சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

ஞாயிறு, ஜூன் 20, 2010

அந்தமான் டு சென்னை

ஹாய்! ஹாய்! ஹாய்! நண்பரகளே! உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி!.

வாழ்விடத்தை விட்டு, பிறந்த மண்ணிற்கு செல்லும் போது மனதில் இருக்கும் ஒரு வித சந்தோசம், உறவுகளை சந்திக்கப்போகும் ஆர்வம், பாசம், நேசம் பொங்க அவர்களை இருகரங்களில் ஆலிங்கனம் செய்யத்துடிக்கும் எண்ணம் இவற்றோடு, வாழ்விடத்தில் வீடு, மரம், செடிகள், வளர்ப்பு நாய்கள் இவற்றை விட்டுச்செல்லும் போது உண்டான மனக்கிலேசம் இப்படி ஒரு கலவையான உணர்வோடு கப்பல் ஏறினோம்.இந்த முறை சென்னை வரும் கப்பல் தாமதமானதால், விசாகப்பட்டினம் வரும் கப்பலில் வந்தோம். அமைதியான பயணம், வசதியான கேபின், சுவை குறைவான உணவு. விசாகப்பட்டினத்தில் இருந்து கோரமண்டல் எக்ஸ்பிரசில் சென்னை வந்து, சென்னையிலிருந்து, சொந்த ஊர் செல்லத்திட்டமிட்டு, கோரமண்டல் எக்ஸ்பிரசிற்கு பயணச்சீட்டை, அந்தமானிலேயே முன்பதிவு செய்தோம். விதி! மூன்றாம் நாள் இரவு செல்ல வேண்டிய கப்பல், நான்காம் நாள் காலை ஏழு மணிக்குத் தான் துறைமுகத்தை சென்றடைந்தது. கோரமண்டலைத் தவறவிட்டோம். பயணச்சீடை ரத்து செய்து கழிவு போக, மேலும் பணம் கொடுத்து, காலை 9.30 மணிக்கு சென்னை செல்லும் ரயிலுக்கு, பயணச்சீட்டுப் பெற்று விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்தோம். ரயில் தண்டவாளங்களில் சிதறிக்கிடந்த மலம், கெட்ட உணவுகள், அதைக் கொத்தித் தின்று கொண்டிருந்த பறவைகள்... சீ! இரண்டு மணி நேரம் காத்திருந்த நேரம் நரகம். அதோடு ரத்து செய்த பயணச்சீட்டின் தொகையில் நூறு ரூபாயை எங்களின் சம்மதம் இல்லாமலே எடுத்துக்கொண்டார் கவுண்டரில் இருந்தவர்.

முன்பதிவு செய்யப்படாத பொதுப்பெட்டி ஏற்கனவே பிதுங்கி வழிய, மிகவும் கஷ்டப்பட்டு, எங்களின் பொருட்களை ஏற்றி, தரையில் உட்கார்ந்து கொண்டோம். ரயில் கிளம்பும் வரை சலனமற்று இருந்த சக பயணிகளில் சிலர், பாடிப் பிச்சை எடுக்க, சிலர் தங்களின் பொருட்களை விலை பேச, திடீரென கை தட்டும் சப்தம். சப்தம் வந்த திசையில், நல்ல ஆகிருதி, கவர்ச்சியான உடை, முழு முகப்பூச்சு அலங்காரங்களுடன் அரவாணியர். "நிக்கால்! பைசா நிக்கால்!"(பணத்தை எடு) என்ற மிரட்டல். ஒவ்வொரு ஆணிடமும் சென்று பணம் பெற்று, தராதவர்களிடம் அவர்களின் கன்னத்தில் அறைந்து, அவர்களின் முன் அசிங்கமான சேட்டைகள் செய்து பணம் பறித்தனர்.பணம் பறித்தவர்கள் அடுத்த நிலையத்தில் இறங்க, மறுபடி ஒரு புதுக்கும்பல். மறுபடி அதே கைதட்டல், மிரட்டல்.பலவந்தமாக பணத்தைப் பறித்துச்சென்றும் பயணிகள் வாளவிருந்தது ஆச்சர்யம். அவர்களும் தமிழர், தெலுங்கர்களிடம் எந்த வம்பும் வைத்துக்கொள்ளாது, வட நாட்டில் இருந்து திருப்பூருக்கு வேலைக்கு வரும் மக்களைத்தான் வேட்டையாடினர்.நம்மவர்களைப் பார்த்து  அக்கா! அண்ணா! சைடு ஓஜாவ்! (தள்ளிக்க) என்று சகஜமாய்க் கடந்து போனார்கள்.

 திருப்பூருக்கும், சென்னைக்கு கார்க்கம்பெனிகளுக்கும் வேலைக்கு வரும் வடநாட்டினர் அனைவரும் 14 வயது முதல் 22 வயதிற்குட்பட்ட இளவயதினர். ஒரிஸ்ஸாவில் ரயிலேறி, மூன்று நாட்கள் பயணம். வயிற்றுப்பிழைப்பிற்காக வரும் இவர்களிடம் இப்படி ஒரு அருவெறுப்பான தாக்குதல். காவல் துறையோ, பொது மக்களோ கண்டுகொள்வதில்லை. தமிழறியாத அவர்களிடம்," இந்த வயசுல அம்மா, அப்பாவ விட்டு சம்பாதிக்க வர்றீங்க! இத ஏன் அனுமதிக்கிறீங்க!. எல்லாரும் ஒண்ணு சேர்ந்து போட்டா பயப்படுவாங்கல்ல" என்ற போது, ஒரு புன்னகை தான் அவர்களின் பதில்.அரவாணியர் மதிக்கப்பட வேண்டியவர்கள். தமது திறமைகளை மேம்படுத்தி, உழைத்து முன்னேறி, எத்தனையோ அவமானங்களை சந்தித்து வாழும் திருநங்கையருக்குத் தலை வணங்கும் நாம், இப்படி அராஜகம் செய்யும் அரவாணியரைக்கண்டு அருவெறுப்படைந்தோம்.இவர்கள் ஒரு புறம்.

 தின்பண்டங்கள், குளிர்பானங்கள் விற்பவர்கள் சிறிதும் லஜ்ஜையின்றி நம்மை மிதித்துக்கடந்து செல்வதும், வடநாட்டாரை இருக்கையை விட்டு எழுந்திருக்கச்சொல்லி மிரட்டி இருக்கையில் அமரும் அடாவடி மக்கள் சிலர். காலை 9.30 மணிக்கு ரயிலேறி, மறுநாள் அதிகாலை 3.00 மணிக்கு சென்னை சென்டிரல் ரயில் நிலையம் வந்தடைந்தோம். சென்னை வரும் வரை உணவின்றி, கழிவறை வசதியின்றி அப்பப்பா! சென்னை ரயில் நிலையம் எத்தனை சுத்தம். எவ்வளவு அழகு. நான் இது வரை அனுபவித்த ரயில் பயணங்களில் மிகக்கொடுமையான பயணம் இது. இனிமேல் முன்பதிவு செய்யாத ரயில் பயணமா? மூச்!

5 கருத்துகள்:

சாந்தி மாரியப்பன் சொன்னது…

முன்பதிவு இல்லாம வர்றது சிரமம்தான். இப்பத்தான் volvo பஸ்ஸெல்லாம் இருக்குதே. அதிலேயே வந்திருக்கலாமே.

வடுவூர் குமார் சொன்னது…

கொடுமை தான். :-(

ஜோதிஜி சொன்னது…

வட நாட்டு மக்கள் திருப்பூருக்கு தொடர்ச்சியாக வந்து கொண்டுருப்பதை எழுத நினைத்துக் கொண்டுருக்கும் போது உங்கள் வருகை மிகுந்த மகிழ்ச்சியை தந்தது.

ஹுஸைனம்மா சொன்னது…

ஊருக்கு வர்றோம்கிற சந்தோஷம் இருந்தாலும் போக்குவரத்தும், சுகாதாரமும்தான் ரொம்பக் கடுப்பேத்தும். அப்புறம் எப்படா திரும்பிப் போலாம்னு நினைக்க வச்சுடும்!

Paleo God சொன்னது…

வாங்க! :)