சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

வியாழன், ஜனவரி 21, 2010

வெற்றியின் முகவரி


அந்தமான் தமிழர் சங்கமும்,வி.ஜி.பி உலகத்தமிழ்ச்சங்கமும் இணைந்து நடத்திய ஒன்பதாவது திருக்குறள் மாநாடு மற்றும் ஐயன் திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவும் கடந்த வருடம் நவம்பர் திங்கள் 6ம் நாள், அந்தமான் தமிழர் சங்கத்தில் மிகப்பிரம்மாண்டமான முறையில் நடந்தேறியது.அந்த விழாவிற்கு வருகை தந்திருந்த பெருமக்கள்,பேராளர்களில் ஒருவரின் வாழ்க்கை வரலாறு இன்றும் என்னை நெகிழ்த்தி விழிகளை ஈரமாக்கும்.இப்படிப்பட்ட தன்னம்பிக்கையாளர்களால் தான் உலகம் வீறுநடை போடுகிறது என்று தோன்றும்.வெள்ளை வெளேரென்ற உடையில் நடுத்தர வயது ஐயா ஒருவர் கூட்டத்தின் முன் வரிசையில் அமர்ந்திருந்தார்.தஞ்சை தமிழ்ப்பல்கலையின் மேனாள் துணை வேந்தர் மேடையில் உரை நிகழ்த்திக்கொண்டிருந்த போது அந்த ஐயாவைப்பார்த்து, "அந்தோனியைப் பார்க்கும் போதெல்லாம் மனம் நெகிழும்.முன்னேற்றத்திற்கு ஊனமோ,வயதோ ஒரு தடையல்ல என்பதற்கு வாழும் உதாரணம்" என்றார்.அப்போது அந்த வெள்ளுடை அந்தோனி ஐயா அவர்கள் எழுந்து அவைக்கு வணக்கம் செலுத்திய போது பார்த்தால் இரண்டு காலும் இழந்த மாற்றுத்திறன் கொண்டவர்.வி.ஜி.சந்தோசம் ஐயா அவர்களுடன் வந்ததால் ,' சரி.பெரிய ஆளுக உதவியிருப்பாக! குடும்பத்துல ஆதரவு குடுத்து பெரிய தொழிலதிபர் ஆயிருப்பாரு' என்று மனதில் நினைத்து மறந்து விட்டேன்.

மறுநாள் நடுவண் அமைச்சர் மாண்புமிகு D.நெப்போலியன் அவர்கள் சிறப்புரை ஆற்றும் போது,"ஒருத்தர ஒங்களுக்கு அறிமுகப்படுத்தனும்.இவரு அந்தோனி ஐயா!.தன்னுடைய சின்ன வயசுல பொழைக்க வழியில்லாம பிச்சை எடுத்து,பதினோரு வயசுல அது தப்புன்னு புரிஞ்சுகிட்டு கெடச்ச வேலையெல்லாம் செஞ்சு கொஞ்சம் கொஞ்சமா உயர்ந்து இன்னிக்கு சென்னைல சொல்லிக்கிற மாதிரியான ஒரு தொழிலதிபர் ஆயிருக்காரு" என்றதும் மொத்தக்கூட்டமும் நிசப்தமானது.சின்ன தோல்விகளுக்கெல்லாம் துவண்டுவிழும் இன்றைய மனிதர் முன் இமயமாய்த் தெரிந்தார் அவர்.தன்னம்பிக்கை,உழைப்பு,விடாமுயற்சியின் மொத்த உருவம்.அங்க அவயங்கள் சரியாக உள்ளவரே ஒவ்வொரு நாளும் சலித்து துவண்டு விழும் இந்த நாட்களில்,நடக்க முடியாத கால்களை வைத்துக்கொண்டு எப்படி இப்படி ஒரு உன்னத நிலையை அடைந்திருப்பார் என்ற எண்ணம் எழுந்துவிட்டால், வரும் சிந்தனை அலைகளில் தூக்கம் போய்,நம்மால் என்ன முடியும் என்ற சுய ஆராய்ச்சி எழுந்து விடும். அவரும் எத்தனை அவமானங்கள்,துக்கங்கள்,தோல்விகளைக்கடந்து வந்திருப்பார்.பிச்சை எடுக்கும் வறிய நிலையில் இருந்து,சிகரத்திற்கு உயர்ந்திருக்கும் இவரைப் போன்றவர்கள் போற்றுதலுக்குரியவர்கள்.நிச்சயமாய் இவர்களின் உயர்வு மாயமந்திரமன்று.உழைப்பு - தன்னலம் கருதாத, தன்னம்பிக்கையுடன் கூடிய,விடாமுயற்சியுடன் கூடிய வெறித்தனமான உழைப்புதான் காரணமாக இருந்திருக்கக் கூடும்.

உயர நினைக்கும் ஒவ்வொருவரின் மனதிலும் இவர்களைப்போன்றோரின் சுய சரிதைகள் தான் நம்பிக்கை விதைகளை விதைக்கிறது.சாதனைகள் புரிவதற்கு வறுமை,வயது,ஊனம்,தோற்றம் இப்படி எதுவுமே தடையில்லை.எத்தனை நெருக்கடிகள் தோன்றினாலும் சளைக்காத மனதிருந்தால் மட்டுமே சாதிக்க முடியும். நெருக்கடிகளிலிருந்தும், பொறுப்புகளிலிருந்தும் நழுவி ஓடாமல் உறுதிப்பாட்டுடன் எடுத்த காரியத்தைத் தொடுத்து முடிப்பவர்களுக்குத்தான் வெற்றி வசமாகிறது."வாழ்க்கைப்போராட்டத்தில் வெல்பவர்கள்,உடல் வலிமையானவர்களோ,வேகமானவர்களோ இல்லை.தன்னால் முடியும் என்று நினைப்பவர்கள் மட்டுமே! " என்ற சோம.வள்ளியப்பன் அவர்களின் இந்த வரிகளுக்கு, வாழும் உதாரணமாக வேறு யாரைக்கூறமுடியும் நண்பர்களே!.

4 கருத்துகள்:

sathishsangkavi.blogspot.com சொன்னது…

நல்ல கருத்துள்ள இடுக்கை...

Paleo God சொன்னது…

நல்ல பதிவு சகோதரி..:)

பா.ராஜாராம் சொன்னது…

அருமையான பதிவு,பகிர்வு.

தமிழ் உதயம் சொன்னது…

ஆடை இல்லாத மனிதன் மட்டுமல்ல அரை மனிதன். தன்னம்பிக்கை இல்லாதவனும் அரை மனிதனே.////////

உயர நினைக்கும் ஒவ்வொருவரின் மனதிலும் இவர்களைப்போன்றோரின் சுய சரிதைகள் தான் நம்பிக்கை விதைகளை விதைக்கிறது