சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

புதன், மார்ச் 10, 2010

வாசல் திண்ணையில்.....

அவள்
வெடித்துப் பிளந்த வாசல் திண்ணையில்
கிழிந்த சேலையில் முடங்கிக்கிடக்க
சூரியனின் கதிர்களும்
மழையின் சாரல்களும்
காற்றின் கரங்களும்
கடும்புயல் சீற்றங்களும் மாற்றி மாற்றி
நலம் விசாரிக்கும்.

வாசல் தாண்டி உள் நுழைய
வரம் தரவில்லை வீட்டுச்சாமிகள்.
"கம்பு சுழற்றி,கடப்பாறை கையேந்தி
முதுகுச்சட்டைக்குள் மூன்றடி அரிவாள்
இடுப்பு சுற்றி இரும்புப்பொத்தான் வார் பார்த்து
எதிர் நிற்கும் பகை கூட விதிர்த்து விலகும்"
அவள் பெற்ற வீரமகன்
அன்னைக்கு அமுதிட மனைவியிடம் வரம் கேட்கிறான்.

ஒரு காலத்தில்
அந்த வீட்டுமனை வாங்க
தண்டட்டி,தாவாடம்,பொட்டு,அட்டிகை
பொட்டி நகை அத்தனையும் புன்னகையோடு தந்தவள்.
அடித்தளம் போட அப்பனிடம் கடன் வாங்கி
மேல்தளம் போட அண்ணணிடம் கடன் வாங்கி
சுவர்,தரை எல்லாம் தொட்டுத்தடவி
சொந்த வீட்டு சுகத்தில் இருந்தவளுக்கு
வயது முதிர்ந்ததும் வாசல் திண்ணையில்....

கைவளை திருகிவிட்டு
கனத்த நகை குலுங்க
காஞ்சிப்பட்டு சரசரக்க
மஞ்சள் மினுங்க தெருவிறங்கி நடந்தால்
ஸ்ரீதேவி என்ற மக்கள் எத்தனை?
காப்புத் திருகிவிட்டு
கண்களில் மையெழுதி
பொட்டு மினுங்க
பொன்னகையும் மின்ன வீதியில் நடந்தால்
கும்பிட்டுக்குழைந்த மக்கள் எத்தனை?

வாழ்ந்தவள் கெட்டு
வரையோடாய்க்கிடக்கும் இந்த நேரத்திலும்
அவளின் பஞ்சடைந்த விழிகளில் பளபளக்கிறது
மலரும் நினைவுகள்.
எங்காவது திண்ணைகளில் அவளைப்பார்த்தால்
"அந்தக்காலத்தில் நாங்கள்" என்று ஆரம்பிக்கும்
அவளின் மலரும் நினைவுகளுக்கு
பொறுமையாய் செவி கொடுங்கள் தயவு செய்து.
போதும் அவளுக்கு!

1 கருத்துகள்:

Thenammai Lakshmanan சொன்னது…

கலங்கடித்தன வார்த்தைகள்

ஷாந்தி உங்களுக்கு வாழ்த்துக்கள் சக்தி விகடனில் வெளியான கட்டுரைக்கு

உங்களை ஒரு தொடர் இடுகைக்கு அழைத்து இருக்கிறேன் வாருங்கள்