சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

ஞாயிறு, ஜனவரி 10, 2010

தனிமை

பெண் பிறவியின்
ஆகக்கடைசி முற்றுப்புள்ளி
ஆண்மகன் உறவென்ற சமூகச்சடங்கை
சுதந்திரம் வேண்டி
சுயத்தை நிலைப்படுத்த
சராசரிக்கும் மேலாய் என்னை உணர்த்த
சுயம்வரம் தவிர்த்த என் சிந்தனை
கர்வம் தந்தது பருவத்தில்...

துணையுடன்
தோள் உரசி நடக்கும் பெண்களைக் கடக்கையில்,
புன்னகைப்பூக்களை
எச்சிலோடு ஒழுகவிடும்
மழலைப்பூக்களை அள்ள
மனம் துடித்து கரங்கள் நீள்கையில்
வெளிகள் கடந்து வீடு மீள்கையில்
சுவற்றில் மோதி முகத்தில் அடிக்கும் ஏகாந்தமதில்
மனம் வெறுமையில் நிறைகையில்
விரிந்த வானமதில்
ஒற்றை நட்சத்திரமாய் நான்
ஒளிர்கையில்....

மனம்
மறுத்த அபத்தங்களை
மறுபரிசீலனை செய்ய முயல்கிறது.
'இவள் இப்படித்தான்' உறவுகளின் மனங்களில்
படிமக்குறியீடாய் படிந்து போன நான்
எப்படிச்சொல்வது
"எனக்கும் துணை வேண்டும்" என்பதை.

0 கருத்துகள்: