சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

சனி, ஜனவரி 16, 2010

ஜாதிகள் இல்லையடி பாப்பா

சாதி இரண்டொழிய வேறில்லை - இட்டார் பெரியார்,இடாதார் இழிகுலத்தார் என்று பாடிய ஔவையும்,ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிய பாரதியும் இன்னும் எத்தனையோ சமூகசீர் திருத்த வாதிகள் படித்துப்படித்துச்சொன்ன கருத்துக்களை காற்றில் விட்டு தமிழர்களாகிய நாம் தாயை,தந்தையை விட்டு, உறவுகளை விட்டு,ஊரை விட்டு,நாட்டை விட்டு,சொத்து பத்துக்களைவிட்டு இன்னும் இன்னும் எத்தனையை விட்டுச்சென்றாலும்,தொலைத்துச்சென்றாலும் விடாமல்,தொலைக்காமல் பத்திரமாய் கூடவே எடுத்துச்செல்வது சாதியை.மதம் பெரிதா,சாதி பெரிதா? என்று பெரியார் அவர்களிடம் ஒருவர் கேட்ட போது,'சாதி தான் பெரியது என்றார். அது எப்படி? மதம் தானே பெரிசு,மதம் உலகமெல்லாம் இருக்கு,பெரிய,பெரிய கிளைகள்,கோடிக்கணக்கான நிதி,மதம் தானே பெரியது என்ற போது பெரியார் அவர்கள் தப்பா சொல்றே.நம்ம நாட்டுல சாதி தான் பெரிசு.நீ நெனைச்சா மதம் மாறமுடியும்.சாதி மாறமுடியுமா? என்றாராம்.அந்த அளவு தமிழர் வாழ்க்கையில் இரண்டறக்கலந்தது சாதி.பிறப்பு ஒருவனின் சாதியை நிர்ணயிக்கிறது.பிறகு சாதி தான் வாழ்க்கையை, உரிமையை,சலுகையை,அந்தஸ்தை நிர்ணயிக்கிறது.


அந்தமான் தீவுகளில் பள்ளியில் சேர்க்க உங்கள் சாதியைக் கேட்க மாட்டார்கள்.இங்கு பள்ளியில் மாணவர்கள் ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள்.ஒன்று பழங்குடியினர் இரண்டு அரசாங்கப்பணி நிமித்தம் தீவுகளுக்கு வந்துள்ள மத்திய அரசுப்பணியாளர்களின் வாரிசுகள்,மூன்று 1942க்கு முன் இங்கு குடியமர்ந்தவர்கள் நான்கு பத்து வருடம் தீவுகளில் தொடர்ந்து கல்வி பயின்றவர்கள்,ஐந்து பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தீவுகளில் படித்த எல்லா மாணவர்கள் என்ற பிரிவுகளின் அடிப்படையில் மேற்கல்விக்கான இட ஒதுக்கீடு செய்யப்படுகிறது.வேலை வாய்ப்புகளில் மட்டும் பழங்குடி,பிற்படுத்தப்பட்டவ்ர்கள்,பொது என்ற மூன்று பிரிவுகளில் மத்திய அரசின் ஒதுக்கீட்டுப்படி வாய்ப்பளிக்கப்படுகிறது.பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு தமிழர்களுக்கு வழங்கப்படவில்லை. அதனால் அந்தமான் தமிழர் சங்கம், தமிழருக்கும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

கலப்பு மணம் பெருகிய நிலையில் சாதிய அடிப்படையில் ஒதுக்கீடு வழங்கும் போது யாருடைய சாதி சலுகைகளை வழங்குகிறதோ அந்த சாதியைப்பின்பற்றுவார்கள் மக்கள்.ஆகவே அந்தமானில் தமிழர்களுக்கு வாழ்வியல் அடிப்படைகளையோ,மரியாதைகளையோ சாதி நிர்ணயிப்பதில்லை.அந்தமானில் ஒருவரின் கௌரவத்தை நிர்ணயிக்கும் கூறுகளாகஉழைப்பு,நடத்தை,பொருளாதாரம்,நற்குணங்கள்,பதவி,ஆகியனவாக இருக்கிறது.நிறையத்தமிழ் குழந்தைகளுக்கு தமது சாதி தெரியாது. தமது அடையாளங்களைக்காக்க வேண்டி,தற்போது தமிழர் சாதிச்சங்கங்களை உருவாக்கிக்கொண்டுள்ளார்கள்.அந்த சாதிச்சங்கங்கள் இன்று வெறுமனே ஒரு சமூகத்தைக் குறிக்கும் குறியீடாக இருக்கிறதேயொழிய,தமது சாதிமக்களை,மாணவர்களை உயர்த்தும்,ஊக்கப்படுத்தும் நோக்குடன் செயல் படுகிறதேயொழிய பிரிவினை வாதங்களிலோ,உயர்வு தாழ்வு குறிக்கும் நோக்கிலோ இது வரை இல்லை.இங்கு குழந்தைகளுக்கு ஒன்று பட அவர்கள் அறிந்தது தமிழன் என்ற ஒரு இனத்தைத்தான்.பெரியவர்களும் அப்படித்தான்.பெற்றோர் ஏற்பாடு செய்யும் திருமணங்களில் மட்டும் சாதி கவனிக்கப்படுகிறது.அரசியல் கட்சிகளைப்பொறுத்தவரையில் இந்தியாவின் இரு பெரும் கட்சிகளான காங்கிரசும்,பாரதீய ஜனதா கட்சியும் என்பதால் தமிழ்நாட்டைப் போல இனவெறி எழுப்பும் வாய்ப்பு அரசியல் வாதிகளுக்குக் கிடைக்கவில்லை.இனி வருங்காலமும் சாதி அறியாத ஒரு ஒன்றியப்பகுதியாக இந்தத் தீவுகள் அறியப்படவேண்டுமென்பதே எங்களைப் போன்றோரின் அவாவும்,பிரார்த்தனையும்.

0 கருத்துகள்: