சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

வியாழன், செப்டம்பர் 08, 2011

பரிணாமம்




வேற்றுமை நிறைந்த போர்க்குண பூமியில்
பிரளயம் பசியதொரு அசுரனைப்போல

அன்பு நடமாடும் இல்லங்கள்
சுயநலமறுத்த உள்ளங்கள்
நோவாவின் கப்பலாய்…

வானுக்கும் பூமிக்கும் நீர்த்திரையிட்டு
போர்க்கருவிகளையும்,
தீய குணங்களையும் தின்று செரித்து,
கசடுகளையும் கழிவுகளையும் கழுவிப்போட்டு
எஞ்சியவற்றை
யுகங்களையெல்லாம் வயிற்றில் நிரப்பிய
சமுத்திரத்தில் சேர்த்து
விடைபெற்றது பிரளயம்.

நிலவரம் அறிய புறாவாய் நான்
பூமியின் வெளிகளில்.
அன்பின் வெளிச்சத்தில்
பூரித்துக்கிடக்கிறது பசுமை
தாய்மையின் விகசிப்பில் சுரக்கும் முலைப்பாலாய்
பசுமையின் வேர்களில் பாய்கிறது நீரோடைகள்
தென்றலாய்த்தழுவி
நலம் விசாரிக்கிறது காற்று.

எனது, உனது என்ற கோடுகளற்று
நமதாக விரிந்து கிடக்கிறது நிலப்பரப்பு.
இரவில் இறங்கி வந்து
இருளைக்கிழிக்கும் நட்சத்திரங்கள்
ஜொலித்துக்கொண்டிருக்கிறது பூமி
இன்னொரு சொர்க்கத்தைப்போல.

” எவரின் உள்ளத்தில்
எனதென்ற எண்ணம் தோன்றுமோ
அவரின் உடல் சுக்கு நூறாய்ச்சிதறும்”
விக்ரமாதித்தனின் வேதாளமாய் சொல்லிச்சென்றது
வெள்ளுடை தேவதை ஒன்று.


தேவைகளற்ற மனங்களோடு,
எனதென்ற எண்ணங்களற்று,
கடவுள் பாதி மிருகம் பாதி மனிதன் என்றது போய்
மிருகம் அழித்து கடவுள் வளர்த்து பரிணாமம் பெற்றது மானுடம்.
அப்போது சிறகுகள் முளைத்தது.

0 கருத்துகள்: