப்போம் – மொழி வளர்ப்போம்,
புது இலக்கியம் செய்வோம்
     இந்தியனாய் ஒன்று கூடுவோம் – உழைப்பால் ஒளி கூட்டி
புதியதோர் உலகம் செய்வோம் நாம்
புதியதோர் உலகம் செய்வோம்.

பி.கு : எந்த ஆட்சி வந்து என்ன சட்டம் கொண்டு வந்தாலும் தங்கமணிகள் தமிழ்ப்புத்தாண்டைக் கொண்டாடுவது சித்திரையில் தான். இந்தப்பதிவு தாமதமானதிற்கு காரணம் சொந்த ஊருக்குப் போனதாலும், இணையம் தகராறு செய்ததாலும்.

0 கருத்துகள்: