சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

வெள்ளி, ஜனவரி 29, 2010

குழந்தைகளின் பாதுகாப்பு


கசியும் மௌனம் வலைப்பூவின் ஆசிரியர் திரு.ஈரோடு கதிர் அவர்களின் "குழந்தைகளைப் பாதுகாப்போம்" கட்டுரை இன்றைய சமுதாய அவலத்தை எடுத்துரைக்கிறது.ஒவ்வொருவரின் வாழ்க்கையின் நம்பிக்கை ஆதாரம்,உலகம்,எதிர்காலம் குழந்தைகள் தான். இன்று இரு பாலரும் பணிக்குச்செல்லும் கட்டாயமிருப்பதால் குழந்தைகள் தனிமையில் விடப்படுகிறார்கள்.உலகமறியாப் பச்சிளம் மொட்டுகளை சீரழிக்கும் இந்தக்கொடுமைகள் தவிர்க்கப்பட வேண்டுமென்றால் குழந்தைகளுக்கு சரியான பாதுகாப்பைப் பெற்றோர் தரவேண்டும்.குழந்தைகள் ஓரளவு வளரும் வரை,வெளியுலகம் புரிந்து,விழிப்புணர்வு பெறும் வரை பெற்றோர் தங்கள் நேரடிக்கண்காணிப்பில் வைத்திருப்பது அவசியம்.முதலில் பெற்றோர்களுக்குத்தான் குழந்தைகள் குறித்த விழிப்புணர்வு வேண்டும்.


அந்தமானில் இதேபோல் ஒரு சம்பவம்.ஆந்திரப் பெண்மணி தன் தம்பியிடம் விட்டுச்சென்ற மூன்று வயதுக்குழந்தைக்கு நடந்த கொடுமை. அந்த நேரத்தில் என் குழந்தைகளின் பள்ளியில் ஆசிரியர்கள்,பெற்றோர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்து, அந்த சந்திப்பில் குழந்தைகள் நலம் மற்றும் மனநல மருத்துவர் ஒருவரையும் அழைத்திருந்தார்கள்.அவர் கூறிய முதல் வாக்கியம்,"குழந்தைகளுக்கு நடக்கும் கொடுமைகள் பாலியல் மற்றும் கடத்தல் ஆகியவை பெரும்பாலும் உங்கள் உறவு,நட்பு வட்டாரங்களால் தான் அரங்கேறுகிறது என்பதை உணருங்கள்.குழந்தைகளை உங்கள் வீட்டு வேலைக்காரர்கள்,வாகன ஓட்டுனர்கள் சாதரணமாகக் கூடத் தொடுவதை அனுமதிக்காதீர்கள்.அக்கம்,பக்கம்,உறவு,நட்பு வீடுகளுக்குக் குழந்தைகள் போக மறுத்து அடம்பிடித்தால் அவர்களைக் கட்டாயப்படுத்தாமல்,அதே நேரம் பதட்டமில்லாமல் அன்பாக விசாரித்து உண்மையறிந்து சரியான நடவடிக்கை எடுங்கள்.குழந்தைகள் மனம் காயப்படாமல் கவனம்.ஏனென்றால் இது போல் பாதிக்கப்படும் குழந்தைகள் பின்நாட்களில் திருமண வாழ்க்கையில் வெறுப்படைகிறார்கள்.உங்கள் குழந்தைகளுக்கு நல்ல தொடுகை,கெட்ட தொடுகை பற்றிய விழிப்புணர்வைக் கற்றுக்கொடுங்கள்.பெற்றோர் குழந்தைகளை அடுத்தவரை நம்பி விட்டுச்செல்வதோ,அடுத்தவர் வீடுகளில் தங்க அனுமதிப்பதையோ கூடிய வரை தவிருங்கள். குழந்தையின் பெற்றொரைத்தவிர வேறு யாரும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை." என்றார்.

இங்கு ராணுவத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு,குடியிருப்புகள் போதிய அளவு இல்லாமையால் ஒரு குடியிருப்பை இரு குடும்பத்தினர் பகிர்ந்து கொள்ளும் சிக்கல் இருக்கிறது.இது பெண்குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது.அப்படிப்பாதிக்கப்பட்ட பெண்குழந்தைகள் கல்வியில் பின் தங்கியிருப்பது,எதிலும் ஈடுபடாது சோர்ந்த மனநிலையில் இருப்பது,எப்போதும் ஒரு பய உணர்வு என்றிருக்கக்கண்ட ஆசிரியைகள் பலர் அந்தக்குழந்தைகளுடன் பேசி,அவர்களின் பெற்றோர்களை வரச்சொல்லி அவர்களுக்கு விழிப்புணர்வு தந்தனர்.குழந்தைகள் மீதான வன்முறை எதுவாக இருந்தாலும் அது பெற்றோரின் விழிப்புணர்வுக்குறைவாலும்,கவனக்குறைவாலும் தான் நடக்கிறது.இன்னொன்று குழந்தைகளுடன் நட்புறவோடு பெற்றோர்கள் இருக்க வேண்டும்.எந்தப்பிரச்சினையாக இருந்தாலும் நம்முடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு சகஜ மனநிலையை,உரிமையைக் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.

மனநல மருத்துவர்கள் கூற்றுப்படி,இன்று 90% பெண்குழந்தைகளுக்கு ஏதோ ஒரு வழியில் பாலியல் வன்முறை நிகழ்கிறது.இதற்குக் காரணம் சமூகத்தில் தனிமனித ஒழுக்கம் சீர்கேடடைந்துள்ளது.ஒவ்வொருவரும் போதிய விழிப்புணர்வோடும்,நமக்கென்ன என்ற மனநிலையற்று ஒற்றுமையாய்க் குரல் கொடுப்பதும்,வெளியில் தெரிந்தால் வெட்கம் என்று மூடிமறைக்காது பதிலடி கொடுப்பதும் தான்,இது போன்ற குற்றங்கள் மறுபடி நடக்காமலிருக்க வழிகள்.அதே போல் பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்லா வகையிலும் ஆதரவும்,உதவியும் மற்ற அனைவரும் வழங்குவதால் குற்றவாளிகள் பயந்து குற்றங்களைக் கைவிடும் வழியுண்டு. யாருக்கோ நடக்கிறது நமக்கென்ன என்றிருந்தால், அதே குற்றங்கள் நம் வீட்டிற்கு வர அதிக நேரம் பிடிக்காது என்றுணர்ந்து,ஒற்றுமையாய்க் குரல் கொடுப்போம். அவலங்களற்ற சமுதாயம் உருவாக முயற்சி செய்வோம்.

3 கருத்துகள்:

சந்தனமுல்லை சொன்னது…

/பெரும்பாலும் உங்கள் உறவு,நட்பு வட்டாரங்களால் தான் அரங்கேறுகிறது /

இது என்னவோ உண்மைதாங்க.
நீங்க சொல்லியிருக்கும் கருத்துகளை ஆமோதிக்கிறேன்.

Paleo God சொன்னது…

மிக நல்ல பதிவு சகோதரி.. இதைப்பற்றி விரிவாக சகோதரி வித்யா (vidoosh) 5 பாகமாக பதிவிட்டிருக்கிறார்கள்.

துபாய் ராஜா சொன்னது…

எல்லோரும் யோசித்து செயல்பட வேண்டிய கருத்து.