சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

ஞாயிறு, ஜனவரி 17, 2010

அம்மா,அப்பா

சொல்லத்தான் நினைக்கிறேன்.
நீயும் நானும்
அருகிலிருந்தும்
மனங்களுக்கான இடைவெளிகள் நீண்டு
அந்நியத்தனம்
ஒரு
புல்லாய் முளைத்து
கள்ளியாய் முள் கொண்டு
விருட்சமாய் வேரோடி
உனக்கு என் தேவையும்
எனக்கு உன் தேவையும் அற்று
நிர்ப்பந்தங்களுக்காய் கூடி இருப்பதை
சொல்லத்தான் நினைக்கிறேன்.

வீடாய் இருந்த இடம்
வெறும் சுவர்களாய் இப்போது
பொது வெளிகளில்
உன் உடமையாய் நானும்
என் உடமையாய் நீயும்
உன்னைப்பற்றிய விசாரணைகளை
ஒற்றைப்புன்னகையில் தவிர்க்க முயல
வெட்கம் என்று அது திரிக்கப்பட
சொல்லத்தான் நினைக்கிறேன்.

காதல்,கல்யாணம்,வாழ்க்கை
கசப்பான அனுபவங்களாய்,
கால நீட்டிப்பு அவசியமற்று
உன்னை விட்டு
கடந்து போய்விட எண்ணும் போதுகளில்
பொய்யாய்க்கூட
புன்னகைக்க முடியாத போதுகளில்
சொல்ல நினைத்த போது
முந்தானை பற்றி இழுத்த பிஞ்சுக்கரங்கள்
மழலையில் மொழிகிறது!
"பாப்பா அப்பா செல்லம்,அம்மா செல்லம்"

0 கருத்துகள்: