சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

புதன், டிசம்பர் 16, 2009

நாய்க் குட்டி வேணுமா?




             என் மகன் குழந்தையாக இருந்த போதிலிருந்து இன்றுவரை( இப்போது அந்தப் பெரிய மனுசனுக்கு 15 வயது) கண்கள் விரிய,உதடுகள் ஈரத்தில் மினுமினுக்க,வாய் கொள்ளா சிரிப்புடன் முகம் சந்தோசத்தில் மின்ன வலது கை முதுகில் மறைத்து இடது கை வீசி வந்தால் கேட்கவே வேண்டாம்.அவன் மறைத்த கைகளில் குட்டி நாய் இருக்கும்.'அம்மா! நாம வளப்போம்மா!' என்பான் கொஞ்சலாக.அவன் சந்தோசத்தைக் கெடுக்க விரும்பாமல் சரிப்பா என்று சொல்லி விட்டு அவன் பள்ளி சென்றதும் எங்கிருந்து கொண்டு வந்தானோ அங்கே கொண்டு போய் விட்டு வந்து விடுவது வழக்கம்.இப்படி சிறு குழந்தையாக இருந்த போது நாய்களிடம் கடி வாங்கி ஊசி போடுவதும் வழக்கம்.

   சற்று பெரிய பிள்ளையானதும் என் தந்திரங்கள் அவனிடம் எடுபடவில்லை.நாய்க்குட்டிகளைக் கொண்டு வருவதும்,சில நாள் வளர்ப்பதும் பிறகு அவை தன்னாலேயே வேறு எங்காவது போய் விடும்.இப்படி கொஞ்ச நாள்.பிறகு வேறு வீடு மாறியதும் பக்கத்து வீட்டின் தமிழ்க்குடும்பம் ஒரு நல்ல,அழகான நாய் வளர்த்து வந்தார்கள்.என் மகனுக்கு சந்தோசம் பிடிபடவில்லை.இவனுடன் அதுவும் ரொம்பவே ஒட்டிக்கொண்டுவிட எனக்கும் இவனுடைய நாய் புராணம் விட்டது என்றிருந்தது.கடைசியில் அதுவும் நாய்களுக்கான சிக்குன் குனியா வந்து இறந்து போய்விட இரண்டு நாள் பட்டினி கிடந்தான்.திரும்பவும் இருபது நாளில் பள்ளி விட்டு திரும்பி வரும்போது வலது கையில் நாய்க்குட்டியுடன்.வேண்டான்டா! இதுவும் செத்துப்போயிட்டா வருத்தமா இருக்குண்டா என்றேன்.அழுது அடம்பிடித்து வைத்துகொண்டான்.போனால் போகிறது என்று அதற்கு பால் அடித்து ஊற்றி வளர்த்தோம்.அதன் குண்டு மணிக்கண்களும் காதுகள் ஆட அது ஓடி வரும் அழகும் எல்லோரையும் கவர்ந்துவிட்டது. வீட்டு உரிமையாளர்களுக்கோ இலவசமாக ஒரு பாதுகாப்பு கிடைத்துவிட்டதை நினைத்து சந்தோசம்.அந்த நாய்க்குட்டியோ என் மகனைப் பார்க்காவிட்டால் சாப்பிடாது.சோர்ந்து போய்விடும். என் மகளோ 'நாய்க்கு நாய் வந்து தான் குடுக்கனும். அப்பத்தான் சாப்புடும்'என்று கிண்டலடிக்க அவன் அவளைத் துரத்த அதுவும் விளையாடும். அவர்கள் படிக்கும் போது அது மௌனமாக அவர்களைப் பார்த்தபடி தொந்தரவு தராமல் சமர்த்தாக இருக்கும். ஆரம்பத்தில் என் கணவருக்குப் பிடிக்காவிட்டாலும் பிறகு அவரையும் கவர்ந்து விட்டது. தினம் சாம்பூ குளியல்,குங்குமத்தால் பட்டை, கழுத்தில் கருப்பு நிற பட்டை கட்டி விட்டார். அழகாக இருந்தது.

              அந்தக் குட்டியும் பருவத்திற்கு வந்தது. ஆண் நாய்கள் வீட்டைச்சுற்றி வர அக்கம் பக்கம் ஒரே கேலி தான்.கர்ப்பமானதும் என் மகன் அதை அக்கறையோடு கவனித்துக் கொண்டான். அதை நடக்க விடாது, ஒடவிடாது ஒரு நாள் விட்டு ஒரு நாள் கோழிக்கடையில் சொல்லிவைத்து கோழிக்கால் 10 ரூபாய்க்கு வாங்கி வந்து என்னைத் தொல்லை செய்து, சமைத்து அதற்குப் போடுவோம்.குட்டி போட்ட போது சாக்குகளை விரித்து பாதுகாப்பாய் வைத்தோம்.பெரிய எலி அளவில் ஆறு குட்டிகள்.கண் திறக்கவே 15 நாட்களாயின.பார்க்கவே பரவசமாக இருந்தது.என்னங்க பேரன் பேத்திகள்லாம் நல்லா இருக்காங்களா? என்பார்கள் நண்பர்கள்.ஊரில் இருந்து யார் தொலை பேசியில் பேசும் போதும் இதைப்பற்றித்தான்.குட்டிகள் கொஞ்சம் பெரிதானதும் என் நண்பர்களுக்கும்,அவன் தனது பள்ளித் தோழர்களுக்கும் தந்தது போக இரண்டு குட்டிகள் மிஞ்சி விட்டன.ஒன்று பெண்,ஒன்று ஆண்.மொத்தம் மூன்று.

      
      
அந்தமானில் ஆதியில் நாய்,பூனைகள் கிடையாதாம்.ஆங்கிலேய ஆட்சியின் போது தாயகத்திலிருந்து கொண்டு வரப்பட்டது

 இப்போது எங்கு பார்த்தாலும் நாயும்,பூனையும்.அதனால் அக்கம் பக்கம் நாய்கள் வளர்ப்பது யாருக்கும் பிடிக்கவில்லை.யாரும் எங்களுடன் சகஜமாக இருப்பதில்லை.தாய் நாயோ எது கிடைத்தாலும் தான் சாப்பிடாது குட்டிகளுக்குக் கொடுத்தது.அதனால் குட்டிகளை வெளியில் விரட்டி விட்டு தாய்க்கு சோறு வைத்து சாப்பிட வைப்போம்.அசைவம் இல்லாமல் சாப்பிடாது.வெளியில் போய் தன் வாய்க்குள் இருப்பதைக் கக்கி தன் குட்டிகளுக்குக் கொடுத்தது.மிருகங்களின் தாய்மை உணர்வு மனிதர்களை விடக் கொஞ்சம் கூடுதலாகத்தான் தெரிந்தது.குட்டிகளுக்கு சொறிந்து விடுவது, பாசத்தில் தடவிக்கொடுப்பது என்று அப்படி வளர்த்தது.கடைசியில் ஒரு நாள் கட்டுமானப் பணியில் நீட்டிகொண்டிருந்த கம்பியில் மாட்டி தாய் நாய் உயிரை விட, என் மகன் அதைத் தூக்கிவந்து தடவித்தடவி அழுத அழுகை,எங்களுக்கும் அழுகை வந்துவிட்டது. வீட்டின் பின்புறம் குழி தோண்டி தாய் நாயை அரிசி,காசு,மஞ்சள் பொடி எல்லாம் (மகனின் வேலை) போட்டு புதைத்து அதன் மேல் பூச்செடி நட்டு வைத்தோம்.குட்டிகள் இரண்டும் தாய் போன இரண்டு நாட்கள் சோர்வாக, சரியாக உண்ணாது இருந்தது. பெரிய குட்டி சிறிய குட்டியைத் தாய் செய்தது போல் நாவால் தடவிக்கொடுத்தது.எதைக்கொடுத்தாலும் சிறியதை சாப்பிட விட்டு பிறகு சாப்பிடும்.சிறிய குட்டி பெண்குட்டி.இதைத் தேடி ஒரு ஆண் நாய் வர அதோடு பெரியகுட்டி சண்டையிட்டு கழுத்தில் துளை விழுந்துவிட்டது.கால்நடை மருத்துவமனையில் காட்டியபோது எதோ மருந்து வைத்து அடைத்துவிட இரண்டு நாள் கழித்து அந்த இடம் பிய்ந்து புழுக்கள் வெளிவர கலவரமாகிவிட்டது.என் மகனின் பள்ளித்தோழன் ,'ஆண்டி! எங்க நாய நாங்க கவர்மென்ட் மெடிக்கல்ல(மருத்துவமனை) காட்டுறதில்ல.பொனிக்ஸ் பேயில ஒரு பிரைவேட் டாக்டர் இருக்காரு.அவர் நல்லா பாப்பாரு' என்றான். நான் அவனிடம் பணம் கொடுத்து அப்பா! அவங்கிட்ட சொன்னா கேக்க மாட்டான்.நீ டாக்டர்கிட்ட கேளு.பொழைக்காதுன்னா மெர்சி கில்லிங் பண்ணச்சொல்லிடுப்பா. ஏதாவது ஊசி போட்டு வேலைய முடிச்சிருப்பா! என்றேன்.என் மகனோ ஏம்மா! புள்ளயப் போல இந்த நாயிங்கம்பீங்க.நா முடியாம இருந்தா எனக்கும் இந்த நெல தானா? என்று சொல்லிவிட்டு நாயை மருத்துவரிடம் கூட்டிச்சென்று மருந்து மாத்திரைகள் வாங்கிவந்து,கவனித்து இப்போது குணமாகிவிட்டது.சில நேரங்களில் சகிப்புத்தன்மையற்றுப்போவதால் மற்ற உயிர்களின் துன்பங்களைப் பகிர்ந்து கொள்ள முடியாத மனநிலை உருவாகிவிடுகிறது.நான் வெளியிடங்களுக்குப் போய் விட்டு வீடு திரும்பும் போது இரண்டும் ஓடி வந்து தன் முன்னங்க்கால்களால் என்னைக்கட்டிகொள்ளும்.எந்த எதிர்பார்ப்பும் இல்லாத இந்த நாய்க்குட்டிகளின் அன்பும் என்மகனிடம் மனிதாபிமானம் குறித்து நான் பெற்ற பாடமும் என்னை வெட்கப்பட வைக்கும். பெண்குட்டி தாய்மை அடையப்போகிறது.மறுபடி பேரன் பேத்திகளுக்குக் காத்திருக்கிறேன். நாய்க்குட்டி வேணுமா? முன் பதிவு செய்யுங்க!

2 கருத்துகள்:

எஸ்.ஏ.சரவணக்குமார் சொன்னது…

நல்லா இருக்குங்க! பேரன், பேத்திய நல்லா பாத்துக்குங்க..!

துளசி கோபால் சொன்னது…

இன்னொரு நாய்ப்ரேமியைப் பார்த்து மகிழ்ந்தேன்.

நான் சொன்னது உங்க மகனை!