சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

வியாழன், ஜனவரி 14, 2010

அந்தமான் தமிழர் சங்கத்தில் பொங்கல் விழா


        அந்தமான் தமிழர் சங்கத்தின் திருவள்ளுவர் அரங்கில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி இன்று மாலை (14.01.10) 5.30 மணியளவில் தொடங்கியது.நிகழ்ச்சித்தலைவர் பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் நலத்துறை இயக்குநர் திரு.A.நெடுஞ்செழியன்,சிறப்பு விருந்தினர் தமிழக அரசின் புதுதில்லி சிறப்பு பிரதிநிதி சொல்லின் செல்வர் திரு.கம்பம் P.செல்வேந்திரன் அவர்கள் சங்கத்தின் துணைத்தலைவர் முனைவர்.திரு.கு.ராஜ் மோகன் அவர்கள் மற்றும் சங்கச்செயலர் திரு மு.மலைராஜ் அவர்கள் முதலியோர் நிகழ்ச்சியை தமிழ் மரபுப்படி குத்து விளக்கேற்றி தொடங்கிவைத்தனர்.நிகழ்ச்சியின் தொடக்கமாக மோகன் புரா (பகுதியின் பெயர்),அரசினர் மேல் நிலைப்பள்ளி மாணவியர் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடினர்.விழா நாயகர்களுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்ததனர் அந்தமான் தமிழர் சங்கத்தினர். விழாவிற்கு வருகை தந்திருந்த அனைவரையும் வரவேற்று சங்கச்செயலர் திரு மு.மலைராஜ் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த,வாழ்த்துரை வழங்கினார் சங்கத்தின் துணைத்தலைவர் முனைவர் திரு.கு.ராஜ்மோகன் அவர்கள்.துணைத்தலைவர் அவர்கள் தமது வாழ்த்துரையில் "அந்தமான் வாழ் தமிழர்களின் சில பிரச்சினைகளுக்குத் தீர்வு காண தாங்கள் உதவ வேண்டும் அன்று தங்களுக்கு இதே சங்க வளாகத்தில் இந்த மேடை நன்றி பாராட்டு விழா எடுக்கும் மேடையாக இருக்கும் என்று சொல்ல ஆசைப்படுகிறேன்" என்று சிறப்பு விருந்தினருக்கு வேண்டுகோள் விடுக்க அரங்கில் பலத்த கரவொலி.இதனைத்தொடர்ந்து தீவுக்கவிஞர்.திரு தமிழ்சத்யன் அவர்களின் ஏழாவது கவிதை நூல் "காதல் கேளாய் தோழி" மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு.ஞா.குழந்தைசாமி அவர்களின் பண்டைய உலா இலக்கிய முறையில் இயற்றப்பெற்ற,அடி வெண்பாவினால் உருவாக்கப்பெற்ற நூல் "கல்வாரியில் காவலன் உலா" ஆகிய இரண்டும் பொங்கல் விழா மேடையில் நிகழ்ச்சித்தலைவர் மற்றும் சிறப்பு விருந்தினர் திருக்கரங்களால் வெளியிடப்பெற்றது.

    அடுத்துத் தலைமையுரை ஆற்றிய நிகழ்ச்சித்தலைவர் திரு.A.நெடுஞ்செழியன் அவர்கள் தமது உரையில், " 2,000 ஆண்டுகளுக்கு முன் அட்சய பாத்திரம் கொண்டு உறுபசி நீக்கிய மணிமேகலையும் என் உறவினர்,இன்று உணவுப்பற்றாக்குறையை நீக்க முயன்று வரும், பாடுபடும் தமிழர்களும் என் உறவினர்.மனை சிறக்க வீட்டுப்பொங்கல்,மாடுகளைப்போற்றமாட்டுப்பொங்கல்,உறவுகளைப்பாதுகாக்க காணும் பொங்கல் கொண்டாடுகிறோம்." என்ற அவர் தமிழர் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகளைக்கூறி தமது எளிமையான உரையை நிறைவு செய்தார்.

            தமிழக அரசின் புதுதில்லி சிறப்பு பிரதிநிதி,சொல்லின் செல்வர் திரு.கம்பம் P.செல்வேந்திரன் அவர்கள் சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.பொங்கல் திருநாளின் பொன் மாலை நேரத்தை பயனுடையதாய் ஆக்கிய சிறப்புரை.அவர் தம் சிறப்புரையில்," அந்தமானுக்கு வருகை தந்திருப்பது எனக்கு அண்ணன் வீட்டிற்கு வந்தது போல் உள்ளது.ஏனென்றால் அந்தமான் தமிழர் சங்கம் என்னைவிட ஒரு வயது மூத்தது.இது போன்ற விழாக்கள் நமது சுய அடையாளங்களை,பண்பாட்டுக்கூறுகளைப் பாதுகாக்கும் விழா.காலப்போக்குகளின் மாற்றங்களில் நமது அடையாளங்களை நாம் இழந்துவிடக்கூடாது.காலப்போக்கிலும் நமது அடையாளங்களை நாம் காப்பாற்றி வரும் வரைதான் நாம் தமிழர்கள்.உலகில் தமிழன் ஒருவன் தான் வாழ்க்கையை அகம், புறம் என்று இரண்டாகப்பிரித்து வாழ்ந்தவன்.இறை ஒன்று (இறைவன் ஒருவன்),இனம் இரண்டு(ஆண்,பெண்),தமிழ் மூன்று (இயல்,இசை,நாடகம்) என்று பிரித்து வாழ்ந்தவன் தமிழன்.காலத்தை பருவத்திற்கேற்ப பிரித்துக்கொண்டவன் தமிழன்.இன்று தமிழ்ப்புத்தாண்டு. கடந்த இரு வருடங்களாக கலைஞரின் அறிவிப்பின் பேரில் தைத்திருநாளை, தமிழ்ப்புத்தாண்டாகவும் கொண்டாடுகிறோம்.தமிழ் வருடங்கள் அறுபதில் தமிழ்ப்பெயர் ஒன்று கூட இல்லை.ஆரியர்கள் நம்மீது எடுத்த பண்பாட்டுப் படையெடுப்பின் காரணமாக நமது தமிழ்ப்புத்தாண்டு சித்திரை மாதத்திற்கு மாறியது.தமிழ் நமக்கு மொழி மட்டுமல்ல,உயிர். சொல்வளம் மிக்க ஒரு மொழி உலகில் தமிழ் மட்டும் தான்.சொல்லுதல் என்ற ஒரு வார்த்தைக்கு மட்டும் தமிழில் நாற்பது வார்த்தைகள் உள்ளன,சொல்லுதல், கூறுதல்,மொழிதல்,கரைதல்,கதறுதல் இப்படிச்சொல்லிக்கொண்டே போகலாம்.தமிழைப்பாதுகாக்க தீக்குளித்தது,வெஞ்சிறை சென்றது மட்டுமல்லாது,தமிழை வளர்க்கவும் உயிர்த்தியாகம் செய்தவர்கள் தமிழர்கள்.படித்தவர்,பாமரர் அனைவரும் வளர்த்த மொழி தமிழ்." என்றார்.இலக்கியத்தில் இருந்து மேற்கோள்கள் காட்டி உண்மையாகவே ஒரு அற்புதமான சிறப்புரையாற்றினர். நிறைவாக,"இந்த மேடையில் ஒரு உத்தரவாதம் தருகிறேன்.இனிமேல் புதுதில்லி வந்தால் உங்களுக்கு அந்தமான் இல்லம் மட்டுமல்ல.தமிழ்நாடு பவனும் உங்களுடையது.நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம்"என்றார்.பலத்த கரகோஷம்.(ஏங்க கம்பன் விட்டுக்கட்டுத்தறியும் கவி பாடும்னு சொல்லுவாங்க.கலைஞர் பக்கத்துல இருக்கறவங்க எல்லாரும் எப்புடீங்க இலக்கியம் பேசறாங்க.தி.மு.க.வுக்கு வருகிறவர்களுக்கு இலக்கியம் சொல்லிகொடுக்கப்படுகிறதா? இல்லை இலக்கியம் கற்றவர்கள் எல்லாரும் தி.மு.க.வுக்கு வர்றாங்களா? சிறப்புரையை வேறொரு பதிவில் பகிர்ந்து கொள்வோம்.)

  பள்ளி மாணவியரின் கண்கவர் கலைநிகழ்ச்சிகளைத் தொடர்ந்து கோலப்போட்டி,ஓவியம்,வினாடி-வினா,பேச்சுப்போட்டிகளில் வெற்றிபெற்றொருக்கு நிகழ்ச்சித்தலைவர் மற்றும் சிறப்பு விருந்தினர் பரிசுகளை வழங்கினர்.சங்கத்தின் துணைச்செயலர் திரு.ஆ.செல்வம் அவர்கள் நன்றியுரை நவில விழா இனிதே நிறைவு பெற்றது.மணி 8.30 க்கு விழா நிறைவுற்றது.வீடு வந்து இடுகையிட்டு முடிக்க இரவு 11.15 மணி ஆகிவிட்டது.பொங்கல் வேலைக்களைப்பு வேறு.

வானொலிக்கென நிக்ழ்ச்சியை நானும் நண்பர் திரு.வரதராஜன் அவர்களும் ஒலிப்பதிவு செய்தோம்.இந்த ஒலிப்பதிவினை வானொலி வடிவமாக்கி நாளை (15.01.10) மாலை 5 மணிக்குத் தமிழமுதம் நிகழ்ச்சியில் ஒலிபரப்புவோம்.உள்தீவுகளில் வசிக்கும் தமிழ்ச்சமுதாயத்திற்கு பொங்கல் விழா நிகழ்வு குறித்த பகிர்தலாக இது அமையும்.ஒவ்வொரு பொங்கல் விழாவும் இப்படித் தாயக உறவினரால் சிறப்பிக்கப்படுவது அந்தமான் தமிழருக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கக்கூடியது.இந்தப்பெருமைக்கும்,மகிழ்ச்சிக்கும் காரணம் அந்தமான் தமிழர் சங்கம் என்பதைத் தீவு தமிழரில் ஒருவராக நன்றியோடு நினைத்துக் கொள்கிறோம். வாழ்க தமிழர் நலம்,புகழ்! வளர்க அந்தமான் தமிழர் சங்கம்.

0 கருத்துகள்: