சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

திங்கள், ஜனவரி 18, 2010

என் வலையுலகப் பயணம்

மகளின் படிப்பிற்காக கணினி வாங்கி இணைய இணைப்பும் பெற்று ஆனந்த விகடனில் சொல்லப்படும் வலைப்பக்கங்களை படிப்பது என்று சொல்வதை விட மேய்வது வழக்கம்.ஒரு நாள் திடீரென்று நாமும் ஒரு வலைப்பக்கம் தொடங்கினால்... உடனே செயல்பட்டு அந்தமான் தமிழ்க்கனவுகள் என்ற பெயரில் வலைதொடங்கி சில கவிதைகளை உள்ளிட்டு அத்தோடு விட்டுவிட்டேன்.கடந்த நவம்பர் மாதம் தமிழர் சங்கத்தில் நடைபெற்ற 9 வது திருக்குறள் மாநாட்டிற்கு வலைஞர் முனைவர் மு.இளங்கோவன் ஐயா அவர்கள் வருகை தந்திருந்தார்கள்.அவரைப்பற்றி எதுவும் தெரியாது.நாங்கள் வானொலியில் இருந்து நிகழ்ச்சி ஒலிப்பதிவிற்கு சென்றிருந்தோம்.முனைவர் ஐயா மடிக்கணினியை வைத்து வலையில் நேரடிப் பதிவு செய்து கொண்டிருந்தார்.இந்தச்செய்தியை மேடையில் உரையாற்றிக்கொண்டிருந்த தஞ்சை தமிழ்ப்பல்கலையின் மேனாள் துணை வேந்தர் திரு.ஔவை நடராசன் ஐயா அவர்கள் கூற மனதில் குறித்துக்கொண்டேன்.நிகழ்ச்சி முடிந்து போகும் போது முனைவர் மு.இ ஐயா அவர்கள் அம்மா! நீங்க ரேடியோவிலர்ந்து வந்துருக்கீங்களா? என்றதும் நான் சட்டென சார்! நீங்க வலை எழுதுறீங்களா?,நா ஒன்னு எழுதுறேன் சார்.அதுல கொஞ்சம் எனக்கு உதவ முடியாமாங்க சார் என்றதும் புன்னகையுடன்,ஆமாம்மா! நான் கண்டிப்பா உதவுறேன்.இது நா எழுதுன புத்தகம்.படிச்சுப்பாருங்க.உங்களுக்கு உதவும் என்று சொல்லிவிட்டுப் போக எனக்கு அப்போது படிக்க நேரமற்று மறுநாள் ஒலிப்பதிவிற்குப் போனபோதும் ஐயா அவர்களுடன் உரையாட முடியவில்லை.

பிறகு இணையம் கற்போம் நூலை வாசிக்க ஆரம்பிக்கும் முன்னரே பொறுமையற்று அவரது வலைப்பக்கம் படித்து ஐயா அவர்களுடன் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு உதவி பெற ஆரம்பித்தேன்.அந்தமான் தீவிலேயே முதன் முதலில் தமிழில் வலைப்பூ ஆரம்பித்ததால் வலைப்பக்கத்தின் பெயரை அந்தமான் தமிழோசை என்று பெயர்மாற்றம் செய்தேன்.கட்டுரை குறித்த வழிகாட்டுதலில் ஆரம்பித்து,தமிழ் மணம் அறிமுகம்,ஐயா அவர்களின் நண்பர்களுக்கு என் வலையை அறிமுகம் செய்து அவர்கள் பலரும் கருத்துரையும்,பாராட்டுதலும் வழங்கியது,முக்கியமான வலைப்பக்கங்களை அறிமுகம் செய்தது, மின்னஞ்சல் அரட்டையில் தமிழில் தட்டச்சு செய்வது வரை வலையுலகம் குறித்து இன்று வரையிலும் வழிகாட்டும் முனைவர் மு.இளங்கோ ஐயா அவர்களின் உதவிக்கு நன்றி என்ற ஒற்றை வார்த்தை போதாது.

தீவிரமாக வலையில் எழுத ஆரம்பித்தேன்.ஒரு கருத்துரை வந்தாலும் போதும்.மனம் துள்ளும்.நாள் செல்லச்செல்ல அட! நமது எழுத்தும் வலையுலகில் அங்கீகாரம் பெறுகிறதே! என்று மகிழ்ச்சியடைந்தேன்.கணினி முன் உட்கார்ந்துவிட்டால் சூழல் மறந்தேன்.ஒரு நாள் அடுப்பில் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வைத்து வலையில் ஆழ்ந்து,தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த என்னவர் அடுப்படியில் வெளிச்சம் தெரிய போய்பார்த்துவிட்டு அலற ச்சூ சத்தம் போடுறதப்பாரு சலித்துப்போய் பார்த்தால் பாத்திரத்துடன் எரிய அந்த சூடு தாங்காமல் பக்கத்தில் பலகையில் வைத்திருந்த பிளாஸ்டிக் கொள்கலன் கள் அனைத்தும் வடிவம் மாறி பறங்கி,பூசணியாக மாறியிருந்தது. நீதான் எதாயிருந்தாலும் மறந்திருவியே! அப்பறம் அடுப்புல வச்சிட்டு இங்க என்ன பண்ற.அடுப்புல அஜாக்கிரதையா இருக்காத என்று சொன்ன நாள் முதல் சமையல் முடித்துவிட்டு வலைப்பக்கம் வருவேன்.வீட்டில்,வெளியில்,உறவுகளுடன் பேசியில் எது பேசினாலும் அது வலைபற்றியதாக மாறிப்போனது.

என் கணவர் அதிக விழிப்புணர்வு உள்ளவர்.பேச்சை ஆரம்பித்தால் "இரு! யாரோ வர்றாங்க போல நாய் கொலைக்குது" நகர்ந்துவிடுவார்.மகனிடம் டேய்! இங்க பாரேன்! யு.எஸ் லர்ந்து மெயில் வந்திருக்கு என்றால் "அம்மா! என் ஃபுயூச்சரோட வெளையாடாதீங்க இந்த வருசம் எனக்கு போர்ட் (10ம் வகுப்பு) மார்க்கு குறைஞ்சா என்ன கேக்கக்கூடாது ஆமா! ஒருத்தரும் தெளிவா இருந்துரக்கூடாது". "ஐயா சாமி போப்பா.போய் படி.டியூசனுக்கே ஒரு தொகை கட்டிக்கிடக்கு" என்று விடுவேன்.இப்போதெல்லாம் வீட்டுக்கு வரும் நண்பர்கள் உணவு வேளையின் போது,'என்ன சாப்பாடு சிம்பிளா இருக்கு.செட்டி நாட்டு சமயல் அசத்துவீங்க.இப்ப டயட்ல இருக்கீங்களா' என்றால் இல்ல அவங்க ப்ளாக்ல இருக்காங்க! என்பார் என்னவர்.வந்தவர் ப்ளாகா? என்று முழிக்க என் கணவர் கலவரத்துடன் இந்தா! தண்ணியக்குடி.இதுக்குத்தான் நாங்க சாப்பிடும் போது பேசமாட்டோம்.புரை தலைக்கேறிரும் என்று மௌனமாக சாப்பிட வேறு வழி நான் மௌனமாகிவிடுவேன்.போங்க பெரீய்ய.. என்று விட்டு தமிழ்நாட்டில் படிக்கும் மகளுக்கு என் வலை பற்றி சொல்லி பார்க்கச்சொன்னதும் சந்தோசமாக ஒரு கும்பலையே கூட்டிகொண்டு போய்,அம்மா! நா ப்ரௌசிங் சென்டர்ல இருக்கேன் URL சொல்லுங்க என்று கேட்டு விட்டு ஐந்தே நிமிடத்தில் அம்மா பாத்துட்டேன் சூப்பர் என்றாள்.முழுசா படிச்சுட்டு சொல்லும்மா என்றால் அம்மா ஒன் அவருக்கு 15 ருபீஸ். அதோட என்னோட தமிள் நாலெஜ் உங்களுக்கு தெரியும்.சுட்டிக்கு(விடுமுறைக்கு) வீட்டுக்கு வருவேன்ல.அப்ப ஃபுல்லா படிக்கிறேன்.பைம்மா! டேக் கேர்.சீ யூ என்றுவிட்டு பதில் எதிர்பாராமல் துண்டித்துவிடுவாள்.இப்படிப் பயணிக்கிறது என் வலைப்பயணம்.

போங்க! அப்பூ! எங்க பக்கத்தையும் பத்துப்பேரு படிக்கிறாகப்பு.(கூகுள் அனாலிடிக்ஸ் உபயம்) தெரியுமில்ல.இப்புடி யாராவது குடும்பத்தாரால,உறவுகளால,நண்பர்களால கைவிடப்பட்டவுக இருக்கீகளா?

ஆனால் தமிழ்மணத்தோட உதவியினால ஒரு தமிழ் வலையுலகம் எனக்குக்கிடச்சிருக்கு. தெனமும் முனைவர் மு.இளங்கோ அவர்கள்,ரத்தினப்புகழேந்தி அவர்கள்,பலா பட்டறை,பா.ரா.பக்கம்,கவிஞர் கவிமதி,குட்டி ரேவதி,தேனம்மை,சித்ரா,அண்ணன் இஸ்மத்,ஜீவா,ராமலெக்ஷ்மி,முத்துச்சரம்,கலகலப்ரியா,இன்னும் நெறைய.... இவுங்கள எல்லாரையும் ஒரு ரவுண்டு பாத்துட்டு தூங்குறது வழக்கங்க.இல்லையின்னா இப்பல்லாம் தூக்கம் வரமாட்டேங்குது.


2 கருத்துகள்:

Thekkikattan|தெகா சொன்னது…

வீட்டில பயந்து மிரண்டு ஓடுறதுக்கெல்லாம் அசந்துடாதீங்க, நாங்க இருக்கோம் படிக்க... :)

உங்க பட்டியல் ரொம்ப சிறியதாக இருக்கிறதே... வாசிப்பு இன்னும் பரந்து விரிய வாழ்த்துக்கள்!

Paleo God சொன்னது…

அட பெரிய தலைங்க பட்டியல்ல நானுமா..?? ரொம்ப சந்தோஷம்.. அப்படியே தமிலிஷ் லயும் இணைஞ்சிடுங்க போதும்...::)