சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

செவ்வாய், ஜனவரி 12, 2010

படைப்பின் மூலம் வாசிப்பு


      வாசிப்பு என்பது ஒரு படைப்பாளிக்குப் பல கதவுகளையும்,சாளரங்களையும் திறந்து விடுகிறது என்பதை வாசிக்க,வாசிக்கத்தான் உணர்கிறேன்.எனக்கு சிறு பிராயத்திலிருந்து வாசிப்பு வாய்த்ததில்லை.பல்வேறு தலைப்புகளின்,பல்வேறு ஆளுமைகளின் எழுத்துகளை வாசிக்க வாய்க்கவில்லை.வாசிப்பு தாகம் இருந்தாலும் கூட வாழ்க்கை அமைப்பு சிறகுகளை முடக்கிப்போட்டு எனக்கான அந்த உலகத்தை அடையவொட்டாமல் தடுத்தது.நம்மவர் பெண்களைக் குடும்பங்களை குத்தகை எடுக்கச்சொல்லிக் கொடுத்த அளவு,தன்னை உணர, தன் வழியை சுயமாய்த் தேடி அடையக் கற்றுக்கொடுப்பதில்லை.அவளை ஒரு அறிவு ஜீவியாக,சுய சிந்தனை உள்ளவளாக வளர்க்க எந்தத் தாயும் விரும்புவதில்லை.அதனால் ஆணுக்கு வாய்த்த அளவு வாய்ப்புகள் வழங்கப்படாத ஒரு பின் தங்கிய பெண் சமூகத்தின் உறுப்பினராகத்தான் வளர்க்கப்பட்டேன்.கட்டுகளற்ற வெளியறியாது பெற்றொரின்,உறவுகளின் எண்ண வார்ப்புகளாக,அரசமரத்தின் விதையிலிருந்து வரும் விருட்சம் அரசு என்பதைப்போலொரு அம்மாவின் அடுத்த பிம்பமாகப்,பிரதியாகத்தான் வளர்க்கப்படுகிறாள் நம் சமூகத்தில் பெண் -நகை,புடவை,பூ,அழகு,கல்வி,வேலை,குடும்பம்,குழந்தைகள் தாண்டி அறிவதில் உடன்படுவதில்லை.பெண்ணும் ஆவல் கொள்வதில்லை.அதையும் தாண்டி வெளிவந்த,வகுத்த வரையறை கடந்த பெண்கள் விமர்சனங்களுக்குள்ளாகிறார்கள் இன்றும்.
   
      ஒரு பெண் நல்ல அறிவு முதிர்ச்சி பெற்று,சுய ஆளுமையும்,மொழி ஆளுமையும் பெற வேண்டுமாயின் வாசிப்பு அவசியமாகிறது. இலக்கிய உலகில் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருப்பதற்கு இது ஒரு காரணம்.வாசிக்கும் பழக்கம் நாளடைவில் படைக்கும் ஆசையை உருவாக்கும்.ஒரு பரந்து பட்ட அறிவை,வாழ்க்கைப்பாதையின் கிளைப்பாதைகளை,வெவ்வேறு துறைகள் பற்றிய அறிவையும் வாசிப்பு நமக்கு அறிமுகப்படுத்துவதை மத்திய வயதில் உணரும் ஒரு நிலையில் நான்.ஆக, படைப்பாளி ஆக வேண்டின் பிறர் எழுத்துகளின் போக்கை அவதானிப்பது நமக்கான எழுத்தின் போக்கை நிர்ணயிக்க உதவுகிறது.ஒரு படைப்பு படைப்பாளியின் கம்பீரத்தையும்,சமூகத்தின் உண்மையையும் பிரதிபலிப்பதாய் - படிப்பவனின் கற்பனையை வளர்ப்பதாய்,உயர்வு நோக்கி ஒரு புள்ளியளவு பயணப்படவைத்தால் அது அந்த படைப்பின் வெற்றி.

    சிறுகதைகள் என்னவோ என்னைக்கவர்வதில்லை.என் வரை சிறுகதைகள் அந்தக்கதையின் கதாபாத்திரங்களின் ஒரு முகத்தை மட்டும் காட்டும் என்பதாய் உணர்த்துகிறது.படைப்பாளியின் ஒற்றை சாளரப்பார்வையைச்சொல்லும்ஒருபடிமம்.கவிதைகள்,புதினங்கள்,கட்டுரைகள் பிடித்த அளவு சிறுகதைகள் பிடிப்பதில்லை.கவிதைகள் என்னுள் ஏற்படுத் தும் தாக்கம் அதை உணர்த்த முடியாது.அது உயிர் உணர்ந்த அனுபவம்.
                                                                   புதினங்களில்பாலகுமாரன்,சாண்டில்யன்,அகிலன்,சுஜாதா,சிவசங்கரி,வாசந்தி இவர்களின் எழுத்துக்கள் ஒரு மயக்கத்தை உண்டு பண்ணின என்னுள்.பிற எழுத்துக்கள் பிடிக்காது என்பதில்லை.நான் அறியாதவள் என்பதுதான்.ஜெயக்காந்தனின் எழுத்துக்களைப் படிக்காமலே பிறர் சொல்லக்கேட்டு ஈர்ப்பு வந்தது என்றாலும் அதிகம் வாய்க்கவில்லை.கட்டுரைகளில் கவர்ந்தது லேனா தமிழ்வாணன்,எம்.எஸ். உதயமூர்த்தி,விகடன் மதன்,ஜக்கி வாசுதேவ்,ஸ்வாமி சுகபோதானந்தா,ஸ்வாமி மித்ரானந்தா,ஜெயமோகன்,எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர்.கட்டுரைகள் படைப்பாளியின் பரந்த அறிவை,ஒரு செய்தியை அல்லது அவரது அந்தரங்கத்தை,அனுபவப்பகிர்தலாய் இருக்கும்.ஆனால் நமக்குப்பாடமும் கிடைக்கும்.

      கவிதைகள் என்றால் பாரதி,மு.மேத்தா,வைரமுத்து,ஆகியோரது கவிதை பிடிக்கும்.மற்றவரது கவிதைகள் அறிமுகம் செய்துகொள்ள வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வலையில் நிறையப்பேர் எழுதுகிறார்கள்.கவிதை வரிகள் பிரமிக்க வைத்த அளவு என் சிற்றறிவிற்கு அர்த்தம் எட்டவில்லை. அதனால் முழுதாய் ரசிக்கமுடியவில்லை.பாரதியின் கவிதைகள் வீரத்தையும்.மேத்தாவின் கவிதைகள் நமது பயணத்தின் திசைகளை சுட்டுவது போலவும்,வைரமுத்துவின் கவிதைகள் கம்பீரமாய் இருப்பது போலவும் தோன்றும்.

       எழுத்துகளை வெவ்வேறான பரிமாணங்களில் அறிமுகப்படுத்தும் ஒரு படைப்பாளி வாசிப்பவனை சலிப்படையச்செய்வதில்லை.ஒரேமாதிரியான எழுத்து அலுப்பையும்,சலிப்பையும் உருவாக்குகிறது. சில பேச்சாளர்கள்,பட்டிமன்ற வாதி,பிரதிவாதிகள் ஒரே நகைச்சுவைகளை ஒவ்வொரு மேடையிலும் சொல்லி,கையிருப்பு தீர்ந்ததும் காணாமல் போய்விடுவார்கள்.ஒவ்வொரு திசையிலும் பயணப்பட்டு புதிது புதிதாக எழுதும் எழுத்தாளர் தான் போற்றப்படுவர்.ஆக,விவாதிக்கவும்,படைக்கவும்,புதிய கற்பனைகளை உருவாக்கவும் வாசிப்பு அவசியமாகிறது.நாமும் எழுத்துகளின் திசைகளை உணரவேண்டுமானால் நிறைய வாசிக்க வேண்டுமென உறுதி கொண்டேன்.எல்லாம் வலையுலகப்படைப்பாளிகளின் உபயம்.

0 கருத்துகள்: