சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

வெள்ளி, ஜனவரி 15, 2010

ஜல்லிக்கட்டு


     அந்தமானில் வாழும் தமிழர் பெருமக்களில் கணிசமான மக்களுக்கு தென்னை,கமுகு தோட்டங்கள், வயல்,ஆடு,மாடுகள் உண்டு.மாடுகளைப்போற்றும் மாட்டுப்பொங்கல் மிக விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள்.ஆனால் அந்தமானில், தமிழரின் வீர விளையாட்டாக,தமிழரின் அடையாளமாக அறியப்படும் மஞ்சுவிரட்டு,ஜல்லிக்கட்டு கிடையாது.


         அந்தமான் பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினர் சொல்லின் செல்வர் கம்பம் P.செல்வேந்திரன் அவர்கள் தமது சிறப்புரையில் ஜல்லிக்கட்டு பற்றி ஒரு கருத்தைப்பகிர்ந்துகொண்டார்."1977ம் ஆண்டில் மதுரையில் நடைபெற்ற அரசு பொங்கல் விழாவில் முத்தமிழ்க்காவலர் திரு.கி.ஆ.பெ.விஸ்வநாதன் அவர்கள் ஜல்லிக்கட்டு நம் தமிழர் வரலாற்றில் எப்படித் தோன்றியிருக்கும் என்று ஒரு அர்த்தம் கற்பித்த கதை ஒன்றைக்கூறினாராம்.தைத்திருநாளில் ஒரு உழவனின் இல்லம் அவனது ஒரு வருட உழைப்பின் பயனான நெல்,கரும்பு,வாழை,மஞ்சள் எல்லாம் நிறைந்திருக்க அவனது உள்ளமோ மகிழ்ச்சியால் நிறைந்திருக்க அவன் தன் மனைவியை அழைத்து 'அடியே! பார்த்தாயா? எனது ஒருவருட உழைப்பை' என்று தனது மீசையைத்தடவியபடி மெல்லிய கர்வத்துடன் கூற அந்த நேரம் கட்டுத்தறியில் கட்டப்பட்டிருந்த காளையின் கழுத்தில் ஈ கடித்ததால் அது தலை அசைக்க அதன் கழுத்தில் கட்டப்பட்டிருந்த மணி தன் நாவை அசைத்து ஒலி எழுப்ப அந்த உழவனின் மனைவி,'மாமா நீங்க இதெல்லாம் உங்க உழைப்புன்னு சொல்றீங்க.நம்ம காள மாடு இல்ல அதெல்லாம் என் உழைப்புன்னு சொல்லுது பாருங்க' என்று கூற உழவன்,'அப்புடீன்னா இந்தக்காளமாடு என்னவிட வலிமையானதுன்னு சொல்றியா? நாங்கவேன்னா மோதிப்பாக்கட்டுமா' என்று கேட்டு அப்படியே இந்த காளை பொருதும் வீர விளையாட்டு தமிழகத்தில் தொடங்கியிருக்க வேண்டும் என்றாராம்.

     அறிஞர் அண்ணா அவர்கள் மஞ்சுவிரட்டு பற்றிக்குறிப்பிடும் போது,'பெண்கள் பயப்படக்கூடாது.இந்தக்காளை மாடே இவனிடம் இந்தப்பாடு படுகிறதே.நம்மை என்ன பாடு படுத்துவானோ இவன் என்று பெண்கள் பயப்படக்கூடாது' என்றாராம்.அந்தக்காலத்தில் பெண்கள் காளை வளர்த்து அந்தக்காளையை அடக்குபவனைத்தான் திருமணம் புரிவார்கள்.அந்த அடிப்படையில் தான் வெள்ளையத்தேவன்,வெள்ளையம்மா திரைக்கதை அமைக்கப்பட்டது என்று குறிப்பிட்டார்.இன்று காளை அடக்கினால் தான் பெண் என்றால் எத்தனை பேருக்கு திருமணப்பிராப்தி என்ற போது என் கணவர் காளை வளர்க்கும் இளம்பெண்கள் இருந்தால் காளை அடக்க இளைஞர்களுக்கா பஞ்சம் என்றார்.போர்கள் மலிந்த காலத்தில் திணவெடுத்த தோள்களுக்குத் தீனியாக,உயிரைத்துச்சமாக மதித்த காலத்தில் காளை பொருதும் வீர விளையாட்டுகள் இருந்ததைப் பெருமையாகக் கூறமுடியும்.ஆனால் இன்றைய காலகட்டத்திற்கு இந்த விளையாட்டு அவசியமா? இதைப்பண்பாட்டுக்கூறு என்று சொல்வதையும்,நமது அடையாளம் என்று சொல்வதையும் தவிர்த்து மிருகவதை,மனித உயிரிழப்பைத்தடுக்கும் முகமாக,மனிதநேயத்தின் அடிப்படையில் ஜல்லிக்கட்டைத் தவிர்ப்பதே நல்லது.

1 கருத்துகள்:

துபாய் ராஜா சொன்னது…

பொங்கலோ பொங்கல்...

தமிழர் திருநாளாம் இனிய தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.