சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

வியாழன், ஜனவரி 21, 2010

இளைய பாரதம்.

நண்பா!
உடமைகளில் வேறுபாடுகள் இருப்பினும்
உனக்கும் எனக்கும் ஒரே பயணம் தான்
கருவறை தொடங்கி கல்லறை வரை
இடையில் கிடைக்கும் வாய்ப்புகளில் உறங்குகிறது,
நமது சிகரங்களும், பள்ளங்களும்.
உயர்வும்
தாழ்வும் பார்வைகளின் மாயம்
நாணயத்தின் இரு பக்கம் போல

இப்போதெல்லாம்
யாரும் யாரின்
வீழ்ச்சிகளுக்கும் வருந்துவதில்லை.
யாரும் யாருக்காகவும் அழுவதுமில்லை.
ஞானிகளாகி விட்டனரோ?
இல்லை நண்பா! நேரமில்லை.

உண்டு,உயிர்க்க
கண்டு,களிக்க
பேசி,சிரிக்க யாருக்கும் நேரமில்லை
மனிதனுக்கு மனிதன்
உடலால் அருகில்.
மனதால் வெளிகளில்.
இடைவெளிகள் நீள்கிறது

அப்பாவும் அம்மாவுமே
அந்நியமாகிய குழந்தைகள்.
பரிசுகளின் பரிமாற்றங்களில்
பல் தெரிய நகை செய்யும் காதலிகள்.
முகமூடி மனிதர்களின்
முகத்திரை அகற்றி
உள்முகம் பார்த்து மறுகும் மனது
இயற்கை உலகை
அடக்கி அரசாள்கிறது செயற்கை.

வா! நண்பா!
பயணம் தொடர்வோம்
பயம் தவிர்
அவலங்களைச்சிந்திப்பது
சிகரம் நோக்கிய நம் பயணத்தின் தடைகள்.
தாண்டிப்போ!
தகர்த்தெறி!
நமது வாழ்க்கையின் இலக்கு இவைகளில் இல்லை
அதனால் தாண்டிப்போ!
இறுக்கங்கள் அகற்றி எல்லைகள் தாண்டு.
துணிந்தவனுக்குத்தான் சமுத்திரம் முழங்கால் வரையிலும்.
சிறகை விரித்தவனுக்குத்தான் வானமும் விரியும்.

பழமையின் முத்தெடுத்து
புதுமையில் கோர்த்து
பண்புகளோடு நடையிட
பாரத தேசத்தினரால் மட்டுமே முடியும்.
வானமே எல்லை என்ற கோடு
இன்று பிரபஞ்சங்களோடு.
அதனால்
சிந்தனைகளின் எல்லைகளை விரித்து
சாதனைச்சிகரங்களை எட்டு.
நீரின் உயரம் தாமரையின் உயரம் போல்
எண்ணத்தின் உயரம் எட்ட
எண்ணங்களை உயர்த்து.
பிறகென்ன
வெற்றி உன் முகவரி விசாரிக்கும்.