சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

திங்கள், பிப்ரவரி 15, 2010

ஒரு வார்த்த........


பிப்ரவரி மாதம் முதல் தேதியிலிருந்து வலைப்பூக்களில் காதல் ஜுரம் மெல்ல ஆரம்பித்து,பரவி,உச்சகட்டமாக 13ம் தேதியன்று தகிக்க ஆரம்பித்துவிட்டது.எல்லா வலைப்பூவிலும் காதல் கவிதைகள்,காதல் கட்டுரைகள்,மலரும் நினைவுகள்,பதின்ம வயதுப்பதிவுகள் இப்படி வயதிற்கேற்றாற்போல் விரிந்த பதிவுகள் அழகு. சில உருகி வழிந்த கவிதைகள்,சில உருக்கி வார்த்த கவிதைகள்,சில அனுபவக்கட்டுரைகள்,சில படிப்பினை தரும் கட்டுரைகள்,சில ரசிக்கும் படியான பால்ய காலப்பகிர்வுகள்,சில சிரிக்க,சிந்திக்க வைத்த சிந்தனைகள் இப்படி வலைகளில் சிரித்த விதவிதமான காதல் பூக்கள்.இன்னும் இதில் ஒரு சுவாரஸ்யம், சில இடுகைகளில் பின்னூட்டங்கள் வாய்விட்டு சிரிக்க வைத்தது.காதல் என்ற உணர்வு ஒவ்வொரு இதயங்களையும் எப்படி ஊடுருவி, வலிகளையும்,அனுபவங்களையும்,வடுக்களையும் விட்டுச்சென்றதை அறிய வரும்போது நமக்கும் வலித்தது.சிலரின் கவிதைகள் குறிப்பாக குடும்பங்களைப்பிரிந்து அந்நிய தேசங்களில் வாழும் நண்பர்களின் பதிவுகள் சங்கடப்படுத்தியது.காதலைக்கூட தவணைமுறைகளில் பரிமாறவேண்டிய நிர்ப்பந்தம்.பெரும்பாலான நண்பர்கள்,சகோதரர்கள் நேர்மையாக தங்கள் கடந்த காலத்தை பகிர்ந்து கொள்ள,சிலர் அடுத்தவர்களின் வடுக்களை கிளறி,வலிகளை மீட்டுவந்தது வருத்தமாக இருந்தது.இது தவறில்லையா? வாழ்க்கையில் எல்லாக்காதலும் வெற்றி பெற்றுவிடுவதில்லை.வெற்றி பெற்ற பலரில் சிலரும்,தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்திருக்கலாமோ? என்ற நிலைக்குத்தள்ளப்பட்டவர்கள் தான்.

என்னுடைய கல்லூரி காலத்தில் நான் சுமாராக எழுதுவதால் நிறையத் தோழியர் தங்கள் காதலருக்கு கவிதை எழுதி வாங்கிக்கொள்வதுண்டு.உருகி,உருகிக் காதலித்தார்கள்.அது அவர்களின் நிழலுக்கும் தெரியாமல் பார்த்தும் கொண்டார்கள்.கல்லூரிக்காலம் முடிந்து விடைபெற்று,காலம் கடந்து அவர்களின் திருமண அழைப்பிதழ் வந்தது.ஒருவரின் திருமண அழைப்பிதழிலும் அவர்களின் காதலன் பெயர் இல்லை.நான் மாய்ந்து,மாய்ந்து அழுதேன் அவர்களுக்காக.பிறகு அவர்களை,கொண்டவர்,குழந்தைகள் சகிதம் பார்த்த போது நாணச்சிரிப்புடன் அறிமுகப்படுத்தியதோடு மட்டுமல்லாது,சிறந்த இல்லத்தரசிகளாகவும்,கணவரின் மனதை கொள்ளையிட்டவர்களாக ஆகியிருந்த அவர்களின் குணம் என்னை அசரடித்தது.எந்தக்கற்பிதங்களுக்கும் தங்களை ஆட்படுத்திக்கொள்ளாமல்,காலத்திற்கேற்ற படி தன்னை செதுக்கிக்கொண்ட அவர்களால் அவர்களின் குடும்பம் சிறந்தது.இதே என்னுடைய நெருங்கிய தோழி ஒருவர்,அவரிடம் ஒரு தோழி விளையாட்டாக,'அவன் உன்னையே பாக்குறாம்ப்பா!' என்று கூறப்போக,அவரோ,'ஆமா! அவனுக்கு கண்ணு இருக்கு பாக்குறான்.அதுக்காக நா பின்னாடியே போயிருவனா? நா உங்கள மாதிரி இல்ல' என்று சூடாக, சமாதானப்படுத்திய என்னிடம்,'இல்லப்பா! நமக்குன்னு அம்மா,அப்பா இருக்காங்க.அவங்களுக்குன்னு நம்மளப்பத்தி ஒரு கனவு இருக்கும்.அவுங்க யாரப்பாக்குறாங்களோ அவர்தான். அதே சமயத்துல அவர் எனக்கும் புடிச்சிருக்கனும். இவளுங்க மாதிரி கடந்து போறவுங்களை எல்லாம் இவனா? அவனான்னு அலை பாய்றதெல்லாம் நமக்குப்பிடிக்காது' என்றார்.அவரின் சுயம் வரத்தில் ஏகப்பட்ட மாப்பிள்ளைகள்.அவரின் எதிர்பார்ப்பிற்கேற்றார்போல் தோற்றமிருந்தால்,படிப்பில்லை,படிப்பிருந்தால் வசதியில்லை.ஒவ்வொன்றாகக் காரணம் காட்டி,ஒவ்வொரு மாப்பிள்ளையையும் தட்டிவிட்டவர் இன்று நாற்பதை எட்டியும் திருமணம் செய்யவில்லை.அவர் செய்த தவறு என்ன?காலத்திற்கேற்றாற்போல் ஒட்ட ஒழுகாதது.இன்னொரு தோழி பெண்பார்க்கும் படலத்தில் மாப்பிள்ளையை ஏறிட்டும் பார்க்கவில்லை. வெட்கப்படுகிறாளென்று நினைத்து பார்க்கச்சொல்லிக்கட்டாயப்படுத்திய போது, 'இல்லப்பா! இப்பல்லாம் மனையிலயே மாப்பிள்ள மாறுது,இந்தாளப்பாத்து ட்ரீம் அடிச்சுட்டு இல்லையின்னு ஆயிட்டா கில்டியாயிடும்' என்றார்.அவர் இன்று ஒரு பெண்குழந்தையோடு விவாகரத்தானவர்.காலநீரோட்டத்தில் சிலர் ஆங்காங்கே காரணங்களற்று தேங்கிப்போக வேண்டிய கட்டாயம்.இது தான் தலையெழுத்தென்பதா?.

காதலியுங்கள்.காதல் கைகூடாவிட்டால் கைகூடியவர்களைக்காதலியுங்கள்.வாழ்க்கை நமக்கு எதைத்தருகிறதோ, அதை ஏற்று வாழப்பழகுவது தான் வாழ்க்கை.காதல் தோல்வியில் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.(பெண்கள் மன்னிக்க) தாடி வளர்ப்பது,கவிதை எழுதுவது,வாழ்க்கையே வெறுத்துப்போய்,எல்லாவற்றையும் இழந்த மனப்பான்மையுடன் தன்னையே வெறுப்பது இப்படி.பிரபல தமிழறிஞர் உயர்திரு.தமிழருவி மணியன் அவர்கள் தமது காதல் தோல்வியினால்,கட்டிய மனைவியுடன் ஐந்து வருடங்கள் எந்தக்கிளர்ச்சியும்,மகிழ்ச்சியுமின்றி வெவ்வேறு அறைகளில் தான் இருந்தனராம்.அவரது மனைவியார் திருமதி.பிரேமகுமாரி அவர்கள்,அவரது தவத்தைக்கலைக்காமல்,பொறுமையாயிருந்து அவரது மனதை வென்றிருக்கிறார்.இன்று தமிழருவி மணியன் ஐயா அவர்களுக்கு எத்தனை பிறவி எடுத்தாலும் அந்த்ப்பொறுமையின் சிகரம் பிரேமகுமாரி அம்மா அவர்களே மனைவியாக வேண்டுமாம்.அவரைக்கலைத்த அந்தக்காதலி எங்கே?காதல் தோல்விக்கு வருந்தி வாழ்க்கையைத் தொலைத்தால் தான்,காதலை வாழ்விப்பதாய் அர்த்தமில்லை.காதலிக்கும் காலங்களில் கண்ணியத்தைக்கைபிடித்துக் காதலியுங்கள்.காதல் கைகூடா விட்டாலும் கூட குற்ற உணர்வின்றி மனதை வேறு வழியில் செலுத்தி,பிறகு உங்களை விரும்புகிறவரை கைப்பிடிக்கலாம்.இது காதலா என்கிறீர்களா? ஆனால் இதுதான் எதார்த்தம்.காதல் என்பது ஒரு விருப்பம்.அந்த விருப்பம் நிறைவேறாவிட்டால்,நிறைவேறும் சாத்தியமுள்ள ஒருவரை அடைவதில் தவறென்ன?

மனிதன் தோன்றிய நாள் முதலாய் போர்கள்,கண்டுபிடிப்புகள் எல்லாவற்றிற்கும் காரணம் பாலுணர்வு.அதாவது பெண்ணைக்கவரும் செயல்கள் தான்.மனிதனின் உந்து சக்தியே அந்த உணர்வு தான் என்கிறார்கள் மனவியலாளர்கள்.அதனால் தான் நமது பாரதி தாசனும் "கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டி விட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்" என்றாரோ? ஆதலினால் இளைய பாரதமே இந்தக்காதலர் தினத்துல கொசுவர்த்தி சுத்துனவுங்க எல்லாரும் கடந்த காலத்த சுவாரசியமா சுத்திவிட்டாங்க பாத்திங்களா? ஆனா அந்த காலகட்டத்துல ரொம்பவே வெறுமையா உணர்ந்திருப்பாங்க! காலம் கடந்ததும் அந்த இழந்த காதலே ஒரு படைப்பா மாறிடுச்சு.நீங்களும் காதலிங்க! தோல்வியா! இதெல்லாம் நடக்குமுன்னு மனச மாத்தி வேற பாதையில நடக்க ஆரம்பிச்சிடுங்க!.தாடி,மது,புகைன்னு போகாம,கவிதையோட ட்ராக் மாறிடுங்க.பொண்ணுங்களுக்கா? சொல்றதுக்கு ஒன்னுமில்லங்க! அவங்க ரொம்ப புத்திசாலிங்க!அடிச்சா சிக்சர்.இல்லாட்டி மூச்!

1 கருத்துகள்:

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

//.காதலிக்கும் காலங்களில் கண்ணியத்தைக்கைபிடித்துக் காதலியுங்கள்.காதல் கைகூடா விட்டாலும் கூட குற்ற உணர்வின்றி மனதை வேறு வழியில் செலுத்தி,பிறகு உங்களை விரும்புகிறவரை கைப்பிடிக்கலாம்.இது காதலா என்கிறீர்களா? ஆனால் இதுதான் எதார்த்தம்.காதல் என்பது ஒரு விருப்பம்.அந்த விருப்பம் நிறைவேறாவிட்டால்,நிறைவேறும் சாத்தியமுள்ள ஒருவரை அடைவதில் தவறென்ன?//

மிகச்சரியான வார்த்தைகள்

ஆனாலும் மீண்டும் எழுவறதுக்கு நெம்ப கஷ்டமா இருக்கே மேம்...!