சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

சனி, பிப்ரவரி 20, 2010

மனதின் தனிமையில்....

தனிமைச்சிலுவையில்,
வெறுமையின் ஆணிகளில் அறையப்பட்டு
மௌனமாய்க்கிடக்கிறேன்.
மடிக்கணினியில்,
அறிவின் துணையோடு
விரல்களுக்கும் விழிகளுக்குமான வேலை.
வாழ்க்கை வாழப்படாமல்
வெறுமனே நாட்களைக்கடத்தி...
என் மொழிகளை எண்ணமாக்கி
எண்ண அலைகள் அறைச்சுவற்றில் மோதி
எதிரொலித்தது மௌனமாய்...
சாளரமற்ற மனதின் சுவர்களில்
மோதி உடைந்தது ஞாபகங்கள்.

கோபம்,குரோதம்
வெறுப்பின் நெருப்புக் கங்குகளை
வீசிச்சிதறடிக்க
விட்டு விலகியது நட்பும்,உறவும்.
என் வாழ்நாள் தேடல்களின்
இருப்பு நிலைகளும்,
செல்வக்கிடங்கின் திறவுகோலும்
தலையணைக்கடியில் பரிகாசச்சிரிப்பில்.

வீதியின் இயக்கம்
விழிகளில் பிரதிபலிக்கிறது வெற்றுப்படமாய்..
திரைப்படமும் ஊடகமும் பேசிக்கொண்டே இருக்கிறது.
கேட்டுச்சலித்து,
மௌனம் வெறுத்து
நான் மொழிவதைக் கேட்கும்
செவிகளுக்கு ஏங்கும் மனம்.

தோட்டத்தில் மலர்ந்த பூக்களைத்தேடும்
பட்டாம் பூச்சியிடம் என் மௌனம் உடைக்க,
தலையாட்டுகிறது பூக்கள்.

1 கருத்துகள்:

Thenammai Lakshmanan சொன்னது…

பூக்கள் தலையாட்டும் போது மனதின் தனிமை மறைந்து போகட்டும் சாந்தி