சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

வியாழன், ஜனவரி 07, 2010

குடும்பக்கோவில்கள் - நமது அடையாளம்




கரூர் மாவட்ட கலெக்டர் முனைவர். ஜே. உமாமஹேஸ்வரி அவர்கள் பேச்சு - கரூர், ஜன.1 – 2010. தினத்தந்தி
" பெண்கள் வீட்டின் சூழலை மகிழ்ச்சிகரமாக மாற்ற வேண்டும்.


அதே போன்று நமக்கு கிடைக்கும் வருமானத்தை வைத்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும். அதே போன்று வருமானத்தை பெருக்கி கொள்ளவும் வேண்டும். அதிக அளவில் வருமானம் இல்லாத கணவனிடம் தேவைக்கு அதிகமான பொருட்கள் வாங்கி கொடுக் கும்படி வற்புறுத்தக்கூடாது.கணவன்களிடம் எப்போதும் சண்டை போடக் கூடாது. சந்தோஷமாக இருக்க பழகிக்கொள்ள வேண்டும்.கற்றுக்கொள்ள வேண்டும்
ஒரு குடும்பத்தில் சந்தோஷத்தை ஏற்படுத்துவது பெண்கள் கையில் தான் உள்ளது. இருப்பதை வைத்து சந்தோஷமாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும்."


  இந்தக்கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு.நம்மவர்கள் சொல்வார்கள்."அவன் ஆம்பிளைடீ ஆயிரம் குட்டிச்சுவர் தாண்டுவான்.நீ பொம்பள. நீ ஒழுங்கா,பொறுமையா இல்லையின்னா குடும்பம் குட்டிச்சுவராப்போயிடும்" என்று.இந்த மொழியை மேலோட்டமாகப் பார்த்தால் ஆணாதிக்கத்தை இவர்கள் வழிமொழிகிறார்களோ என்று தோன்றும்.ஆனால் கொஞ்சம் சிந்தித்தால் இது சரி என்பது புலப்படும்.ஒரு ஆண் கெட்ட வழி போனால் அது அவனது அழிவோடு முடியும்.ஒரு பெண்ணின் தவறு அவளின் வம்சாவளியை,அவளது பரம்பரையை தடம் மாற்றிவிடுகிறது.அதனால் தான் நம் முன்னோர் பெண்ணுக்கு பொறுமையும், அன்பும் அணிகலன்கள் என்றார்கள்.இன்று விட்டுக்கொடுப்பதற்கும்,அடிமைத்தனத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் தான் விவாகரத்துகள் பெருகிவிட்டன என்கிறார் ஒரு வழக்கறிஞர்.குடும்ப வன்முறைகள் தமிழ்நாட்டிற்குப் புதிதல்ல. என்று மதுவும்,சாராயமும் தெருக்களில் ஓட ஆரம்பித்ததோ அன்றே குடும்ப வன்முறைகள் தலைவிரித்து ஆடத்தொடங்கின.பெண்களும் பெண்ணீயம் பேசி வீடுகளை சதா போர்க்களம் ஆக்கினால் குழந்தைகளின் குழந்தைப்பருவம் சிக்கலாகிவிடுகிறது.வீடுகளில் பெண்ணீயமும்,சமத்துவம் பேசுவதை விட அடுத்த தலைமுறை ஆண்களை நல்லமுறையில் உருவாக்கலாமே!.ஆண்கள் என்ன வானத்தில் இருந்து குதித்தார்களா? நமக்குள்,நம்மில்,நமது ரத்தத்தில் இருந்து உருவானவர்களே! ஒவ்வொரு தாயும் தன் கணவனிடம் தான் எதிர்பார்த்ததை தன் மருமகளுக்குக் கொடுக்கச்சொல்லிக் கொடுத்தால் அடுத்த தலைமுறை நல்ல வழி நடக்க ராஜபாட்டை உருவாகிவிட்டது.

          நம் பெண்கள் "நம்ம பட்ட பாடெல்லாம் அவளுக படுறாளுகளா?" என்று மல்லுக்கட்டினால் சமுதாய மறுமலர்ச்சி எப்படி முடியும்? நீயா? நானா? என்பது பட்டிமன்றங்களுக்கு சுவையானது.குடும்பத்தில் எழுந்தால் தினம் போர்க்களம் தான். எப்படித்தான் திருத்துவது? அன்பால் முயலுங்கள்.முயற்சி செய்யுங்கள்.முயற்சியைத்தொடருங்கள்.எது ஒன்றை மாற்ற முடியாதோ? அதற்கு மெனக்கெடுவது விழலுக்கு இறைத்த நீரில்லையா? திருத்த முடியவில்லையா? அடுத்து நடக்க வேண்டியதை யோசித்து,குழந்தைகள் மேன்மையடையும் வழிகளைத்தேடுவதுதான் அறிவுடைமை.எப்போதுமே பிரச்சினைக்கு வெளியில் இருந்து விமர்சிப்பது எளிது.உள்ளே இருப்பவர்களுக்கு தான் அதன் வலியும் தாக்கமும் புரியும்.உண்மைதான்.ஆனால் ஒரு நாள் வெளிவந்துதானே ஆகவேண்டும்.வலியைச்சொல்லி பரிதாபம் தேடுவதை விட எழுந்து நிற்பது தன்னம்பிக்கையின் அடையாளம். அந்தமானில் நிறைய ஆண்கள் சிறந்த குடிமகன்கள்.நல்ல சம்பளம் வாங்கும் நிறைய வீடுகளில் தரித்திரம் தாண்டவமாடுகிறது.ஒரு முறை என் கணவரின் அலுவலகதில் லேபர் கமிஷனர் திருமதி.விஜயலெக்ஷ்மி அம்மா அவர்கள், அவர்களது பணியாளர் குடியிருப்பில் எங்கள் பெண்கள் கூட்டுறவு சங்கத்திற்கு கடை திறக்கும் வாய்ப்பு நல்கும் விசயம் குறித்துப் பேச வரச்சொல்ல நான் போயிருந்தேன். என்னைப்பார்த்ததும், நான் வணக்கம் சொன்னதற்கு பதில் வணக்கம் சொல்லக்கூட மறந்து உங்கள் மனைவியா? வாவ்.. என்றார் இந்தியில்.வீடு வந்ததும் என்ன? என்னப்போய் உங்க மேடம் வாவ்ங்கறாங்க! என்றேன். என் கணவர்,"ஆமா! 3500/ ரூபா சம்பளம் வாங்குறவன் மனைவி இவ்ள நீட்டா இருக்கியேன்னுதான்.(அப்போது என் கணவருக்கு பணி நிரந்தரம் ஆகாததால் குறைவான சம்பளம்) 18,000/, 20,000/ சம்பளம் வாங்குறவன் மனைவிகள்லாம் குடும்பத்தோட அரைப்பட்டினி,கொறைப்பட்டினியா வந்து பட்ட தலையும்,கிழிஞ்ச உடையுமா வந்து புருஷன் சம்பளத்துள பாதிய எழுதிக்குடுத்து வாங்கிட்டுப்போவாங்க.அப்புடிப்பாத்துப்பாத்து பழகினதுனாலதான்" என்றார்.இங்கு குடி மட்டுமல்ல,எஞ்சிய பணத்தை சீட்டாடுவர்.இப்படி இவர்களுடன் பெண்கள்   போராடி குழந்தை வளர்த்து,குழந்தைகளைப் படிக்க வைத்து நல்ல நிலைக்கு வந்த குடும்பங்கள் அதிகம்.அழிந்த குடும்பங்களும் உண்டு. இந்த விதிகளை யார் மாற்றுவது? இன்னும் சில ஆண்கள் சம்பளம் வாங்கியதும் மதுக்கடைகளில் முன்பணமாகத்தந்துவிட்டு எஞ்சியதை வீட்டில் கொடுக்கிறார்கள்.கல்வி இல்லாத பெண்கள் தங்கள் அறியாமையினால் சம்பளத்தில் அரசு விதிகளின் படி உரிமை நிலை நாட்டத்தெரியாது துன்பத்தில் உழலுகிறார்கள்.


          இந்தக் கொடுமைகளுக்குத்தீர்வு பெண்களை நன்றாகப்படிக்க வைப்பது.  

படிப்பு வராத பெண்களுக்கு கைவேலைகள் கற்றுக்கொடுத்து பொருளாதார ரீதியாக சொந்தக்காலில் நிற்கவைப்பது, தன்னம்பிக்கை ஊட்டுவது ஆகியன.படித்த பெண்கள் ஒளிவிளக்குகள்.இந்த விளக்குகள் எந்த இருளையும் ஓட்டி விடும். முடியாத பட்சத்தில் தன் உரிமைகளைக்கோரி வெளியில் வருவதுதான் புத்திசாலித்தனம்.சில மிருகங்களிடம் குடியிருக்க முடியாது.இங்கு நிலை இப்படி இருக்க, தாயகத்தில் சட்டங்களை தவறாகப் பயன் படுத்தும் பெண்கள் அதிகமாவது நல்ல சமுதாயத்திற்கு அழகல்ல.கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து,ஒத்துப்போனால் தானே ஒளிபெறும் குடும்பம்.மன ஆரோக்கியம் பெற அமைதியான குடும்பங்கள் தானே ஆதாரம்.பொய் என்னும் ஒற்றைக்காலில் எத்தனை நாள் நிற்க முடியும்? வழக்குகள் தொடுப்பது வாழ்க்கைக்கு உதவுமா? மனிதன் கண்டுபிடிப்பில் உங்களுக்குப்பிடித்தது எது என்று விகடன் மதன் அவர்களை ஒருவர் கேட்டிருந்தார்.அதற்கு அவர் சொன்ன பதில் "கணவன்,மனைவி".நம் வீடு வரும் உறவுகள் எல்லோரும் ஒன்றுதான். நாம் புகுந்தவீட்டு உறவுகளை மதித்தால் தானே நம் துணையும் பிறந்த வீட்டு உறவுகளை மதிப்பார். மதித்தல் இல்லாத உறவுகளை எப்படிப் பேணமுடியும்.அறிவார்ந்த இனத்தின் பிரதிபலிப்புகள் நாம்.விருந்தோம்பல்,பொறுமை,புத்திசாலித்தனம் கை கொண்டு குடும்பம் என்ற கோவிலைக்கட்டிக்காப்போம்.குடும்பக்கோவில்கள் நமது அடையாளம்.அமைதி தரும் பிருந்தாவனம்.அதைக்காப்பதுதான் சிறந்த யோகம். தியானம்.



1 கருத்துகள்:

தமிழ். சரவணன் சொன்னது…

"ஆமாம் பெருசா ஒரு லட்சம் சம்பாதிக்கறாரு இவரு"

நான் எனது சம்பளத்தை கொடுத்த பொழுது எனது (முன்னாள்)மனைவி நாக்கல் இருந்து கொட்டிய அமில வார்த்தைகள். இதுபோல் பெண்(களி)டம் குடும்ப கோவில்களை எப்படி உருவாக்குவது... பொய் வரதட்சணை வழக்கில் கோர்ட் கேஸ் என்று அலைந்துகொண்டிருக்கின்றோம்