சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

ஞாயிறு, ஜனவரி 10, 2010

ஆண் - பெண் நட்பு

          உலகம் தோன்றிய நாள் முதல் ஆணும்,பெண்ணும் ஒன்றாய் வசித்தாலும்,ஆணுக்குப்பிறப்பை பெண் கொடுத்தாலும் இருவரின் பயணப்பாதைகளும் வெவ்வேறு திசைகளில்.இருவரின் உணர்வுகள்,விருப்பங்கள்,வாழ்க்கை பற்றிய வரையறைகள் அத்தனையும் வெவ்வேறு.சங்க காலத்தில் ஆண்,பெண் நட்பை இலக்கியங்களில் காண்கிறோம்.அது கடந்து என்று பெண் போகப்பொருளாகவும்,போரின் வெற்றியின் மமதையில் நாடு கடத்தப்படும் வென்ற சொத்துகளாகவும் கருதப்பட்டாளோ, நாடு அடிமைப் பட்டபோது பிறரிடம் தங்கள் பெண்களைக் காப்பாற்ற பூட்டப்பட்டாளோ அன்றே பெண்ணடிமை கருவாகி,உருவாகி,விஸ்வரூபமாகி, அவளை உடன் கட்டையேற நிர்ப்பந்திக்கும் கொடுமைகளும் நடந்தேறிய புண்ணியபூமி இது.சமூக அக்கறை கொண்டோர்,தமது வாழ்நாளை பெண்ணடிமை தீருமட்டும் போராடிச்சென்றதும் நாம் அறிவோம்.அடிமைப் பட்ட பெண்குலம் தன் அடிமைத்தளை அறுக்க போராடிப்போராடி இன்று ஒரளவு வென்றும் காட்டிவிட்டது. என்று உலகமயமாக்கலின் தாக்கத்தில் உலகமெங்கும் பயணப்பட இந்தியப் பெண்கள் தலைப்பட்டார்களோ அன்றே ஆண்,பெண் நட்பு தவிர்க்கமுடியாததாகி விட்டது.ஆனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத,ஒரு ஆணுக்கும்,ஆணுக்கும் உள்ள நட்பைப்போல,ஒரு பெண்ணுக்கும்,பெண்ணுக்கும் உள்ள நட்பைப்போல இயல்பான நட்பாக மலர்ந்திருக்கிறதா என்பதற்கு நட்புக்கொண்டோர் தான் பதில் சொல்ல வேண்டும்.இனக்கவர்ச்சி தாண்டி, அப்படி ஒரு இயல்பான நட்பு இருந்தால் தான் நம் சமுதாயம் உயர்வு என்கிற அடுத்த தளத்தை நோக்கி பயணப்படுகிறது என்று அர்த்தம்.


       சில ஆண்களின் கற்கால வேட்டை புத்தி கண்களில் தெரியும்.ஆனால் கண்ணிய வேடமிடும்.ஒவ்வொரு ஆணுடன் பழகும் போதும் இயல்பற்று ஒரு எச்சரிக்கை உணர்வோடு பழகவேண்டிய கட்டாயம் ஒவ்வொரு பெண்ணுக்கும்.வேற்று கோள்களுக்குப்பயணம் செய்யும் இந்த புது யுகத்திலும் பெண்ணை அவளது உடல் தாண்டிச்சிந்திக்க நாம் கற்றுக்கொடுக்கவில்லை.ஒரு பெண்ணை அவளது உணர்வுகளோடு,பின்புலத்தோடு பார்த்து,உண்மையான தோழமை கொண்டாட நம் சமுதாயம் கற்றுக்கொடுக்கவில்லை.உண்மையான தோழமையோடு பழகும் சிலரையும்,வேட்டை புத்திகொண்ட பலர் 'நபும்சகர்கள்' என்று விமர்சிக்கப்படும் நிலை தான் இன்றுள்ளது.ஆண்மை எனப்படுவது பிறன் மனை விழையாமை.ஆண்மை எனப்படுவது உரிமை உள்ள பெண்ணிடம்,விருப்பமுள்ள பெண்ணிடம் மட்டுமே உறவுக்கு மனுப்போடுவது. தோழமை என்று நெருங்கிப்பழகும் ஒவ்வொருவரிடமும் ஒரு பயத்துடன் பழகும் நிலை தான் இன்று.திருமணமே வேண்டாம் என்றிருந்த ஒரு பெண் இந்தக்கொடுமைகளைப் பொறுக்கமுடியாது திருமணம் புரிந்தார்.ஒரு நேர்முகத்திற்குச்சென்ற ஒரு பெண்ணிடம் அறுபதுகளில் இருந்த தமிழ்நாட்டில் இருந்து மாற்றல் வாங்கிவந்த அந்தத்தமிழ் அதிகாரி ,"நீ வேலைக்கு வரவேண்டாம்.சம்பளம் வீடு தேடிவரும்.ஆனால்..." என்று இழுக்க அந்தப்பெண் ஓடிவந்தவர் அழுத அழுகை இன்றும் கண்களிலேயே இருக்கிறது.ஒரு பெண்ணை மடக்குவதா, ஒரு ஆணின் ஆண்மைக்கு அழகு? எத்தனை நிர்ப்பந்தம் ஒவ்வொரு பெண்ணுக்கும்?பரஸ்பரம் மதித்தல்,பரஸ்பரம் தோள்கொடுத்தல்,பரஸ்பரம் நம்பிக்கை கொடுத்தல் இதுதானே நல்ல தோழமையை,நட்பை உருவாக்கும்.

          அந்தமானில் சமூகச்சீரழிவுகள் நிறைந்து கிடக்கின்றன தான்.ஆனால் விருப்பமற்ற பெண்களை விரட்டி வேட்டையாடுவது,பேருந்துகளில் சீண்டுவது (பேருந்துகளில் ஆண்,பெண் பேதமின்றி அருகருகே அமர்ந்து செல்வோம்.அநாகரீகமாக நடந்து கொள்ளும் பயணிகளைக்கணக்கெடுத்தால் அது உயர்ந்த நாகாரீகத்தமிழினத்தின் பிரதிநிதியாகத்தான் இருக்கும் என்பது தான் வேதனை)விரசமான குறுஞ்ச்செய்திகள் ,மின்னஞ்சல் அனுப்புவது,இதெல்லாம் கிடையாது.

 இன்றைய சூழ்நிலையில் ஆண்,பெண் தோழமை தவிர்க்கமுடியாதது.பெண்ணை மதிக்காத சமூகம் உயரமுடியாது.ஆணுக்கும்,பெண்ணுக்கும் ஆபரணங்கள் பார்த்து ஒதுங்கிச்செல்லச்சொல்லிக்கொடுத்தது நம் சமூகம்.குடும்ப உறவுகளைச்சீரழிக்கும் நட்புகள்,பிறன்மனை விழையும் நட்புகள்,உள்ளொன்று வைத்து புறமொன்று பழகும் எதிர்ப்பாலின நட்புகள் தவிர்க்கப்பட்டால் ஆரோக்கியமான சமுதாயம் உருவாகும்.என்ன கொடுக்கிறோமோ அதுதான் நமக்கும் நம் வாரிசுகளுக்கும் திரும்பக்கிடைக்கும் என்பது உலக நியதி.அடுத்த பெண்களை மதிக்கத் தெரியாத ஆண்களின் வீட்டிலும் பெண்கள் இருப்பார்கள் இல்லையா? அந்தப் பெண்களும் மதிக்கப்பட வேண்டுமெனில் ஒட்டுமொத்தப் பெண்களையும் மதிக்கப்பழகவேண்டும்.பெற்றோர் ஒவ்வொரு ஆண்குழந்தைக்கும் அதைச்சொல்லிக்கொடுக்க வேண்டும்.ஒரு உரிமையற்ற பெண்ணைக்கண்டதும் இழிவான எண்ணங்கள் ஒரு ஆணுக்குத் தோன்றினால் அவர் சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டியவரேயன்றி ஆண்மைமிகுந்தவர் என்று கொண்டாடமுடியாது.அழகை ரசியுங்கள்.பூங்காவனங்களின் பூக்களை ரசிப்பதில்லை அப்படி! ரசனை உள்ள மனதில் ஈரம் இருக்கும்.ஈரமுள்ள மனது தான் ரசிக்கும் எந்த அழகையும் காயப்படுத்த விரும்பாது.நமது பாவங்களுக்கு பாரம் சுமக்கும் முதுமையில் உறுத்தலின்றி வாழவேண்டுமெனில் பருவகாலத் தவறுகளைத்தவிர்ப்பது தான் புத்திசாலித்தனம்.


  அந்தமானைப்பொறுத்தவரையில் பள்ளிக்குழந்தைகள்,கல்லூரி மாணவர்கள்,அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் இடையில் நல்ல,விகல்பமில்லாத நட்பு முறை இருக்கிறது.ஆண்,பெண் பேதமின்றி இயல்பான நட்பு,சகோதர உறவாக மலர்கிறது.பல்வேறு கலப்புக்கலாச்சாரம்,ஊடகங்களின் தாக்கம்,கலப்புமணம் மலிந்த பகுதி என்பதால் அறியாமை காரணமாக கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்கிற போக்கு இருந்தாலும் கூட தாயகத்தை விட சுதந்திரமான,சுயம் உணர்ந்த நட்புமுறை நிலவுகிறது.

0 கருத்துகள்: