சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

ஞாயிறு, ஜனவரி 24, 2010

வெற்றியின் மூலம் தன்னம்பிக்கை


"அமைதியான கடல் திறமையான மாலுமிகளை உருவாக்குவதில்லை" எத்தனை உண்மை.பிரச்சினைகளற்ற வாழ்வு,சமதளச்சாலையிலான பயணம்.நீண்ட நேரம் பயணிக்க, சலிப்புவந்து, அலுப்புத் தோன்றி,வாழ்க்கையே ஒரு மாயம் என்று பேசவைக்கும்.பயணத்தின் போது - மலையுச்சி,பள்ளத்தாக்கு,நீரோடை,வீழும் அருவி,எதிர்ப்படும் காட்டு மிருகங்களோடு போராடி,ஒளிந்து, கடந்து சவாலான பயணமாய்ப்போகும் போது பயணிப்பவருக்கு ஒவ்வொரு தடையை மீறும் போதும் ஊவென உற்சாகக்கூச்சல்,நம்மால் முடியுமென்ற தன்னம்பிக்கை,நமது பயண நிகழ்வுகளில் இருந்து,நமது பயணத்தின் பார்வையாளருக்கு கிடைக்கும் பாடம் இப்படித்தொடரும் பயணம் ரசிப்பிற்குரியது..திரு.இன்போசிஸ் நாராயணமூர்த்தி அவர்களின் ஒரு பொன்மொழி"அழகான கப்பல்கள் கட்டப்படுவது கரையில் நிறுத்தி வைத்து அழகு பார்ப்பதற்கல்ல.அவை அலைகளையும்,சூறாவளிகளையும் எதிர்த்து கடலில் வெற்றிகரமாகப் பயணம் செய்வதற்கு". இந்த பொன்மொழியை எங்களின் போர்ட்பிளேயர் வானொலித் தமிழமுதம் நிகழ்ச்சியில் அடிக்கடி குறிப்பிடுவதுண்டு.காரணம் தினம் கப்பலில் பயணம் செய்யும் எங்களை விட சிறப்பாய் இதன் அர்த்தத்தை யாரும் உணரமுடியாது என்பதால்.துக்கமும் தோல்வியும் நம்மைப் புரட்டிப்போட்டு விடுகிறது.என்னைப்பொறுத்தவரை அகால மரணம் தரும் வலியைத்தவிர வேறொன்றும் என்னை அசைத்துவிட முடியாது.ஏனென்றால் என் ஒவ்வொரு தோல்வியும் என்னை நிரூபிக்க, என் தகுதி,ஆற்றலைப்புரிய வைக்க,உண்மை நட்பைக்கண்டறிய,என்னை நான் அறியும் பாடங்களாய்த் தான் இருந்து வந்திருக்கிறது.மாறாக, வெற்றி என்னை உறவுகளினின்றும்,நட்புகளிடத்தும் தள்ளி வைத்திருக்கிறது.எனது அடுத்த அடி தோல்வியா, வெற்றியா என்ற எதிர்பார்ப்பை உறவு,நட்புக்குள் உருவாக்கி என்னை பயங்கொள்ள வைத்திருக்கிறது. தோல்வியான போது கடுமையான விமர்சனங்களையும்,வெற்றியான போது பாராட்டுகளையும் வைத்தது.தோல்வியின் விமர்சனங்கள் முகத்தில் வடுக்களாகவோ,வெற்றியின் பாராட்டுக்கள் கழுத்தில் ஆரங்களாகவோ விழுவதில்லை.நமது வாழ்க்கை நமக்குத் தான் வாழ்க்கை,ஜீவ மரணப்போராட்டம். நமது வாழ்க்கை மற்றவர்களுக்கு வேடிக்கை.போற்றலையும்,தூற்றலையும் ஒன்றே போல் புன்னகையோடு ஏற்கும் பக்குவம் வருகிறது. அதனால் வெற்றியை விட எனக்குத் தோல்விகளும்,பிரச்சினைகளும் பிடித்துப்போனது.ஏனென்றால் தோல்வி நிரந்தரமில்லை.தோல்வியைக் கடுமையாய் விமர்சித்தவர்கள் அடுத்து நமது வெற்றியின் போது அசடு வழிவார்களே,அதை மனதில் ஓட்டிப்பார்த்து,நானே சிரித்துக்கொண்டு என்னை நிரூபித்தும் இருக்கிறேன்.எப்போதும் மனதின் எண்ண ஓட்டங்கள்,சுய முன்னேற்றம் குறித்த நூல்கள் சொல்லும் கருத்துகளின் மீதான சிந்தனைகளை மனதில் கொண்டு வந்து ஆராய்ந்து கொண்டிருப்பேன்.அந்தமானில் ஒவ்வொரு சகோதர,சகோதரிகளும் கைகளையும்,உழைப்பையும்,நம்பிக்கையை மட்டுமே மூலதனமாகக்கொண்டு முன்னேறியவர்கள்.ஆனால் சிலர், சிறு சறுக்கல் வந்ததும் "ஐயோ ஐயோ" என்பார்கள்.இத்தனை நாட்களும் சறுக்கி,எழுந்தவர்கள் தானே நாம் என்ற நம்பிக்கை இழந்து நோய்களை வரவழைத்துக்கொள்வார்கள்.

பெண்கள் நிகழ்ச்சியில் இப்போதெல்லாம் சமையல்,அழகுக் குறிப்புகள் நான் சொல்வதில்லை.அதெல்லாம் வேண்டுமளவு சொல்லியாகிவிட்டது.எப்போதும் தோற்றம்,ஆளுமை, தன்னம்பிக்கை,நேர்மறைசிந்தனை,புத்தக வாசிப்பு குறித்த விழிப்புணர்வு,குழந்தைகளுக்குப் போராடக்கற்றுக்கொடுப்பது இவைபற்றித்தான் பெரும்பாலும் என் தொகுப்புரை இருக்கும்.இது சரியா? தேவையா? என்ற சிந்தனையற்று,நன்றாக நிகழ்ச்சி செய்ய வேண்டும் என்பது மட்டும் தான் ஒரே குறிக்கோள்.
ஒரு நாள் ஒரு நிகழ்ச்சி முடிந்து வெளியில் வந்து வாடகை வாகனத்திற்காய் காத்து நின்றபோது நாலைந்து பெண்கள் வந்து,"மேடம்! நீங்க ரேடியோவில தான இருக்கீங்க. உங்க ப்ரொகிராம் தவறாமக் கேப்பேன். ஒரு நா நான் ரொம்பக்கஷ்டத்துல இருந்தேன்.அன்னிக்கு நீங்க நிகழ்ச்சில இன்பம் என்பது ஆண்டவன் தரும் பிரசாதம்.துன்பம் என்பது ஆண்டவன் தரும் மகாப்பிரசாதம்னு ஆதி சங்கரர் சொன்னாருன்னு சொன்னீங்க.அதிலர்ந்து இன்னி வர கஷ்டம் வர்றப்பல்லாம் அதத்தான் நெனச்சுக்கிறேன் மேடம்" என்றதும் உணர்ச்சி வசப்பட்டு கண்கள் கலங்க,"இங்கபாருங்கம்மா! பிரச்சினை இல்லாத மனுசங்கள கடவுள் இன்னிக்கு வர படைக்கவேயில்ல.பிரச்சினைய எப்புடி எதிர்கொள்றீங்க! அதை எப்புடிக்கடந்து வர்றீங்கங்கறது தான் கடவுள் நமக்கு வைக்கிற பரிட்ச.அதுல தேறி வந்துட்டா நம்மள நம்ம குடும்பம் கொண்டாடும்.அதுனால இனிமே கஷ்டம் வந்தா இதுவும் கடந்து போகும்னு நெனச்சுகிட்டு அதுலர்ந்து மீண்டு வந்துடுங்க!" என்று சொல்லி விட்டு கண்ணீரை மறைக்க சட்டென நடக்க ஆரம்பித்து சற்று தள்ளிவந்து வாகனம் பிடித்து வீடு வந்தேன்.கண்ணீர் வந்ததற்கு முக்கிய காரணம் வானொலி நிகழ்ச்சிக்கு "இன்னிக்கு என்ன சொல்லாலாம்.சரி இது தான் சொல்லவேயில்ல.இதை இன்னிக்கு சொல்லலாம்" என்று தான் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் போவது.அதாவது வித்தியாசமாகச்செய்ய வேண்டும் என்ற ஒரே உணர்வுடன்.அந்த அம்மா சொன்னதிலிருந்து நிறைய புத்தகம் படித்து பொறுப்புடன் நிகழ்ச்சி வழங்குவதோடு,சகாக்களிடமும் வலியுறுத்துவதுண்டு.இன்று நிறையத் திறமையாளர்கள் தன்னம்பிக்கையின்றித்தான் துவண்டு போகிறார்கள்.ஒரு இடர்,ஒரு சறுக்கல் இவர்களின் முயற்சியைக் கைவிட வைத்து விடுகிறது.சளையாத மனமும் விடாமுயற்சியும் தான் வெற்றியின் காரணிகள் என்பதை மறந்து,அதிலிருந்து விடுபட மது,மாது என்று திசை திரும்பி நிரந்தரமாகத் தன்னிரக்கத்தில் மூழ்கிப்போகிறார்கள்.இப்படிப்பட்டவர்களைத் தூண்டினால் போதும் துலங்குவார்கள்.

இன்று அந்தமானில் கொடிகட்டிப்பறக்கும் அத்தனை வணிகப்பெருமக்களும் முக்கிய பூமியில் இருந்து மூலதனம் கொண்டுவந்தவர்கள் அல்லர்.அவர்களுக்குப்பணம்,பணத்தை சம்பாதித்துத் தரவில்லை. அவர்களின் உழைப்பு,நேர்மை,விடாமுயற்சி,நெருக்கடிகளை சந்திக்கும் திறன்,எளிமை ஆகியவற்றோடு முடியும் என்ற தன்னம்பிக்கையும் தான் அவர்களை உயர்த்தியது.வாழ்வின் போராட்டங்கள் தான் இறைவன் நமக்குத்தரும் உயர்வின் படிகள்.படிகளைக்கடக்கும் போது உயர்வு தானே வரும்.தொட்டாச்சிணுங்கி குணத்தை விட்டு,சகிப்புத்தன்மை,உற்சாகம்,முடியாது என்கிற எதிர்மறைச்சிந்தனை விடுத்து முடியும் என்கிற நேர்மறை சிந்தனை ஆகியவற்றை வளர்த்துக் கொள்வது நலம் தரும்.உயர்வு தரும்."நீ எப்படி ஆக வேண்டும் என்று நினைக்கிறாயோ அப்படியே ஆகிறாய். உனக்கு நீயே நண்பன்,நீயே எதிரி" என்கிறது கீதை.தோல்வியாளர்கள் சூழ்நிலைகளைக்குற்றம் சொல்கிறார்கள்.வெற்றியாளர்கள் அதையே படிகளாக்கி உயர்வதற்கான காரணியாக்கி உயர்கிறார்கள்.
வாழ்க்கையே போர்க்களம்
வாழ்ந்து தான் பார்க்கணும்
போர்க்களம் மாறலாம்
போர்கள் தான் மாறுமா?

3 கருத்துகள்:

Paleo God சொன்னது…

நல்ல கருத்து,

என்னோட பதிவுலேர்ந்து எதாவது வரலாற்று முக்கிய கருத்து எடுத்து வானொலி மூலம் பகிர்ந்து, நிறைய ஐலாண்ட் மக்களுக்கு பிடிச்சா, நீங்க ஒரு ரிட்டர்ன் டிக்கெட் பார்சல் பண்ணி எனக்கு அனுப்பிடனும் சொல்லிட்டேன்..::))

செ.சரவணக்குமார் சொன்னது…

//பிரச்சினை இல்லாத மனுசங்கள கடவுள் இன்னிக்கு வர படைக்கவேயில்ல.//

சத்தியமான வார்த்தைகள். நல்ல பகிர்வு சாந்தி மேடம்.

sunderji சொன்னது…

manithanin vazhvu manithanin kaikalil earkai uthavum varai manithanin vazhvu thodarum eyhai purinthukondal vazhvu sugamanathu enbathai nangu vilakki ulleerkal. vazhthukkal.