சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

திங்கள், ஜனவரி 18, 2010

போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுங்கள்.


அந்தமானில் ஒரு காலத்தில் அரசு போக்குவரத்து கழகத்தை விட்டால் தனியார் பேருந்துகள் மிகக்குறைவு.அந்த ஓடுகிற ஒன்றிரண்டு வண்டிகளும் இப்ப நிக்குமா? அப்ப நிக்குமா? கதைதான்.இறுதி மூச்சிக்கு சிரமப்படும் நோயாளிகள் போல.அந்த கால கட்டத்தில் வாடகைக் கார்களுக்கு குறைந்த பட்சக்கட்டணம் பத்து ருபாய்.தூரத்திற்கேற்றார் போல் கட்டணம் மாறும்.பெரும்பாலும் நடராஜா சேவைதான்.அதன் பிறகு ஒவ்வொன்றாக தனியார் பேருந்துகள் பெருக ஆரம்பித்து இப்போது நிறையத் தனியார் பேருந்துகள்.ஒன்றை ஒன்று முந்துகிறேன் பேர்வழி என்று பயணிகளின் வாழ்க்கையை அடகு வைக்கும் அவர்களின் அட்டகாசம் தாங்க முடியாது.மூன்று சக்கர வாகனங்கள் வந்த பிறகு அந்தமான் சாலைகளை இவர்கள் குத்தகைக்கு எடுத்துக்கொண்டது போல இவர்கள் கொடிதான்.பெரிய போக்குவரத்து நெரிசல் அற்ற அந்தமான் சாலைகளில் அடித்துப்பறக்கும் வேகம் நம்மை பயமுறுத்தும்.இங்கிருக்கும் சொற்ப மக்கள் தொகைக்கு இந்தப் போக்குவரத்து வசதிகளே அதிகம் என்ற நிலையில் இரு சக்கர,நான்கு சக்கர வாகனங்களின் பெருக்கம் தற்போது அளவு கடந்து விட்டது.வெறிச்சோடிக்கடந்த சாலைகள் இப்போது புதுப்பொலிவுடன் சுறுசுறுப்பான இயக்கத்துடன் இருந்தாலும் கூட,முன்னேற்றத்தின் ஒரு அறிகுறியாக இதைக்கொண்டாலும்,சட்டத்திற்குப் புறம்பாக குழந்தைகள் வாகனங்களைக்கையாள்வது அச்சம் தருகிறது.சாலைகளில் வரிசையாக நிறுத்தி வைக்கப்படும் வாகனங்கள்,குறுகிய சாலைகளில் அடுத்த வாகனங்களுக்கு வழிதராமல் இடைஞ்சல் தருவது இங்குள்ள சிலருக்கு கைவந்த கலை.சிறிய இடம் என்பதால் கடைநிலை ஊழியர் முதல் பதவிகளில் இருக்கும் பெரியவர்கள் வரை அனைவரும் அறிந்து வைத்திருப்பதால் எதற்கும் யாரும் அலட்டிக்கொள்வதில்லை.பள்ளிக்குழந்தைகளுக்கு வேகம் அதிகமுள்ள இரு சக்கர வாகனங்கள்.அவர்கள் பறக்கும் வேகம் பார்த்து யார் பெற்ற பிள்ளையோ என்று பரிதாபம் பிறக்கும் நமக்கு.

இது ஒரு புறமிருக்க தோளுக்கும் காதுக்கும் இடையில் குறுந்தொலைபேசியில் அரட்டை அடித்துக்கொண்டே வாகனம் ஓட்டும் ஓட்டுனர்கள்.அலைபேசியில் பேசியபடி வாகனம் ஓட்டத்தடையிருந்தாலும் யாரும் கண்டுகொள்வதில்லை.அப்படியென்ன உயிரைவிட முக்கியமான வேலை.சில நாட்களுக்கு முன் ஒரு அனுபவம்.மூன்று சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருக்க,ஓட்டுனர் அலைபேசியில் பேசியபடி ஓட்டிவர முன்னால் ஒரு பேருந்து போக,பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தவர்,ஒரு கட்டத்தில் அலுத்து பேருந்தை முந்த முற்பட்டு, சட்டென வலது பக்கம் வளைக்க ராணுவத்தின் பெரிய வாகனம் நாலு அடி முன்னால் 'என்ன பண்றீங்க?' என்று நான் அலற இரு ஓட்டுனரும் ஸ்தம்பிக்க, சடக்கென இடதுபக்கம் வளைக்க பேருந்தின் பக்கத் தடுப்பில் உரசி விபத்து தடுக்கப்பட்டது.பேருந்து ஓட்டுனர் நன்றாகத் திட்டிவிட்டார்.நான் ஒன்றுமே சொல்லாமல் இருந்து விட்டு இறங்கும் போது பணத்தைக்கொடுத்துவிட்டு,"உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?" என்று கேட்க,இ.கா.கோ முதல் வ.கா.கோ வரை உதடுகளை விரித்து வெட்கச்சிரிப்புடன் ஒரு பையன் இருக்கான்! என்றார்."ஓ! குழந்த வேற இருக்கா? பாத்து ஓட்டுங்க.உங்கள நம்பி உங்க வீட்டுல ரெண்டு பேரு. எங்க விட்டுல என்னை நம்பி மூனு பேரு.ஒவ்வொரு தரம் வண்டிகள்ல ஏறுரப்ப எங்க உயிர உங்க கையில் குடுத்துட்டு பத்திரமா கொண்டு சேப்பீங்கன்னு நம்பிக்கையில தான் வர்றோம். ஞாபகம் வச்சுக்கங்க" என்றதும் அசடு வழிந்து இல்ல மேடம் இப்புடி எல்லாம் ஸ்பீடா வண்டி ஓட்டுனாத்தான் நெறைய சம்பாதிக்க முடியும் அதான் என்று சொல்லிவிட்டு மறுபடி அழைப்பு வர பேசியில் பேசியபடி சென்று விட்டார்.இவர்களைத்திருத்த முடியாது.யாருடைய தலைவிதி யார் கையிலோ?

சில வருடங்களுக்கு முன் ஒரு முறை வாகனம் ஏற்றிச்செல்லும் கப்பலில் இருந்து பேருந்தை எடுக்கும் போது சற்று பிசக ஒரு பேருந்து கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.எத்தனை மரணங்கள்? விபத்துக்கள் எல்லாமே கவனக்குறைவினால் தான்.கவனக்குறைவால் வரும் சிலரால்,கவனமாக வரும் பலரும் பாதிக்கப்படுவது சாலை விபத்துக்களில் என்பதை வாகனம் ஓட்டுனர்கள் என்று உணர்வாகள்? அரசு சட்டம் தான் போட முடியும்.சட்டம் போடுவதே மீறுவதற்கு என்று நினைக்கும் மக்களை யார் கண்டிப்பது? இறைவன் இவர்களைத் தண்டித்துவிடக்கூடாது என்று மனம் இறைஞ்சுகிறது! போக்குவரத்து விதிகளைக்கடைப்பிடிக்காமல் விபத்து எனும் தண்டனைக்குள்ளாகுபவர்கள் ஒன்று உயிரை அல்லது உறுப்புகளை இழக்கிறார்கள்.அதன் வலி அவர்களை விட அவர்களைச்சார்ந்தவர்களைத்தான் அதிகம் பாதிக்கிறது.தண்டனை பெறுபவர்களுக்குப்பின்னால் ஒரு குடும்பம் பாதிக்கப்படுகிறது என்பதை உணர்ந்தால் போதும்.

(இ.கா.கோ - இடது காது கோடி)

2 கருத்துகள்:

thendral சொன்னது…

அந்த் மானை பாருங்கள் கருத்து ஆழம், அக்கரை,ஆதங்கம்

அந்தமானை பாருங்கள் வீதி சொல்லும் விதி

அந்த மான் மண்ணீன் சொந்த மான் நம் தழிழ் மான்,

கிளியனூர் இஸ்மத் சொன்னது…

சகோதரி நீங்கள் கூறியிருப்பது முற்றிலும் உண்மை.....சாலைவிதியை மீறுபவர்களுக்கு கடுமையான சட்டத்தை கொண்டுவரனும்....இது துபாயில் இருக்கிறது....மீறப்படுபவர்கள் சிறைக்கும், அபராதமும் செலுத்தவேண்டும்.அதற்கு பயந்தே விதியை மதிப்பார்கள். நம்நாட்டிலும் மதித்தால் 2020 அல்ல இப்போதே வல்லரசுதான்.