சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

செவ்வாய், மார்ச் 16, 2010

தண்ணீர்,தண்ணீர்.


உலக தண்ணீர் தினம் அனுசரிப்பிற்காக இந்தப்பதிவு.

சந்தனமுல்லையின் தொடர் அழைப்பிற்கிணங்கி எழுதப்படும் பதிவு. முல்லை! அழைப்பிற்கு நன்றி!

"நீரின்றி அமையாது உலகு" என்றார் வள்ளுவர்.இறைவன் அளித்த ஐம்பூதங்களும் பூமியின் உயிர்கள் இன்புற்று வாழவே.இந்த ஐம்பூதங்களில் ஒன்று தனது பவித்திரத்தை இழந்தாலும் அதன் விளைவுகளை பூமியின் உயிர்கள் அனுபவித்தே தீரவேண்டும்.எதைக் கொடுக்கிறோமோ அதைப் பெறுவோம் என்கிறது கீதை.ஆனால் இந்த ஐம்பூதங்களைப் பாழ்படுத்தும் விஷயத்தில் மட்டும்,கொடுப்பவரும்,சாட்சிகளும்,பார்வையாளர்களும் பாதிக்கப்படுவார்கள்.ஆனால் அது பற்றி சிந்தனையின்றி ஓடிக்கொண்டிருக்கும் நாம்.பணமும் செல்வமும் ஒரே குறியாக யாரோ செலுத்தும் இயந்திரங்களாய் நாம்.சில நகை சேர்க்கும் பெண்கள்,சிக்கனத்தின் பேரால் ஆரோக்கியத்தில் அதிகம் கவனம் செலுத்தமாட்டார்கள்.அந்த நகைகளை அணிய உடல் வேண்டுமே என்று யோசிப்பதில்லை.அப்படித்தான் இருக்கிறது ஐம்பூதங்களை சேதப்படுத்துவதும்.ஐம்பூதங்கள் ஒன்றோடொன்று தொடர்புள்ளவை.வளியும்,வெளியும் சேதமுற்றால் நிலமும்,நீரும் திரியும் என்பது இயற்கையின் விதி,நாம் அனைவரும் அறிந்ததே!

எங்கள் ஊர்களில் வீட்டுக்கு வீடு கிணறு உண்டு.அதோடு குடிதண்ணீர் குழாய் இணைப்பு உண்டு.அதனால் தண்ணீர் பஞ்சமில்லை.ஆனால் சென்னையில்? முன்னாட்களில் சென்னையில் கிண்டி அம்பாள் நகர்,காந்தி நகர் பகுதியில் "மெட் ரோ தண்ணீர்" இணைப்பு இல்லை.அந்தந்த பகுதி இளைஞர்கள் காசு வசூலித்து பெரிய கொள்கலன் களை நிறுவி,அதில் தண்ணீர் நிரப்பி,பின் குடத்தை எண்ணி, எண்ணித் தண்ணீர் தருவார்கள்.இது குடிக்க லாயக்கற்றது.பிறகு குடி தண்ணீருக்கு வெகு தொலைவு சென்று தண்ணீர் கொண்டு வந்து குடிக்க வேண்டும்.குளிப்பது,கழிப்பறை உபயோகத்திற்கு,பாத்திரம் துலக்க,துணி துவைக்க,குடிக்க அளந்து,அளந்து....அப்பாடி சென்னை வாழ்க்கை நகர்ப்புற வளர்ப்பில் வந்தவர்களால் தான் முடியும்.நம்மால் முடியாது.அதன் பிறகு கப்பல் விட்டிறங்கி நேரே சொந்த ஊர்,பிறகு வரும்போது இரண்டு நாள் தங்குவதுண்டு,அதுவும் மனதில் சீ இது ஒரு ஊரா? என நொந்த படி.சென்னையின் தண்ணீர் பற்றாக்குறைக்கு பெருகும் மக்கள் தொகை ஒரு காரணம்.மேட்டுக்குடி மக்களின் பொறுப்பின்மை ஒரு காரணம்.சாதரண மக்களின் அலட்சியம் ஒரு காரணம்.கோடி கொடுத்தாலும் சென்னை வாழ்க்கை எங்களுக்கு வேண்டாம்.பழங்கஞ்சியும்,கந்தலாடையும் கிடைத்தால் போதும்.எந்த மன உளைச்சலும்,தாழ்வுமனப்பான்மையுமின்றி சந்தோசமாக வாழத்தயார்.

அந்தமானில் பெரும்பாலும் தண்ணீர் பஞ்சமில்லை.அந்தமான் நிகோபார்த்தீவுகள் தென் மேற்குப்பருவ மழை மற்றும் வடகிழக்குப் பருவ மழை என இரண்டு பருவ மழையில் நனையும் இயற்கை அன்னையின் செல்லப்பிள்ளை. மே மாதம் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழையும்,நவம்பர் முதல் ஜனவரி வரை வடகிழக்குப்பருவமழையும் பொழியும்.வருடத்தில் சராசரியாக 3000 மில்லிமீட்டர் மழைப்பொழிவு இருக்கும்.இந்தத் தீவுகளின் மொத்த நிலப்பரப்பான 8249 சதுரக்கிலோ மீட்டரில் 92% நிலப்பரப்பில் அடர்ந்த காடுகள்.இங்கு தீவுகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்ய ஒரே ஒரு அணை (Dhanikkaari Dam) மட்டும் உள்ளது. இங்கு அடித்துப்பெய்யும் மழையில் ஒருசில நாட்களில் அணை நிறைந்து மீதமுள்ள தண்ணீர் கடலுக்குத்தான் போகும்.அதோடு இந்த அணை கட்டிய நாள் முதல் இன்றளவும் தூர் வாராமல் இருப்பதால் கொள்ளளவு குறைந்து,மக்கள் தொகை அதிகமாக பிரச்சினைகள் ஆரம்பம்.கோடை விடுமுறைக்கு தீவின் பெரும்பாலான மக்கள் முக்கிய பூமி செல்வதுண்டு.அப்போது தீவின் சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி இருக்கும்.கோடையில் தண்ணீர் பஞ்சத்தால்,  பள்ளிகளின் விடுமுறையை நீட்டிப்பதும் உண்டு இரண்டாவது பருவ மழை பொய்த்தால் தீவுகளில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடும்.கிணறுகள் உண்டு என்றாலும் வாசலை விட்டிறங்காத மக்களின் நிலை? ஆனால் நகராட்சி தண்ணீர் வண்டியில் தண்ணீர் கொண்டு வந்து தெருத்தெருவாக வினியோகம் செய்வார்கள்.

இந்த ஆண்டு இரண்டாவது பருவமழை பொய்க்க, வந்தேவிட்டது தண்ணீர் பஞ்சம்.வாரத்தில் இரண்டு முறை தான் இனி குழாய்த் தண்ணீர் கிடைக்கும்.அதற்கும் ஒரு வழியுண்டு.நாங்கள் குடியிருக்குமிடம் பெரியமனிதர்கள் இருக்கும் பகுதி.ஆகவே நகராட்சிப்பணியாளர்கள் மணிக்கணக்கில் தண்ணீர் திறந்து விடுவர். அண்டா,குண்டா,ட்ரம் இப்படித் தண்ணீரைப்பிடித்து நிரப்பி வைத்துகொள்வோம்.அப்படித்தான் 2004ம் ஆண்டில் சுனாமியின் போது ஒரு வாரம் தண்ணீர் வராத போது சமாளித்தோம்.அதோடு வாசலில் கிணறு இருக்கிறது.எட்டி முகர்க்கும் படி.அந்தவகையில் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள்.இங்கு தொழிற்சாலைகள் இல்லாததால் பெரிய மாசு என்று சொல்லும்படி ஒன்றுமில்லை என்றாலும் மழைக்காலத்தில் வைரஸ் நோய்கள் தண்ணீரால் வருவதுண்டு.தண்ணீரை அதன் அருமை புரியாது குடி நீரைக் கழிவு நீர்க்கால்வாயில் விடும் மக்கள் இங்கு தான் காணக்கிடைப்பார்கள்.சுற்றிலும் கடல்.ஆனால் அந்த நீர் ஒன்றுக்கும் உதவாமல் போனாலும் கவலைப்படுமளவு தீவு நிர்வாகம் விடுவதில்லை என்பதே மக்களின் அலட்சியத்திற்கு காரணம்.

அந்தமான் பொதுப்பணித்துறை வீடுகளின் கழிவு நீர் கால்வாய்களை இணைத்து கடலில் விடுவதால் சாலைகளில்,தெருக்களில்,சந்துகளில் சாக்கடை நீரையோ,மழை நீர் தேங்கியோ பார்க்கமுடியாது.கொஞ்சம் முயன்றால் தீவை சொர்க்கமாக,சுத்தமாக வைத்துக்கொள்ள முடியும்.நகராட்சி பணியாளர்கள் தெருக்களை சுத்தம் செய்து நகர,அடுத்த நிமிடம் குழந்தைகள்,பெண்களின் உபயோகித்த நாப்கின் கள்,கழிவுகள்,குப்பைகளை தங்கள் வீடுகளில் இருந்து வீசி எறிந்து அது கழிவு நீர்க்கால்வாயில் கலந்து கடலுக்குப்போகும்.சமயங்களில் அடைத்து சாலைகளில் நீர் பெருகும்.குப்பையை பொறுப்பற்றுப் போடும் பொதுமக்கள் தண்டிக்கப்பட்டால் சுத்தமாக பராமரிக்க இயலும்.நண்பர்கள் அனைவரும் எழுதி உள்ள அளவு உணர்ச்சி பொங்க எழுத முடியாமைக்கு இங்குள்ள நிலவரம் காரணம்.டில்லி தேசியத் தொலைக்காட்சியில் ஒரு விளம்பரத்தில் தண்ணீரைத் தெளித்து பாத்திரம் துடைப்பது,குளிப்பது,தண்ணீரை பாதுகாப்புப் பெட்டகத்தில் ஒளித்து வைப்பது பார்த்து இப்படியும் வருமா என்று யோசித்து அடுத்த கணமே அலட்சியமாய் கடந்து போவதுண்டு.கங்கையின் நிலவரம் தொலைக்காட்சியில் பார்த்து காசி போகும் ஆசையே வெறுத்தது.

தண்ணீர் நமது ஜீவாதாரம்.காடுகள் நமது வாழ்வாதாரம். தேடல் வாழ்வில் அவசியம் தான்.ஆனால் தேடல் மனிதனின் தேவைகளைப் பெருக்குகிறது.தேடித்தேடி அழிவை அழைத்து வருகிறோம்.மரண பயமும்,நோயும் மனிதனை பயமுறுத்தும் அளவு வேறெந்த உயிரினத்தையும் பயமுறுத்துவதில்லை.பூமியை அழிப்பதில் முழுமையான பங்கு வகிப்பவனும் மனிதனே.அந்தமானில் ஒரு தனியார் தொண்டு நிறுவனம் ஆரம்பித்து வைத்த ஒரு நற்செயலை ஆசிரியர்கள் தொடர்கிறார்கள்.அது என்ன தெரியுமா? வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்று வளர்ந்தவர்களிடம் சொல்லித் தோற்றவர்கள் பிஞ்சுகளிடம் ஒவ்வொரு வருடமும் ஒரு மரக்கன்று கொடுத்து நடச்சொல்லி,யார் நன்றாக வளர்க்கிறார்களோ அவர்களுக்கு விருது அளித்து சிறப்பிக்கின்றனர். அவர்களின் ஊக்கத்தைச்சொல்ல வேண்டுமா? அதோடு இங்கு மரம் வேண்டிய இடங்களில் வளர்ப்பதையும்,வேண்டாத இடங்களில் இருந்து நீக்குவதையும் பொதுப்பணித்துறை சிறப்பாகச்செய்கிறது.காடுகளை வனத்துறை பாதுகாக்கிறது.இந்தியாவில் தேசியமாகிப்போன லஞ்சலாவண்யங்களால் நடக்கும் முறைகேடுகளில் பெரிய மனிதர்,அவர்களின் உறவினர்கள் வீடுகளுக்கு கதவுகளாக,ஜன்னல்களாக,மரச்சாமான் களாக அந்தமான் தனது காட்டுவளத்தைத் தாரை வார்த்துக் கொண்டுதானிருக்கிறது.நடக்கட்டும்.நாங்கள் சாமான்யர்கள்.வேறென்ன செய்யப்போகிறோம்? பார்வையாளர்களாயும்,ஊமை சாட்சிகளாயும்இருப்பதைவிட்டு !.

8 கருத்துகள்:

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

அருமையான கட்டுரை சாந்தி மேடம்.

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

தொடர்ந்ததற்கு நன்றி சாந்தி,

உங்கள் ஊர் பற்றிய விவரங்களையும் தெரிந்துகொண்டோம்.

Thenammai Lakshmanan சொன்னது…

சும்மா நச்சுன்னு ஒரு இடுகை இது சாந்தி அந்தமான் பற்றியும் தெரிந்து கொள்ளமுடிவது இதன் சிறப்பு

மாதேவி சொன்னது…

நல்ல இடுகை.அந்தமானில் தண்ணீர் பற்றி அறிந்து கொண்டோம்.

பாடசாலை சிறுவர்களிடம் மரக்கன்று கொடுத்து விருது அளிப்பது பாராட்டுக்குரியது.

முகுந்த்; Amma சொன்னது…

முதன் முதலாக உங்கள் தளத்திற்கு வருகிறேன். அந்தமான் பற்றி நெறைய செய்தி தெரிந்து கொண்டேன். நெறைய விவரங்கள் அளித்து உள்ளீர்கள் நல்ல இடுகை.

சந்தனமுல்லை சொன்னது…

தொடர்ந்தமைக்கு நன்றி சாந்தி!

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க...அந்தமான் பற்றிய தகவல்களுக்கு நன்றி!

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

தொடர்ந்து எழுதுங்கள்
வாழ்த்துகள்,
மு.இளங்கோவன்
புதுச்சேரி

சாந்தி மாரியப்பன் சொன்னது…

நல்ல தகவல்களுக்கு நன்றி சாந்தி.