சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

திங்கள், ஜனவரி 11, 2010

என்னை பயமுறுத்தும் சென்னை மாநகர்


             சிங்காரச்சென்னையை விட்டுப்போய் கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் கழித்து மீண்டும் சென்னை விஜயம்.குழந்தையாய் நமது பார்வை வேறு.அதுவே வளர்ந்த பின் நம் பார்வை வேறு.சென்னை மாநகர் குறித்து கதைகள்,கட்டுரைகளில் வாசித்த ஒரு பிம்பம்,திரைப்படங்களில் நான் அவதானித்த ஒரு பிம்பம்,பிறரின் பேச்சுவழி எனக்குக்கிடைத்த பிம்பம் இவை எல்லம் கலந்து எனக்குள் எழுந்த பாதிப்புமாய் சென்னை விஜயம்.கணவருடன்,உலா வந்த போது,அந்த நகரின் பரபரப்பு,ஜன சந்தடி,போக்குவரத்து நெரிசல்,நாகரீகப்பெண்கள்,அலட்சியமாக வாகனங்களைக்கையாளும் பெண்கள்,கடைகள் இன்னும் இன்னும் என்னை பிரமிக்க வைத்த விசயங்கள் சென்னையில் அதிகம்.சுற்றுலாத்தளங்கள் அதைவிட ஒருபடி மேலாய்...அதன் பிறகு நான் குழந்தையுடனும் ஒன்பதாவது படித்த என் தம்பியுடனும் வந்து இறங்கிய இடம் கிண்டி.என் கணவரின் அண்ணன் வீடு கிண்டி அம்பாள் நகரில்.நாங்கள் மூன்று சக்கர வாகனம் அமர்த்தி போய்க்கொண்டிருக்க நான் கவனமாக (அங்க ரொம்ப கவனமா இருக்கனும்.இல்லையின்னா காடு மாத்திப்புடுவாய்ங்க) வழியைக்கவனித்து வரும்போது , "ஹல்லோ! என்ன இந்தப்பக்கம் போறீங்க!.சிப்பட் பக்கந்தானே போகணும்" என்றதும் ஓட்டுனர் "அம்மா! பயப்படாம வா!.நானும் புள்ளகுட்டிக்காரன்.ஒன் மாதிரித்தங்கச்சிங்க எனக்கும் உண்டு.எவனோ செய்யுற தப்புக்கு எல்லாரையும் அப்புடி நினக்காதீங்க" என்று வீட்டில் கொண்டுவந்து விட்டு வீட்டுக்கதவைத்தட்டி," அண்ணா தங்கச்சி ரொம்ப பயந்துருச்சு.பாத்துக்கப்பா" என்று விட்டுப்போனார் அந்தச்சகோதரர்.

    அதன் பிறகு சென்னை வந்த போது தனியே சொந்த,பந்தங்களை சந்திக்கப்போனாலும் பேருந்தில் சென்று நடந்து,நடந்தே செல்வது வழக்கம்.ஊரைச்சுற்றியது,பணம் மிச்சம் அதோடு மூன்றுசக்கர வாகன பயம்.2009 ல் சென்னை வந்த போது வில்லிவாக்கம் தோழியும்,குரோம்பேட்டை சொந்தமும் கண்டிப்பாக வரவேண்டுமென கட்டளையிட்ட பின் தவிர்ப்பது கூடாது என்று முடிவெடுத்தேன். கையில் இருப்பது இரண்டு நாள்.என் அக்காவும்,மைத்துனரும் ஒரு நாளை கோவில்கள்,ஆசிரமம் என்று என்னை ஓட்டித்திருப்பி வீடுகொண்டு வந்து சேர்த்தார்கள். அந்த வெம்மையும் நெரிசலும் தாங்கவில்லை.(வயசாயிடுச்சோ?)மறுநாள் காலை குறுந்தொலைபேசியில் இருப்பைச்சரிசெய்து குரோம்பேட்டை போனால் போய் இறங்கிய இடம் புரியவில்லை.மேம்பாலங்கள் இடத்தின் அமைப்பையே மாற்ற என்ன செய்யலாம் யோசனையோடு பழம் வாங்கப்போனால் பழக்கடைக்காரர் இது கிலோ நூறு,இது நூத்தி இருவது என்று ஆப்பிளையும்,மாதுளையையும் கை காட்டி விலை சொல்ல நான் நல்ல ரகம் பார்த்து விலை கேட்க அதெல்லாம் ஆப்பிள் 120/ மாதுளை 140/ என, நான் அதில் கை வைக்க,'அம்மா! இதா! நாந்தா சொல்றேன்ல? என்று அதட்ட 'இங்க பாருங்க இஷ்டமிருந்தா வியாபாரம் பண்ணுங்க.இல்லாட்டி நா வேற கடையில வாங்கிக்கிறேன்' என்று அதட்டலாய் சொல்லி நகர ஐய! ஏம்மா கோச்சுக்கிற! இங்க இதுல அதுல கை வைக்குங்க.அப்பறம் ஒண்ணுமே வாங்காதுங்க! அதான்' என்று வழிய நான் வாங்கிக்கொண்டு அவரிடமே வழி கேட்டு விளங்காது மூன்று சக்கர வாகனம் பிடித்து போனால், அந்த அடுக்குமாடி வீட்டில் பெயர்ப்பலகை இல்லாது அடையாளம் காணமுடியாது, தவித்து இறங்கி, வாகனத்தை அனுப்பிவிட்டு அலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களே வர நான் நின்ற இடம் அவர்கள் வீட்டு வாசல்.திரும்ப நான் நடந்தே நிறுத்தம் வந்து கோயம்பேடு சென்று பேருந்து மாறி வில்லிவாக்கம் சென்று இறங்கி, தோழி வீடும் கண்டுபிடித்து அளவளாவி திரும்பி வந்து கிண்டி பேருந்தில் அமர்ந்த போது, பிற்பகல் இரண்டு மணி.குறுந்தொலைபேசியை நெடுநாள் தவிர்த்து, நிர்ப்பந்தம் காரணமாகக் கையாளும் எனக்கு இப்போது தான் அதன் அருமை புரிந்தது.அலைபேசி கையில் இருந்தால் உலகமும் உறவுகளும் நம் அருகில்.சிங்காரச்சென்னையில் தட்டுத்தடுமாறாது கொண்டு சேர்த்தது அது.

            பேருந்து முழுதும் சென்னைத்தமிழ் இரைச்சலாய் வழிகிறது.கோயம் பேடு அங்காடியில் பூ வாங்கி அதைப்பேருந்திலேயே கட்டிக்கொண்டு வரும் ஆண்களும்,பெண்களும்.ஒவ்வொரு இருக்கைக்கும் ஒவ்வொருவராய் அமர்ந்து கொண்டு சப்தமாய்ப்பேசும், அவர்கள் பேச்சில் ஊர் வம்பு இருந்தது.கையில் விரைவாகப்பூக்கட்டும் லாவகம் இருந்தது.இரண்டையும் ரசித்தபடி வரும்போது அருகில் இருந்த பூக்காரப்பெண்மணி "யம்மா எந்த வூரு?" என்று கேட்க நான் ஊரைச்சொல்ல வியந்தார். என் வியப்பெல்லாம் இந்தச்சென்னை மக்கள் அத்தனை பேரும் தமிழர்களான நம்மையே "ஊருக்குப்புதுசு" என்று எப்படி இனம் காண்கிறார்கள் என்பது தான்!.ஒரு வேளை முகத்தில் வழிகிறதோ அசட்டுத்தனமும்,அச்சமும்.

0 கருத்துகள்: