சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

வியாழன், ஜனவரி 28, 2010

குறுந்தொலை பேசியின் தாக்கம்


தூரம் சுருங்கி உலகம் ஒரு கிராமமாக மாறிவிட்டது.இந்த அற்புதம் இன்றைய தொழில் நுட்ப உலகின் தொலைத்தொடர்பில் உண்டான புரட்சி.மக்களுக்கிடையேயான தூரம்,தொலைவுகளைக்கடந்து,நினைத்த மாத்திரத்தில் குரலோடு விளையாட வைப்பதில் மற்ற எல்லா கருவிகளையும் விட இன்று குறுந்தொலைபேசிக்கு இணை எதுவும் கிடையாது.உலகின் மூலை முடுக்குகளை எல்லாம் இணைக்கும் தொடர்புப்பாலமாக குறுந்தொலை பேசி விளங்குகிறது.அல்லும் பகலும் ஒரு பிரியா நட்பாக விளங்கிக்கொண்டிருக்கும் இதன் பயனைத் தள்ளி வைத்து விடமுடியாது தான்.ஆனால் உலகம் முழுமையும் பாலர் முதல் பல் போனவர் வரை இதற்கு அடிமையாய்க்கிடக்கும் ஒரு நிலை தவிர்க்கப்பட வேண்டும்.இந்த பேசி வந்த போது அறிவியல் அறிஞர்கள் இதன் கதிர்வீச்சு அபாயத்தால் உபயோகிப்பவர்களுக்கு மூளைப்புற்று நோய்,காது,நரம்பு மண்டலப்பிரச்சினைகள் இன்னும் பல நோய்க்கு இது வழி வகுக்கும் என்று அறிக்கைகள், கட்டுரைகள் வந்த வண்ணமிருந்தன.ஆனால் இன்று அலை பேசி உலகில் ஒரு புரட்சியை உண்டு பண்ணிக்கொண்டிருக்கிறது.அதன் பயன்கள் எண்ணிலடங்காதவை தான்.

அலை பேசிகளின் விலை குறைந்ததின் காரணமாக இன்று ஒரு வீட்டில் பல பேசிகள்.ஒருவரிடமே ஒவ்வொரு நிறுவனத்தின் சிம்மிற்கும் ஒவ்வொரு பேசிகள்.உறங்கும் பொழுதிலும் தலையணை அருகில் இடம் பிடித்துக்கொள்கிறது.இந்த அலை பேசியின் தாக்கத்தால் தூக்கம் குறைந்து மனநலக்கேடுகளும்,குடும்பத்தில் மனவருத்தங்களும் உருவாவதை யாரும் சொல்ல அவசியமற்று நாம் கண்கூடாகப்பார்க்கிறோம்.யாருக்கும் இப்போது அமைதி,தனிமை கிடைப்பதில்லை.தொலை பேசி ஒலிக்காத தூக்கமில்லை.இதில் பெண்கள் அலைபேசி வைத்த இடம் தெரியாமல் தேட வேண்டியுள்ளது எண்று தங்கள் சேலை மடிப்பு,ரவிக்கையினுள் வைத்துக்கொள்கின்றனர்.இதனால் நெஞ்சு வலி,இதய நோய்கள் வரும் என் கின்றனர்.சாலை ஓரங்கள்,பேருந்து நிறுத்தங்கள் எங்கு பார்த்தாலும் இளசுகள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அந்த நேரம்,அவர்கள் முகத்தில் நவரசங்களும் மாறிமாறி வருவதைப் பார்த்து ஆச்சர்யமாக இருக்கும்.சொந்த விசயங்கள்,அந்தரங்கங்கள் அத்தனையையும் பின் விளைவு தெரியாது பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.இவர்கள் இப்படிப்பேசுவது பெற்றோர்களோ,உற்றோர்களோ அறியார்.அலைபேசிகள் இப்போது ஒலிகடத்துவதோடு,ஒளிகடத்தியாகவும் இருக்கிறது என்பதுதான் பெரிய வேதனை.அந்தமானில் பள்ளிக்குழந்தைகள் தனிவகுப்பிற்கு வரும்போது நிலவரம் தெரிவிக்க வசதியாகப் பெற்றோர் அவர்கள் கையில் பேசியைத்தர அதில் அவர்கள் ஆபாசப்படம் பார்க்கிறார்கள்.அதுவும் பெண்குழந்தைகள்.இதற்கு நேரடி சாட்சி என் மகன். ”அந்தப் பொண்ணுங்களப் பாத்தாலே அருவருப்பா இருக்கும்மா!” என்கிறான்.இன்று நிறையக்குழந்தைகளுக்கு பிறந்த நாள் பரிசாக அலைபேசி.நிலவழித் தொலைபேசி (Land Line) மட்டுமே இருந்த போது மனிதகுலம் இத்தனை அல்லல்களை அனுபவிக்கவில்லை.சிலருக்கு அலைபேசி இசை காதுகளுக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கிறதாம். இதுகூட ஒரு மனநோய் என்கின்றனர்.பெண்குழந்தைகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி,அறியாதவர்களின் ஆபாசப்பேச்சு என்று அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் கொடுமைகளும் நடை பெறுகின்றன.வயது வித்தியாசமின்றி அனைவரும் இப்போது "வாக் அன்ட் டாக்,டாக் அன்ட் வாக்" தான்.அலைபேசிகளுக்கு அடிமையாகிப்போனார்களோ? அறிவியல் புதுமைகள் என்றுமே இருபக்கம் கூரான கத்தி.எப்படிப்பயன் படுத்தினாலும் ஒரு நாள் தாக்கும்.நன்மைகள் அளவு, தீமைகள் இருக்கும்.

"அலைபேசி டவர்களில் இருந்தும்,அலைபேசிகளில் இருந்தும் வெளிவரும் ரேடியேஷன் காரணமாக சிட்டுக்குருவி இனம் அழிந்து வருகிறது என்பது தவறு.அலைபேசி டவர் மற்றும் அலைபேசியில் இருந்துவரும் ரேடியேஷனின் அளவு,ஒரு வாட்டுக்குக் குறைவான அளவுதான் இருக்கும். சிட்டுக்குருவிக்கும் இதற்கும் தொடர்பில்லை.கூடு கட்ட இடமின்மையும்,மரமின்மையும்,ஜங்க் ஃபுட் யுகத்தில் சாப்பிட தானியமின்மையும் தான் காரணம்" என்று எழுத்தாளரும்,பொறியாளருமான அமரர் சுஜாதா அவர்கள் அறிக்கை விடுத்தாலும் (கற்றதும்,பெற்றதும்),சிட்டுக்குருவிகளை விடுங்கள்.நமது சின்னக்குழந்தைகளைக் கவனியுங்கள். ஆங்!.. என்ன கேக்குறீங்க? உங்ககிட்ட செல் இல்லையான்னா? இருக்கு.ஆனா அவசியத்துக்கு மட்டும் பயன் படுத்தறேன்.இரவு அதற்கு விடுமுறை.

குழந்தைகள் கையில் விளையாடக்கொடுப்பதைத் தவிருங்கள்.இரவுத்தூக்கத்திற்கு இடையூறின்றி பார்த்துக்கொள்ளுங்கள்.வண்டி,வாகனங்களை ஓட்டும் போது பயன்படுத்தாதீர்கள்.குழந்தைகள் பின்விளைவுகள் அறியாதவர்கள்.குழந்தைகளின் அலைபேசியை அடிக்கடி சோதனையிடுங்கள்.அதன் தீமைகளை அன்போடு எடுத்துச்சொல்லுங்கள்.சட்டைப்பைகள்,பேண்ட் பைகளில் அலைபேசி வைப்பதைத் தவிர்த்து கைப்பைகளில் வைக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்.பெண்கள் அடிக்கடி குறுந்தொலை பேசியில் மணிக்கணக்காக உரையாடி சச்சரவுகளை வளர்த்து,மன நோய்க்கும் ஆளாகிறார்கள். அலைபேசி கையில் இருந்தால் தூரம் சுருங்குவதோடு,உலகமே நமது கையில் இருப்பது போல் இருக்கிறது என்பதை மறுத்துவிட முடியாது. ஆனாலும் அளவோடு பயன்படுத்தி,ஆரோக்கியம் காத்து, நல்ல வண்ணம் வாழ்வோமே!

1 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

100 % percent correct.. i am one of the person affected by cell phone radiation,now i am not able to use the mobile phones, even not able to hear the TV, land line phone, in speaker, nthg.. i am just living in a very calm world, not able to hear any sounds from electronic things.. for four years am searching for doctors for solution bt still i cudnt.. if any one knows abt this plz drop me a mail.. ranjanivenky25@gmail.com