சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

திங்கள், பிப்ரவரி 22, 2010

அந்தமான் கதம்பம்.


அன்பு நண்பர்களே! கதம்பம் என்றதும் பூவோடு சம்பந்தப்பட்டது என்று நினைத்தீர்களா? அந்தமானில்,"பூ" பற்றி மட்டும் பேசக்கூடாது.ஒரு முழம் பூ இருபது ரூபாய்.கதம்பம்,கனகாம்பரம்,மல்லி,வாசமில்லா முல்லை,அனைத்தும் ஒரே விலை.ஒற்றை ரோஜா பத்து ரூபாய். இதுவே ஆயுத பூஜை,கோவில் திருவிழா,பண்டிகைகள் இப்படி நல்ல நாட்களில் இன்னும் விலை கூடும் (அக்கா! அங்க கோயம்பேடுலயே பூக்கெடைக்கல.நீங்க இப்பதான் பேரம் பேசிக்கிட்டு) அப்படியே வாங்கினாலும் நாளும் கிழமையுமாக சாஸ்திரத்துக்கு சூடிக்கொள்வதோடு சரி.அவ்வளவு அழகாகத் தொடுக்கப்பட்டிருக்கும்.ஒரு இன்ச் விட்டு அடுத்த கண்ணி இருக்கும். அதனால் பூச்சுடும் ஆசை மறந்து பார்க்கும் ஆசையை மட்டும் வளர்த்துக்கொண்டிருக்கிறோம். (எப்புடி?).கடவுளர்களுக்காகவே செம்பரத்தையில் சிவப்பு,வெள்ளை,இளம் சிவப்பு,அடுக்கு செம்பரத்தை இப்படி இருக்கவே இருக்கிறது! அத விடுங்க! இப்ப நா சொல்ல வர்றது அந்தமான் குறித்த சில கதம்பத் தகவல்கள்.

அந்தமான் அச்சடினா நத்தை
அந்தமான் அச்சடினா நத்தைகள் கோடைகாலத்தில் உறங்கும்.மழைக்காலத்தில் விழித்தெழுந்து உலா வரும்.தெருவெங்கும் ஊறித்திரிந்து வண்டிகளிலும்,கால்களிலும் அடிபட்டு உயிர் விடும் இந்த நத்தைகள் 8 முதல் 9 செ.மீ வரையிலும் சில 20 செ.மீ. முதல் 30 செ.மீ வரை நீளம் இருக்கும்.ஆப்பிரிக்காவில் இந்த நத்தை தான் உணவாகப் பயன் படுகிறது என்கிறார்கள்.இந்நத்தைகளின் ஆயுட்காலம் சுமார் ஐந்து ஆண்டுகள்.அதற்குள் ஒரு நத்தை கிட்டத்தட்ட 1000 முட்டைகளை இட்டுவிடும்.

அந்தமான் திருட்டு நண்டு
"பர்கஸ் லாட் ரோ" என்ற ஒரு வகை. அடர்த்தியான நீல நிறத்திலிருக்கும் இந்த நண்டுகள் இரவினில் திருட்டு.பகலில் பதுங்கும். இரவு நேரத்தில் தேங்காய்களைத் திருடுகின்றன.Robber crabs என்று சொல்லப்படும் இந்த நண்டுகள் தென்னை மரங்களில் ஏறி தேங்காயைப்பறித்துக் கீழே போட்டுவிட்டு,இறங்கித் தேடி எடுத்து உரித்து,அதன் தடித்த கால்களால் உடைத்து,தண்ணீரைக்குடித்து,பருப்பையும் சுரண்டித் தின்னும். இந்த வகை நண்டுகள் தென் சென்டினல் தீவில் வசிக்கிறது.தென்னையில் ஏறும் போது தலையை நிமிர்த்திக்கொண்டு ஏறி, இறங்கும் போது தலைகீழாக இறங்கும்.இந்த நண்டுகளால் சுமார் 28 கிலோ எடையை சுமக்கவும்,30 கிலோ எடையை இழுத்துச்செல்லவும் முடியும்.

அந்தமான் சிப்பிகள்,கிளிஞ்சல்கள்
அந்தமான் கடலில் முத்துப்போல் ஒளிரும் டர்போ,டிராகஸ் மற்றும் நாட்டிலஸ் கிளிஞ்சல்கள் ஏராளமாகக் கிடைக்கின்றன.ஆண்டு தோறும் பல நூற்றுக்கணக்கான டன் கிளிஞ்சல்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.ஒரு டன் கிளிஞ்சல்களை சுத்தம் செய்தால் 25 விழுக்காடு இறுதிப்பொருள் கிடைக்குமாம்.இந்த கிளிஞ்சல்களில் ஆபரணங்கள்,அழகுப்பொருட்கள் தயாரிக்கிறார்கள்.இதற்கான பயிற்சியினை அரசாங்கமே தருகிறது.மின்னும் இந்தக் கிளிஞ்சல்களை அழகாக வடிவமைத்து தங்கத்திலும் பதித்துக்கொள்ளலாம்.சங்குகள்,ராஜா கிளிஞ்சல்கள் இங்கு கிடைக்கும்.

நண்டு தின்னும் குரங்குகள்
குரங்குகள் பெரும்பாலும் தாவரப்பட்சினி தான்.ஆனால் அந்தமான்,நிகோபார்த் தீவுகளில் கட்சால்,கிரேட் நிகோபார் முதலிய தீவுகளில் ,"Macaque" எனப்படும் ஒரு வகைக்குரங்குகள் வாழ்கின்றன.இவை கடற்கரை ஓரங்களில் வாழும் கரு நிற நண்டுகளை (நம்மூர் வயல் நண்டு) பிடித்து உண்கிறது.

நர்கொண்டம் ஹார்ன்பிள்
அந்தமான் தீவுகளில் ஒன்றான நர்கொண்டம் தீவில் காணப்படும் இந்தப் பறவை உருவில் பெரியது.மாட்டுக்கொம்பு போன்ற பெரிய அலகு உள்ளதால் கொம்பு மூக்கன் என்ற பெயருமுண்டு.மரப்பொந்துகளுக்குள் கூடுகட்டி வாழும் இந்தப்பறவையில் தாய்ப்பறவை குஞ்சுகளுடன் வாழ ஆண் பறவை வெளியில் சென்று உணவு தேடிவரும்.அப்படி வெளியே செல்லும் போது களிமண்ணால் மரப்பொந்தின் வாயை அடைத்து விட்டுச்செல்லுமாம்.

உலகின் நீண்ட நாள் சிறைவாசி
உலகில் நீண்ட நாள் சிறைவாசம் செய்தவர் முகாய்சிங் அவர்கள்.1857ம் ஆண்டு கிளர்ச்சியில் ஈடுபட்டு மூர் என்ற ஆங்கில நீதிபதி ஒருவர் மற்றும் இரு ஐரோப்பியரையும் கொலை செய்த குற்றத்திற்காக அந்தமான் கூண்டுச்சிறையில் அடைக்கப்பட்டார்.1907ம் ஆண்டு வரை சிறையில் இருந்து தமது 71வது வயதில் சிறையிலேயே காலமானார்.மொத்தம் 47 ஆண்டுகள் சிறையிலிருந்த இவரது சிறைவாசம் ஒரு உலகசாதனையாகும்.

மஜார் பகார்டு
மஜார் பகார்டு மசூதி ஒரு வழிப்பாட்டுத்தலம்.இஸ்லாம் சகோதரர்கள் மட்டுமல்ல.இந்து மக்களும் வழிபடும் சக்தியுள்ள ஒரு தலம்.இங்கு ஆடு வெட்டி,பொது மக்களுக்கு அன்னதானம் செய்வார்கள்.மொகலாயப்பேரரசரின் அவையில் தலைமை நீதிபதியாக இருந்த பாசல் ஹக் ஐதராபாதி மற்றும் படைத்தளபதியாக இருந்தவர் மௌலானா லியாகத் அலி என்ற இவ்விரு அறிஞர்களும் விடுதலைப்போராட்ட தியாகிகள்.1857ம் ஆண்டு விடுதலைப்போராட்டத்தில் கலந்து கொண்டு,அந்தமான் கூண்டுச்சிறைக்கு வந்து 1861ம் ஆண்டு தம் தண்டனை காலத்திலேயே இறந்து விட்டனர்.அவர்களை அடக்கம் செய்து எழுப்பப்பட்ட கல்லறைகள் இன்று வழிபாட்டு மையமாக மாறியிருக்கிறது.

சிறையில் துஞ்சிய சிற்றரசர்கள்.
அந்தமான் கூண்டுச்சிறையில் இந்திய மாகாணச்சிற்றரசர்கள் பலர் அடைக்கப்பட்டிருந்தனர்.1879ம் ஆண்டு ஒரிஸ்ஸா மாநிலத்தில் உள்ள ஜெகன்னாத் பூரியின் சிற்றரசர் பிரிஜ் கிஷோர் சிங் தேவ்,1891 ம் ஆண்டு மணிப்பூர் மன்னர் குலச்சந்திரா, அவரது இளவல் அங்குசானா, சம்பல் பூரின் ஹத்தே சிங் ஆகியோர் கூண்டுச்சிறையில் அடைக்கப்பட்டு,மரணதண்டனை பெற்றனர்.அவர்களது உடல் இங்குள்ள தண்டுஸ் முனை என்னுமிடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

ஆமைகளின் அந்தப்புரம் அந்தமான்.
தென் சென்டினல் தீவில் பச்சை ஆமைகள் ஏராளமாக வசிக்கிறது.ஒவ்வொன்றும் 450 முதல் 750 கிலோ வரை எடை உள்ளது.சுமார் 150 முட்டைகள் இடும்.கடலில் இருந்து கரைக்கு வந்து குழிகளைத் தோண்டி முட்டைகளை இட்டுவிடும்.வெளிநாடுகளில் ஆமை சூப்,ஆமை முட்டை ஆம்லெட் என்று உண்டாலும் நம்மவர்கள் இன்னும் ஆரம்பிக்கவில்லை என்று நினைக்கிறேன்.சமயத்தில் கடலில் snorkeling செய்யும் போது ஆமைகளின் தரிசனம் கிடைக்கும்.

திமிங்கிலம்
அந்தமான் கடலில் கொழுப்பைத் தலையில் சேமித்து வைத்திருக்கும் திமிங்கிலங்கள் அதிகமாக வாழ்கின்றன.இக்கொழுப்புத்திமிங்கிலங்கள் 900 அடி ஆழத்தில் வாழ்கின்றன.இத்திமிங்கிலத்தின் குடல் பாதையில் ,"அம்பர் கிரீஸ்" என்ற சிறிய சாம்பல் நிறமான கோந்து போன்ற ஒரு பொருள் காணப்படுகிறது.திமிங்கிலம் உண்ணும் ராட்ஷச ஸ்குவிட் மீன்களின் கூர்மையான அலகு பாய்ந்து விடாமல் தன்னைக்காத்துக்கொள்ள இந்த அம்பர்கிரீஸ் பயன்படுகிறது.அவ்வப்போது திமிங்கிலம் வெளியிடும் இந்த அம்பர் கிரீஸ் கடலில் மிதந்து வந்து கரை சேரும்.இது வாணிப முக்கியத்துவம் வாய்ந்த விலையுயர்ந்த பொருள்.இதிலிருந்து தரமான வாசனைப்பொருட்கள், மருந்துப்பொருட்கள் தயாரிக்கப்டுகிறதாம்.

அந்தமான் பறவைகள்
அந்தமானில் மொத்தம் 246 வகைப்பறவைகள் உள்ளன. இதில் 39 வகை அழிவின் விளிம்பில் இருக்கிறதாம். அந்தமானின் தேசியப்பறவை "wood pigeon" எனப்படும் பறவை.இந்தப்பறவை சாதாரண புறாவைப்போல தோற்றமிருந்தாலும் இதன் வால் நீளம்.இதன் கழுத்தில் கட்டம் கட்டமான அமைப்பும்,தலை வெண்மை நிறமாகவும்,இறக்கைகள் அடர் அரக்கு நிறத்திலும் இருக்கும்.மெகா போட்,ஹார்ன்பிள்,அந்தமான் டீல்,நிகோபார் புறா ஆகியன குறிப்பிடத்தக்கவை.இது போக இடப்பெயர்ச்சி அடைந்து வரும் பறவைகள் நீரில் நடக்கும் பறவை,நீர் காக்கை,குயில்,நீள் சிறை ஆகியன.

அந்தமானின் சில்லறை தகவல்கள்.
அந்தமான் தீவுகளில் சுமார் 600 ஹெக்டேருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் ரப்பர் தோட்டமும்,சுமார் 2400 ஹெக்டேர் நிலப்பரப்பில் செம்பனைத் தோட்டமும்(பாமாயில்) உள்ளது.இங்கு பர்மாவின் கரேன் மக்கள்,இலங்கை மற்றும் பங்களா தேஷ் அகதிகளும் வசிக்கிறார்கள்.அந்தமானில் பசுமை மாறாக்காடுகள்,இலையுதிர்க்காடுகள்,மலைச்சரிவுக்காடுகள்,மாங்குரோவ் காடுகள்,கடலோரக்காடுகள் என ஐந்து பெரும் காடுகள் தீவுகளெங்கும் நிறைந்துள்ளன.அந்தமான் காடுகளில் 110 வகையான மலர்கள்,நூற்றுக்கணக்கான மூலிகைகள் நிறைந்துள்ளது.இங்கு குட்டிப்பாம்பு அளவில் காட்டுப்பூரான்கள் இருக்கிறது(அது கடித்த கதை தனிப்பதிவில்)அந்தமான் கடல் வளங்களைக்கொள்ளையடிக்கும் வெளிநாட்டவர்களை கடலோரக்காவல் படையினர் பிடித்து அவர்களின் கப்பல்,படகுகளைப்பறிமுதல் செய்வதும் நடக்கிறது.பெரும்பாலானவர்கள்இலங்கை,பர்மா,இந்தோனேஷியா,தாய்லாந்து நாட்டவர்கள்.இவர்களைக் கைது செய்து தண்டனை முடிந்ததும் அவர்களது அரசு விடுவித்து அழைத்துச்செல்லும் வரை அந்தமானில் தங்குவதற்கும்,இலவச உணவிற்கும் ஏற்பாடு செய்து தரப்படுகிறது.

இத்துடன் கதம்பச்செய்திகள் நிறைவு பெறுகிறது.மீண்டும் சந்திக்கும் வரை வணக்கம் நேயர்களே! அட! பழக்க தோஷங்க!

7 கருத்துகள்:

வடுவூர் குமார் சொன்னது…

ப‌ல‌ விப‌ர‌ங்க‌ளை அருமையாக‌ தொகுத்து அளித்த‌த‌ற்கு மிக்க‌ ந‌ன்றி.
உப‌ த‌லைப்புக‌ளுக்கு வேறு க‌ல‌ரில் எழுத்து இருந்தால் இன்னும் ந‌ன்றாக‌ இருந்திருக்கும் பார்வைக்கு.

Paleo God சொன்னது…

அருமை..
படங்கள் கிடைக்கவில்லையா?
--
தொடருங்கள் சகோதரி..:)

சந்தனமுல்லை சொன்னது…

தகவல்களுக்கு நன்றி சாந்தி மேடம்! சுவாரசியமாக இருந்தது- சில இடங்களில் திடுக்கென்றும். அதுவும் நீண்ட நாட்கள் ஜெயிலிலே இருந்து மரித்து போனவரைப் பற்றி கேட்டதும்!

Thenammai Lakshmanan சொன்னது…

அந்தமானைப்பற்றி உபயோகமான தகவல்கள் நன்றி சாந்தி பகிர்வுக்கு

க.நா.சாந்தி லெட்சுமணன். சொன்னது…

வடுவூர் குமார் அவர்கள்,ஷங்கர்,முல்லை,
தேனம்மை அக்கா கருத்துரைக்கு நன்றி!
குமார் அவர்களின் யோசனைக்கு நன்றி.
நிறம் மாற்றியாகிவிட்டது.

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

செய்தியும் வடிவமைப்பும் சிறப்பு.
பாராட்டுகள்.
மு.இளங்கோவன்
புதுச்சேரி

Unknown சொன்னது…

விபரங்கள் அனைத்தும் பயன் உள்ளதாக இருக்கிறது.நன்றி